மதுரை தொகுதிக்கான தனி தேர்தல் அறிக்கை - மார்க்சிஸ்ட் வேட்பாளர் அசத்தல்

Election 2019, Madurai Loksabha cpm candidate Venkateshan releases desperate manifesto for his constituency

by Nagaraj, Mar 30, 2019, 16:07 PM IST

மதுரை மக்களவைத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் எழுத்தாளர் சு.வெங்கடேசன் தொகுதிக்காக மட்டும் தனியாக தேர்தல் அறிக்கை தயாரித்து புத்தகமாக வெளியிட்டுள்ளார்.

மதுரை மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் சு.வெங்கடேசன் போட்டியிடுகிறார். இளமைப் பருவம் முதலே கலை, இலக்கியத்தில் ஆர்வமாக இருந்த வெங்கடேசன், மார்க்சிஸ்ட் கட்சியின் ஓர் அங்கமான தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தில் தீவிரமாக பங்கேற்று தற்போது அச்சங்கத்தின் மாநிலச் செயலாளராகவும் உள்ளார். சிறந்த எழுத்தாளராகவும் திகழும் வெங்கடேசன், மதுரையை மையமாகக் கொண்டு எழுதிய காவல் கோட்டம் நூலுக்காக இந்திய இலக்கிய உலகின் மிகப் பெரும் விருதான சாகித்ய அகாதமி விருதும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது மதுரை மக்களவைத் தொகுதியில் மார்க்சிஸ்ட் சார்பில் போட்டியிடும் வெங்கடேசன், பிரச்சாரத்தில் முழு வேகத்தில் உள்ளார்.

மேலும் மதுரை தொகுதிக்கென தான் எழுத்தாளர் என்பதை நிரூபிக்கும் வகையில் தனியாக தேர்தல் அறிக்கை ஒன்றையும் புத்தகமாக அச்சிட்டுள்ளார். இதில் மதுரையின் அடிப்படைத் தேவைகள், வளர்ச்சித் திட்டங்கள், பிரச்னைகளுக்கான தீர்வு என்ன? என்பது பற்றியெல்லாம் விளக்கமாக தெரிவித்துள்ளதுடன், தான் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டால் தொகுதிக்கு என்னென்ன செய்வேன் என்பதையும் வாக்குறுதியாக தெரிவித்துள்ளார்.

அழகிய வடிவில் அச்சிடப்பட்டுள்ள இந்த மதுரை நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் அறிக்கையை கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு இன்று வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பங்கேற்றனர்.

You'r reading மதுரை தொகுதிக்கான தனி தேர்தல் அறிக்கை - மார்க்சிஸ்ட் வேட்பாளர் அசத்தல் Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை