4 தொகுதி சட்டப் பேரவை இடைத்தேர்தல் - பொறுப்பாளர்களை நியமித்தது திமுக
Dmk party announces election inchargers for four Assembly by-election
அடுத்த மாதம் 19-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள திருப்பரங்குன்றம், அரவாக்குறிச்சி, சூலூர், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளுக்கும் தேர்தல் பொறுப்பாளர்களை அறிவித்துள்ளது திமுக தலைமை .மூத்த முன்னாள் அமைச்சர்கள் தலைமையில் ஒவ்வொரு தொகுதிக்கும் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் மற்றும் 15-க்கும் மேற்பட்ட மாவட்டச் செயலாளர்களை களம் இறக்கி பகுதிவாரியாக தேர்தல் பொறுப்புகளை திமுக தலைமை ஒதுக்கியுள்ளது.
இந்த நான்கு தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை கடந்த ஞாயிறன்று திமுக அறிவித்துவிட்டது. இந்நிலையில், மக்களவை பொதுத் தேர்தல் மற்றும் 18 சட்டப் பேரவைக்கான இடைத்தேர்தல் முடிவடைந்த அடுத்த நாளே இந்த 4 தொகுதி இடைத்தேர்தலில் திமுக கவனம் செலுத்த ஆரம்பித்து பொறுப்பாளர்களை அறிவித்துள்ளது.
அதன்படி திருப்பரங்குன்றம் தொகுதிக்கு பொறுப்பாளர்களாக கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும் மூத்த அமைச்சருமான ஐ.பெரியசாமி, மதுரை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் மு.மணிமாறன் ஆகியோர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் கீழ் முன்னாள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.ஆர் பெரியகருப்பன், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், மற்றும் பி.கே.சேகர்பாபு, ஜெ.அன்பழகன், கம்பம் ராமகிருஷ்னன், பி.மூர்த்தி கோ.தளபதி உள்ளிட்ட 15 மாவட்டச் செயலாளர்களுக்கு பகுதிவாரியாக பொறுப்பு வழங்கப் பட்டுள்ளது.
ஒட்டப்பிடாரம் தொகுதிக்கு முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில், கனிமொழி எம்.பி, முன்னாள் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், கீதாஜீவன், சுரேஷ்ராஜன், சென் னை முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
கோவை சூலூர் தொகுதிக்கு முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தலைமையலும், அரவாக்குறிச்சி தொகுதிக்கு முன்னாள் அமைச்சர் க.பொன்முடி தலைமையிலும் பொறுப்பாளர்களை நியமித்து திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
யாருக்கு எவ்வளவு ஓட்டு..?- இனி 34 நாட்களுக்கு கூட்டல்,கழித்தல் கணக்கு தான் போங்க
You'r reading 4 தொகுதி சட்டப் பேரவை இடைத்தேர்தல் - பொறுப்பாளர்களை நியமித்தது திமுக Originally posted on The Subeditor Tamil
More Politics News