பார்வை பிரச்னை: அறிகுறிகள் எவை?

Eye Trouble: 7 Signs You Need To Get Glasses Right Now!

by SAM ASIR, Jun 11, 2019, 18:53 PM IST

மான் போல் மருண்ட பார்வை, மீன் போன்ற கண்கள் இவையெல்லாம் பார்க்கும் விதத்தை, கண்களின் அமைப்பை வர்ணிக்கக் கூடிய வார்த்தைகள். இவற்றை விட பார்வை திறனே முக்கியம். பார்வை திறன் வயதைப் பொறுத்து மாறக்கூடியது. தொழில்நுட்ப வசதிகள் அதிகரித்திருக்கும் இக்காலகட்டத்தில் தொலைக்காட்சி, ஸ்மார்ட்போன், கணினி இவற்றை அதிகமாக பார்ப்பதாலும் கண் பார்வை பாதிப்புறக்கூடும். கீழ்க்காணும் அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் கண் மருத்துவரை அணுகுங்கள்.

கண்களை இடுக்கி பார்த்தல்

ஒரு நாளில் எத்தனை முறை நீங்கள் கண்களை இடுக்கிப் பொருள்களை பார்க்கிறீர்கள் என்று கவனியுங்கள். எதையாவது பார்க்கும்போது கண்களை இடுக்கினால், தெளிவாக பார்ப்பதற்கு கண்கள் முயற்சி செய்கின்றன என்று புரிந்து கொள்ளலாம். அனைவருமே சில தருணங்களில் கண்களை இடுக்கிப் பார்ப்பர். ஆனால், அடிக்கடி கண்களை இடுக்கிப் பார்த்தால் பார்வையில் குறைபாடு உள்ளது என்று தெரிந்துகொள்ளலாம். பார்வை குறைபாட்டின் மத்தியில் தெளிவாக பார்ப்பதற்காககே கண்களை இடுக்கி உற்றுப் பார்க்கிறோம்.

அடிக்கடி வரும் தலைவலி:

பார்க்கும்போது கண் தசைகள் சிரமப்பட்டால் தலைவலி வரும். கண்ணிலுள்ள லென்ஸும் கார்னியா என்ற பகுதியும் பொருள்கள் மீது பார்வையை குவிக்க உதவுகின்றன. இந்த செயல்பாட்டில் குறைபாடு நேரும்போது கண்களை இடுக்கிப் பார்க்கும் அவசியம் மற்றும் தலைவலி ஆகியவை ஏற்படுகின்றன.

மங்கலான பார்வை:

மூன்று முதல் நான்கு அடி தொலைவில் உள்ள பொருள்களை கவனிக்க தவறுதல் பார்வை குறைபாட்டின் அறிகுறியாகும். தெருவில் சென்று கொண்டிருக்கும்போது தொலைவு காரணமாக சில பொருள்களை தெளிவாக அடையாளங்காண முடியாததை கொண்டு பார்வை மங்கலாகிவிட்டது என்பதை புரிந்து கொள்ளலாம். உடனடியாக கண் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளவேண்டிய நிலை இது.

இரவில் குறையும் பார்வை

இருட்டில் பார்ப்பதற்கு கண்கள் சிரமப்பட்டால், இரவு நேரத்தில் பொருள்கள் சரியாக தெரியாமல் இருந்தால் கண் புரையின் அறிகுறியாகும். சில மருந்துகளை தொடர்ந்து எடுத்துக்கொள்வதன் பக்க விளைவாகவும் இது இருக்கக்கூடும். இரவில் பார்க்க முடியாமைக்கு என்ன காரணம் என்பதை கண் மருத்துவர் பரிசோதித்து கண்டுபிடிப்பார்.

கண்களில் அசதி:

அரைமணி நேரம் புத்தகம் வாசித்த பிறகு, கணினி அல்லது தொலைக்காட்சி திரைகளை பார்த்தபிறகு கண்கள் எப்படி இருக்கின்றன என கவனித்துப் பாருங்கள். கண்களில் வலி அல்லது சோர்வு ஏற்பட்டால், புத்தகம் வாசிக்கும்போது, தொலைக்காட்சி பார்க்கும்போது குறித்த இடைவெளி கொடுங்கள். நிறைய நீர் அருந்துவதும் கண் அசதியை போக்கும்.

கண்களுக்குள் அழுத்தம்

கண்களின் பின்பக்கம் அழுத்தத்தை உணர முடிந்தால் குளூக்கோமா என்ற கண் நோய் இருக்கக்கூடும். இது பார்வையை பறிக்கக்கூடியது என்பதால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறவேண்டும்.

கண்களை கசக்குதல்:

தெளிவான பார்வைக்காக அடிக்கடி கண்களை கசக்கிக்கொள்கிறீர்களா? அடிக்கடி கண்களை கசக்கிக்கொள்பவர்கள், கண்களில் ஏற்படும் அசதியினால் அல்லது பார்வை குறைபாட்டினால் அப்படி செய்ய நேர்கிறது. கண் மருத்துவர் இப்பிரச்னைக்கான சிகிச்சையை அளிப்பார்.

கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பதுபோல பார்வை குறைந்தபிறகு சிகிச்சை பெற்று பலனில்லை. மேற்கூறப்பட்டுள்ள அறிகுறிகள் இருந்தால் உரிய பயிற்சி பெற்ற கண் மருத்துவரின் ஆலோசனை பெற்றுக்கொள்ளுங்கள்.

You'r reading பார்வை பிரச்னை: அறிகுறிகள் எவை? Originally posted on The Subeditor Tamil

More Lifestyle News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை