கோபமாக இருக்கும்போது பேசாதீர்கள்

Control Anger - Before It Overpowers You!

by SAM ASIR, Jun 12, 2019, 19:35 PM IST

'கோபம்' - எல்லாரிடமும் இருக்கும் ஒரு குணம். கோபம் வரும்போது எப்படி நடந்துகொள்கிறோம் என்பதே முக்கியம். 'கோபம் இருக்கும் இடத்தில்தான் குணம் இருக்கும்' என்று ஒரு கூற்று உண்டு. கண்டிப்பதற்காக, திருத்துவதற்காக, உரிமை இருப்பதால் என்று கோபத்தை நியாயப்படுத்துவதற்கு பல காரணங்கள் கூறப்படுவதும் உண்டு.

தனி நபர்களுக்கேற்ப, சூழ்நிலைகளுக்கேற்ப கோபத்தின் அளவும் மாறுபடுகிறது. கோபத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் அது மனஅழுத்தத்தை உருவாக்கும்; உறவு முறியக்கூடிய சந்தர்ப்பமும் வரக்கூடும்.

'நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள்' என்று கிறிஸ்தவர்களின் புனித நூலான வேதாகமம் கூறுகிறது. ஆம், கோபத்தை நாம் சரியாக கையாளாவிட்டால் அது பாவமான காரியத்தை செய்ய வைத்துவிடும். கோபத்தை கையாளுவது எப்படி?

பேசும்முன்னர் யோசியுங்கள்

'பேசிய வார்த்தைகளை திரும்ப எடுக்க முடியாது' என்பர். நாம் அநேகமுறை சில வார்த்தைகளை பேசிவிட்டு, பின்னர் ஏன் அப்படி பேசினோம் என்று வருத்தப்படுகிறோம். அநேகமாக எல்லோருமே ஏதாவது ஒரு தருணத்தில் இந்தக்கட்டத்தை கடந்துதான் வந்திருப்பார்கள். நீங்கள் கோபமாக இருக்கும்போது எதையாவது பேசி வைக்காதீர்கள். கோபத்தில் பேசும் வார்த்தைகள் ஒருபோதும் சரியானவையாக இருக்காது. நேரம் எடுத்து, நிதானமாக யோசித்த பின்னரே பேசுங்கள்.

காரணத்தை விளக்குங்கள்

கோபமாக இருக்கும்போது பேசக்கூடாது என்பது முக்கியமோ அதேபோன்றதுதான் நிதானமாகிய பின்னர் விளக்கவேண்டியதும்! கோபம் தணிந்து நீங்கள் நிதானமான பின்னர், சூழ்நிலை சாதகமாக இருக்கும்போது உங்களுக்கு நெருடலாக இருக்கும் காரியங்களை பற்றி பேசுங்கள். அப்போது யாரையும் காயப்படுத்திவிடாமல் உங்கள் தரப்பை விளக்க இயலும்.

உடற்பயிற்சி செய்யுங்கள்

மனஅழுத்தத்தை மாற்றுவதற்கு நல்ல வழி, உடற்பயிற்சி செய்வதாகும். காலையில் ஜாகிங் செல்வது இல்லையெனில் மூச்சுப் பயிற்சி செய்தல் போன்ற ஏதாவது ஒரு பயிற்சியை தொடர்ந்து தினமும் செய்துவாருங்கள். இது உங்கள் 'கோபக்காரன்' பட்டத்தை மாற்றுவதற்கு உதவும்.

காரணியை கண்டறியுங்கள்

உங்களை கோபப்படுத்துவற்றை குறித்து மனதுக்குள் யோசித்துக் கொண்டிருக்காமல், உண்மையில் எது காரணமாக அமைகிறது என்பதை நிதானமாக கண்டறியுங்கள். கோபப்படுவதால் எதையும் சாதிக்க முடியாது என்பதை புரிந்துகொள்ளுங்கள். எந்த தருணம் அல்லது எந்த சொல், எந்த சூழ்நிலை உங்களை கோபப்படுத்துகிறது என்பதை புரிந்துகொண்டு அவற்றை தவிர்த்துவிடுங்கள்.

வைராக்கியம் கொள்ளாதீர்கள்

யார்மேலும் வைராக்கியத்தை வைத்துக்கொண்டிருக்கவேண்டாம். எதிர்மறை எண்ணங்கள் உங்களுக்குள் எதிர்மறை விளைவுகளை உருவாக்கும். இதனால் முதலாவது பாதிப்படைவது உங்கள் உடல்நலம்தான். மற்றவர்களை மன்னிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். மன்னிப்பதால் உறவுகள் ஆரோக்கியமாக இருப்பதோடு, மனஅழுத்தம் மற்றும் எதிர்மறை உணர்வு இல்லாமல் நிம்மதியாகவும் இருக்க முடியும்.

ரிலாக்ஸ் ப்ளீஸ்

கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டீர்களா? மனதை ஆற்றுவதற்கான சில யுக்திகளை கடைப்பிடியுங்கள். "நிதானம்..." "டேக் இட் ஈஸி" "அமைதியாகு" என்று ஏதாவது ஒன்றை தொடர்ந்து உங்களுக்குள் சொல்லிக்கொண்டிருங்கள். பிரச்னை சூடாகி, சூழ்நிலை தகித்துக்கொண்டிருந்தாலும் இதுபோன்ற யுக்திகளை பயன்படுத்தி கோபமுறுவதிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

அகன்று விடுங்கள்

'உங்கள் மனைவிமேல் கோபம் வந்தால் என்ன செய்வீர்கள்?' இருபத்தைந்தாவது திருமண ஆண்டை கொண்டாடிய கணவரிடம் ஒருவர் கேட்டார். அதற்கு கணவர், 'சட்டையை போட்டுக்கொண்டு வீட்டை விட்டு வெளியே போய்விடுவேன்' என்று சொன்னாராம். ஆம், கோபம் வரும்போது சம்பவ இடத்திலிருந்து அகன்று விடுவது கோபப்படுவதை தடுத்துவிடும். கோபம் வரக்கூடிய சூழலில் இசை கேட்கலாம்; மிகவும் பிடித்த ஏதாவது ஒரு பண்டத்தை தின்னலாம்; விருப்பமான பொழுதுபோக்கில் ஈடுபடலாம்.
கோபத்தை தவிர்க்க இத்தனை வழிகள் இருக்கும்போது, ஏன் போய் கோபப்பட்டுக் கொண்டு! ப்ளீஸ், இனி கோபப்படாதீர்கள்!

You'r reading கோபமாக இருக்கும்போது பேசாதீர்கள் Originally posted on The Subeditor Tamil

More Lifestyle News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை