எதிர்காலத்தில் ஏற்றம் பெற ஏழு வழிகள்

7 thing to keep in mind while planning your career

by SAM ASIR, Jun 25, 2019, 18:30 PM IST

'அடுத்த ஐந்து வருஷத்தில் நீ என்னவாக இருப்பாய்?' 
'இருபது வருஷம் கழித்து என்ன பதவியில் இருப்பாய்?'

எதிர்காலம் குறித்து இப்படியெல்லாம் கேள்விகேட்கப்படுவது வழக்கமான ஒன்றுதான். பெற்றோரோ, நேர்முக தேர்வில் தேர்வாளரோ இப்படி கேட்கலாம்.
இவை எல்லாமே கடந்த நூற்றாண்டுக்காக கேள்விகள்!

நவீன தொழில்முறை வாழ்க்கையில் இப்போது நீங்கள் பெற்றிருக்கும் திறன்களில் 50 விழுக்காடு, ஐந்தே ஆண்டுகளில் மதிப்பிழந்துபோகும். தற்போது பணிபுரிந்துவருவோரில் 90 விழுக்காட்டினர் செய்யும் வேலைக்கும் அவர்கள் பட்டப்படிப்பில் படித்த பாடத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை தங்கள் படிப்பை பற்றி பெருமிதமாக இருக்கும் இளம்தலைமுறையினர் தெரிந்து கொள்ளவேண்டும்.

சரி! நீண்டகால திட்டங்கள் இல்லாமல் எப்படி தான் செயல்படுவது?

திறன் பெருக்கமே வசதி

அடுத்த ஐந்து ஆண்டுகள், பத்து ஆண்டுகள் என்ற திட்டம் உங்களுக்கு இல்லாமல் இருப்பதால் பணி பாதுகாப்பில்லை என உணர்ந்தால், உங்கள் திறன்கள் மற்றும் நீங்கள் இதுவரை செய்த சாதனைகளை பட்டியலிடுங்கள். அந்தப் பட்டியலை பார்த்ததுமே எதிர்காலத்தை குறித்த பயத்தின் காரணமாக ஏற்பட்ட மனஅழுத்தம் மறைந்துவிடும்.

கல்லூரி படிப்பை முடித்தபிறகும் கற்றுக்கொண்டே இருப்பதாகவே பணிகளை நினைக்கவேண்டும். ஆம், தொடர்ந்து கற்றுக்கொள்வதே உயர்வுக்கு வழியாகும்.
சந்தை எவ்வாறு மாறினாலும் திறன்களே உங்களை நிலைநிறுத்துபவை. சரியான திறன்களை தேர்ந்தெடுத்து அதை கற்றுக்கொள்ள அல்லது வளர்த்துக்கொள்ள வேண்டும்.

வசதியின் விலை

நிகழ்காலத்தின்மேல் அளவுக்கு அதிகமான நம்பிக்கை கொள்வதும் ஏற்றதல்ல. நிரந்தரமான வேலையில் இருக்கிறேன்; இப்படியே இருந்துவிடலாம் என்று எந்தப் புதிய செயல்பாடும் இல்லாமல் இருந்தீர்களென்றால் அது தவறு. ஒருவேளை, உங்கள் நிறுவனம் உங்களை கைகழுவினால் அல்லது தொழில்நுட்ப வளர்ச்சியினால் உங்கள் வேலைக்கு ஆபத்து வந்தால் உங்களால் எதுவும் செய்ய இயலாமல் போய்விடும். புதிய வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வதே சரியானது.

செயல்பாட்டுக்கான திட்டம்

"நான் பயந்துகொண்டு வாழவில்லை; வசதியாக சுகம் காணவும் இல்லை" என்று கூறலாம். அப்படியானால் அகன்ற பார்வையும் இப்போதைக்கான செயல்திட்டமும் உங்களிடம் இருக்கவேண்டும். உதாரணமாக, கணக்கு எழுதும் அக்கவுண்டிங் எக்ஸிகியூட்டிவ் பணியில் சேர்கிறீர்களென்றால், வணிக கணக்கியல் மற்றும் நிதி துறையில் வேகமான வளர்ச்சி நோக்கியதாய் உங்கள் செயல்திட்டம் இருக்கவேண்டும். ஆடிட் என்னும் தணிக்கை அல்லது ஆலோசனை அல்லது நிறுவன சட்டங்கள் என்று உங்கள் எதிர்காலம் விரியவேண்டும்.

தினம் ஒரு புதிய பாடம்

தினமும் ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் அலுவலக நண்பர் ஏதாவது ஒரு புதிய திட்டவிளக்கத்தை (presentation) பார்க்க அழைத்தால், அலுவலகத்திற்கு வரும் விற்பனையாளர், வாடிக்கையாளர் கூட்டம் ஒன்றிற்கு அழைத்தால், வேறு ஒரு நிறுவனத்தின் முதுநிலை அதிகாரி உங்களிடம் பேச விரும்பினால் அல்லது உங்கள் தலைவரே ஏதாவது ஒரு வேலைக்கு தன்னார்வமாக உதவி செய்வதற்கு ஒருவரை தேடினால் உடனடியாக ஒப்புக்கொள்ளுங்கள். யார் மூலமாவது தினமும் ஏதாவது ஒரு புதிய விஷயத்தை கற்றுக்கொள்வது உங்கள் திறனை மேம்படுத்தும். நீங்கள் முடிக்கவேண்டிய காரியம் ஒன்று இருக்கும்போது புதிதாக ஒன்றையும் ஒப்புக்கொள்ளாதீர்கள்.

தொடர்பு வட்டமும் வாய்ப்புகளும்

வெளியே யாரையும் தொடர்பு கொள்ள தேவையில்லாத அல்லது முடியாத வேலையில் இருக்கிறீர்களா? அப்படியே உட்கார்ந்து இருக்காதீர்கள். உங்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கவேண்டுமானால் உங்கள் தொடர்பு வட்டமும் பெரியதாக இருக்கவேண்டும். பள்ளி, கல்லூரி நண்பர் வட்டத்தை புதுப்பிக்கலாம்; முன்பு வேலை பார்த்த நிறுவனத்தின் நண்பர்களோடு தொடர்பில் இருக்கலாம்; பொழுதுபோக்குக்காக செல்லுமிடங்களில் நண்பர்களை உருவாக்கலாம். இவையெல்லாம் உங்கள் தொடர்பு வட்டத்தை பெரிதாக்கும்; நல்ல அனுபவமும் கிடைக்கும்.

பயிற்றுநர்

உங்கள் பயிற்றுநராக யாரை தேர்ந்தெடுத்துள்ளீர்கள்? பெரிய நிறுவனத்தின் தலைமை அதிகாரிகள், தடகள வீரர்கள் மற்றும் வெற்றிகரமான தொழிலதிபர்கள் என அனைவருக்குமே ஒரு பயிற்றுநர் இருந்திருப்பார். மருத்துவர், பல் மருத்துவர், வழக்குரைஞர், கணக்காளர் போல பயிற்றுநரையும் நீங்கள் வைத்திருக்க வேண்டும். நேரம் செலவழித்து முயற்சி செய்து அது வீணாய் போவதை, பயிற்றுநரின் அனுபவம் தடுக்கும். அவரது அனுபவத்தை கொண்டு நாம் எளிதாக மேலே போகலாம்.

உங்கள் இகிகாய் (Ikigai)

'இகிகாய்' என்ற ஜப்பான் மொழி சொல்லுக்கு 'இருத்தலின் காரணம்' என்பதே ஏறக்குறைய பொருத்தமான அர்த்தம். "நீங்கள் செய்ய விரும்புவது" "எதற்காக ஊதியம் வாங்குகிறீர்கள்" "நீங்கள் எதில் சிறந்தவர்" "உலகத்திற்கு எது தேவை" - ஒன்றையொன்று வெட்டும் நான்கு வட்டங்களை வரைந்து இவை எல்லாவற்றையும் எழுதுங்கள். இதில் உங்கள் இருத்தலுக்கான காரணத்தை, அலுவலகம் ஏன் உங்களை பணியில் வைத்திருக்க வேண்டும் என்ற காரணத்தை கண்டுபிடியுங்கள்.

அப்போது எதிர்காலத்தை குறித்து திட்டமிட வசதியாக இருக்கும். விருப்பம், வருமானம் இவற்றுக்கான தொடர்பை மட்டுமே பார்த்தால் தவறான முடிவுகளையே எடுப்போம். உங்கள் திறமை என்ன என்று கண்டறிந்து பின்னர் அதைக் கொண்டு வருவாய் ஈட்டத்தக்கதாக முயற்சி செய்யலாம்.

உங்கள் நிறுவனம் எப்படி மாறியுள்ளது; அதன் தற்போதைய தேவை என்ன? என்று புரிந்துகொள்வது, வாய்ப்புக்கு காத்திராமல் தன்னார்வமாக இறங்குவது, தகவலை அறிந்து கொள்வது, நவீன கருவிகள், தொழில்நுட்பம் போன்ற வசதிகளை பயன்படுத்துவது, கொடுத்த வேலையை முடித்துவிட்டு அடுத்த வேலையில் உதவுவது ஆகியவற்றை ஆர்வமாக செய்து வந்தால் நிச்சயமாக எதிர்காலத்தில் ஏற்றம் பெற முடியும்.

You'r reading எதிர்காலத்தில் ஏற்றம் பெற ஏழு வழிகள் Originally posted on The Subeditor Tamil

More Lifestyle News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை