நோய் உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா?

by SAM ASIR, Apr 22, 2021, 21:16 PM IST

கொரோனா நோய் தொற்று குறித்த பல்வேறு ஐயங்கள் மக்களிடையே இன்னும் நிலவி வரும் நிலையில் அதற்கான தடுப்பூசி குறித்தும் பல்வேறு சந்தேகங்கள் புதிதாக எழுந்துள்ளன. மக்களின் சந்தேகங்களை தீர்க்கும் வண்ணம் தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி மருத்துவ அதிகாரிகளும் கருத்தரங்கம் ஒன்றில் கேள்வி பதில் வடிவில் அளித்துள்ள விளக்கங்கள் ஊடகங்களில் வெளிவந்துள்ளன.

கோவாக்சின், கோவிஷீல்டு - எந்தத் தடுப்பூசி சிறந்தது?

இரண்டு தடுப்பூசிகளுமே ஆராய்ச்சியை கடந்து வந்துள்ளன. இரண்டுமே திறன்வாய்ந்தவை. தீவிரமாக நோயுறுதல் மற்றும் கோவிட் மரணங்களை இரண்டுமே தடுக்கும் என்பதால் பொதுமக்கள் இந்த இரண்டில் ஏதாவது ஒன்றை போட்டுக்கொள்ளவேண்டும்.

நான் ஒரு டோஸ் கோவாக்சின் போட்டுக்கொண்டேன். இன்னொரு டோஸில் கோவிஷீல்டு போட்டுக்கொள்ளலாமா?
இல்லை. ஒரே மருந்தில் இரண்டு டோஸ்களும் செலுத்தப்படவேண்டும்.

இதய பைபாஸ் அறுவைசிகிச்சை செய்தவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா?
ஆம்.

தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு கோவிட்-19 பாதிப்பு ஏற்படுமா?
இந்தியாவில் இது குறித்து ஓரளவு புள்ளிவிவரங்களே உள்ளன. அமெரிக்க நோய் தடுப்பு மையத்தின் தகவல் 99.99% பேருக்கு தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு தொற்று ஏற்படவில்லை என்று கூறுகிறது.

நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி இருப்பு இல்லையென்றால் என்ன செய்வது?
சென்னையில் 400 மையங்களில் தடுப்பூசிகள் உள்ளன. ஒரு குறிப்பிட்ட தினத்தில் தடுப்பூசி இருப்பு இல்லையென்றால் அடுத்தடுத்த தினங்களில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அலர்ஜி உள்ளவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா?
உங்கள் மருத்துவரை ஆலோசியுங்கள். ஒவ்வாமையில் வெவ்வேறு ரகங்கள் உள்ளன. முன்னர் அலர்ஜி ஏற்பட்டால் மருத்துவமனைக்குச் சென்று தடுப்பூசிக்கான ஏற்பாடுகளை செய்யுங்கள். பின் விளைவு இருந்தால் அவர்களால் உரிய நடவடிக்கை எடுக்க முடியும்.

தடுப்பூசி போட்ட பிறகு என்னென்ன அறிகுறிகள் ஏற்படும்?
காய்ச்சல், உடலில் குளிர், உடல் வலி மற்றும் அசதி. இவை ஏற்பட்டால் சாதாரண பாராசிட்டமால் சாப்பிடவும். 2 முதல் 3 நாள்களில் சரியாகிவிடும். எந்தப் பெரிய பக்கவிளைவுகளும் இருக்காது. ஊசி போட்ட இடத்தில் சிவந்து, வலி இருக்கும்.

நான் முதல் டோஸ் போட்டுக்கொண்ட பிறகு குடும்பத்தில் யாருக்காவது கோவிட்-19 பாதிப்பு ஏற்பட்டால் என்ன செய்வது? இரண்டாவது டோஸுக்கு முன்பு எவற்றில் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்?
குறிப்பிட்ட நேரத்தில் இரண்டாவது டோஸ் போட்டுக்கொள்ள வேண்டும்.

ஏற்கனவே ஏதேனும் சிகிச்சை பெற்றவர்கள், பெற்றுக்கொண்டிருப்பவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா?
தடுப்பூசி போட்டுக்கொள்ளச் செல்லும்போது அங்கிருக்கும் மருத்துவரிடம் கேட்டுக்கொள்ளுங்கள்.

தைராய்டு பிரச்னைக்காக மருந்து சாப்பிடுகிறவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா?
ஆமாம். அதில் எந்த பிரச்னையும் இல்லை.

தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு முன்பு ஏதேனும் பரிசோதனை செய்துகொள்ளவேண்டுமா?
எந்த பரிசோதனையும் தேவையில்லை. இந்தியாவில் மட்டுமல்ல. உலகம் முழுவதும் அப்படி எந்த பரிசோதனையும் செய்துகொள்ள அவசியமில்லை. கோவிட்-19 பாதிப்புக்கான அறிகுறிகள் இருந்தால் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் முன்பு அதற்கான சோதனையை செய்துகொள்ளுங்கள்.

முதலாவது டோஸ் ஊசி போட்டுக்கொண்ட அதே மையத்தில்தான் இரண்டாவது டோஸ் ஊசி போட்டுக்கொள்ளவேண்டுமா?
இல்லை. எந்த மையத்திலும் போட்டுக்கொள்ளலாம்.

கோவிட்-19 தடுப்பூசி போட்டு கொண்டால் நோய் தொற்று ஏற்படுமா?
நிச்சயமாக இல்லை. இந்தியாவில் எந்த தடுப்பூசியிலும் உயிருடன் வைரஸ் இல்லை. ஆகவே, கோவிட் நோய் தொற்று ஏற்படாது. ஆனாலும், தடுப்பூசி போட்டுக்கொண்டதும் தவறான தைரியம் கொள்ளக்கூடாது. முகக்கவசம் அணிவரு, தனி நபர் இடைவெளியை பராமரிப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையை கடைபிடிக்கவேண்டும். இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டு 14 நாள்களுக்குப் பிறகே முழு நோய் எதிர்ப்பு ஆற்றல் கிடைக்கும்.

முதல் மற்றும் இரண்டாவது தடுப்பூசி மருந்துகளில் ஏதேனும் வேறுபாடு உள்ளதா?
இல்லை

நான் தொடர்ந்து சாப்பிட்டு வரும் மருந்துகளை, உதாரணத்திற்கு இரத்தத்தை மெலிதாக்குவதற்கு சாப்பிடுவது போன்ற மருந்துகளை நிறுத்தவேண்டுமா?
இல்லை. தயவுசெய்து அந்த மருந்துகளை தொடர்ந்து சாப்பிட்டு வாருங்கள்.

இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் முன்பு எனக்கு கோவிட்-19 தொற்று ஏற்பட்டால் என்ன செய்வது?
நோயிலிருந்து மீண்டு 1 முதல் 2 வாரங்கள் கழித்து இரண்டாவது டோஸ் போட்டுக்கொள்ள வேண்டும். முதல் டோஸ் போட்டுக்கொள்வதற்கு முன்பு கோவிட்-19 பாதிப்பு ஏற்பட்டால் முழுவதுமாக மீண்டு 28 நாள்கள் கழித்துப் போட்டுக்கொள்ளவும்.

பாலூட்டும் மற்றும் கர்ப்பிணி தாய்மார் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா?
தற்போதைய வழிகாட்டுதல்படி, அவர்கள் போட்டுக்கொள்ளும்படி அறிவுறுத்தப்படவில்லை.

இதய பாதிப்புள்ளவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா?
ஆமாம்

அலோபதி மருத்துவம் இல்லாத மருந்துகள் சாப்பிடுகிறவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா?
ஆமாம்.

நான் ஒரு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளேன். கோவிட்-19 பாதிப்புக்குள்ளாகிவிட்டேன். நோயிலிருந்து மீண்டபிறகு நான் இரண்டாவது டோஸ் மட்டும் போட்டுக்கொள்ளவேண்டுமா அல்லது இரண்டு முறைக்கான தடுப்பூசிகளை போட்டுக்கொள்ள வேண்டுமா?
இரண்டாவது டோஸுக்கான தடுப்பூசியை மட்டுமே போட்டுக்கொள்ளவேண்டும்.

புற்றுநோய் பாதிப்புக்கு பின்னானவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா?
ஆமாம். முன்பு எந்த நோயுற்றிருந்தவர்களும் தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாம்.

இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு எனக்கு கால் வலிக்கிறது. இப்படி நடக்குமா?
பல காரணங்களால் கால் வலி ஏற்படக்கூடுமாதலால் உங்கள் மருத்துவரிடம் ஆலோசியுங்கள்.

கோவிட் தடுப்பூசியினால் உடலில் ஏற்படும் எதிர் உயிரிகளால் (ஆன்ட்டிபாடிஸ்)வேறு வைரஸ்களிலிருந்து பாதுகாப்பு கிடைக்குமா?
அது அந்த நோய்க்கானது மட்டுமே. அது மற்ற நோய்களுக்காக போடப்படவில்லை. குழந்தைகளுக்கு நாம் பல்வேறு தடுப்பூசிகளை போடுகிறோம்.

என் தந்தை இரண்டாவது டோஸ் தடுப்பூசியை போட்டுக்கொள்ள பயப்படுகிறார். முதல் டோஸ் ஊசி போட்டதுடன் நிறுத்திவிடலாமா?
இரண்டு டோஸ் ஊசிகளையும் போட்டுக்கொண்டு இரண்டு வாரங்கள் கடந்தபின்னரே முழு பயன் கிடைக்கும். ஒரு டோஸ் மட்டும் போதாது.

தடுப்பூசி போட்டுக்கொண்டதும் உடலிலுள்ள இயற்கையான எதிர் உயிரிகள் (ஆன்ட்டிபாடிஸ்) அழிந்துவிடுமா?
இல்லை. தடுப்பூசி புதிய எதிர் உயிரிகளையே தரும். இயற்கையான எதிர் உயிரிகள் உடலில் தொடர்ந்து இருக்கும். உங்கள் நோய் எதிர்ப்பு ஆற்றலுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது.

எனக்கு ஏற்கனவே கோவிட்-19 பாதிப்பு ஏற்பட்டு குணமாகிவிட்டேன். எனக்கு எதிர்உயிரி உள்ளது. நான் தடுப்பூசியை தவிர்த்துவிடலாமா?
இல்லை. எதிர் உயிரிகள் நெடுங்காலம் நீடித்திருக்காது. தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம்.

ஏதேனும் காரணத்தினால் இரண்டாவது டோஸ் தடுப்பூசி தாமதமாகிவிட்டால் என்ன செய்வது?
பரவாயில்லை. வசதி ஏற்படும்போது போட்டுக்கொள்ளுங்கள். 4 அல்லது 6 முதல் 8 வாரங்களுக்குள் போட்டுக்கொள்வது நல்லது. இரண்டாவது டோஸ் போட்டுக்கொள்ளவேண்டும்.

என் தந்தைக்கு உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் இதய நோய் உள்ளது. அவர் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா?
ஆமாம். இதுபோன்ற இணை நோய்கள் உள்ளவர்களுக்கு பாதிப்பு ஆபத்து அதிகம். ஆகவே அப்படிப்பட்டவர்கள் கண்டிப்பாக போட்டுக்கொள்ளவேண்டும்.

முதல் டோஸ் தடுப்பூசியை வேறு நாட்டில் போட்டுக்கொண்டேன் (கோவிஷீல்டுக்கு இணையானது). இந்தியாவில் இரண்டாவது டோஸை போட்டுக்கொள்ளலாமா?
ஆமாம். இங்கே அதே மருந்தை தெரிவு செய்ய வாய்ப்பிருந்தால் போடலாம்.

தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு எந்த பக்கவிளைவும் தெரியவில்லை என்றால் ஊசி வேலை செய்யுமா?
ஆமாம்.

வீட்டிலேயே தடுப்பூசி போட்டுக்கொள்ள வழி இருக்கிறதா?
இல்லை. 50 முதல் 100 நபர்கள் எந்த குடியிருப்பிலாவது போடுவதாக இருந்தால் தற்காலிக முகாமை நடத்தலாம்.

You'r reading நோய் உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா? Originally posted on The Subeditor Tamil

More Health News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை