3 எம்எல்ஏக்கள் விவகாரம்... சபாநாயகருக்கு தடை ... உச்ச நீதிமன்றம் அதிரடி!

SC stays tn speakers disqualification proceedings against 3 dinakaran support MLAs

by Nagaraj, May 6, 2019, 13:14 PM IST

தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 3 பேர் மீது சபாநாயகர் தனபால் நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்களான அறந்தாங்கி ரத்தின சபாபதி, விருத்தாசலம் கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி பிரபு ஆகிய மூவரும் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாகக் கூறி, அவர்கள் மீது கட்சித்தாவல் தடை சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகர் தனபாலிடம் அதிமுக கொறடா ராஜேந்திரன் புகார் அளித்திருந்தார்.

இதனால் இந்த 3 எம்எல்ஏக்களுக்கும் சபாநாயகர் தனபால் கடந்த செவ்வாய்க்கிழமை நோட்டீஸ் அனுப்பினார். ஒரு வாரத்துக்குள் மூன்று பேரும் தங்களது நிலைப்பாடு பற்றி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அந்த நோட்டீசில் கூறப்பட்டிருந்தது.

இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்ட சில மணி நேரத்தில் சட்டசபை செயலாளரிடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சார்பில் ஒரு மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவில், சபாநாயகருக்கு எதிராக தி.மு.க. நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதாகவும் உடனே அதை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்றத்தில் ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோர் தரப்பில் சபாநாயகரின் நடவடிக்கைக்கு தடை கோரி முறையீடு செய்யப்பட்டது.

அதில், தமிழக சட்டசபை சபாநாயகர் எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அந்த நோட்டீசில் 7 நாட்களுக்குள் விளக்கம் கோரி உள்ளார். இந்த நிலையில் எங்கள் பதிலுக்குக்கூட காத்திருக்காமல் அவர் எங்களை தகுதி நீக்கம் செய்யும் வாய்ப்பு உள்ளது. கடந்த 30-ந் தேதி எதிர்க்கட்சியான திமுக சார்பில் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கான கடிதம் கொடுக்கப்பட்டு உள்ளது. எங்களுக்கு இப்படி நோட்டீஸ் அனுப்ப சபாநாயகருக்கு அதிகாரம் கிடையாது. அவர் பாரபட்சமாக செயல்படுகிறார்.

ஏற்கனவே துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அவருடைய ஆதரவாளர்களான 10 எம்.எல்.ஏ.க்கள் கட்சிக்கு எதிராக வாக்களித்தும் அவர்களை இதுவரை தகுதிநீக்கம் செய்யவில்லை. தன்னுடைய பாரபட்சமான நோக்கினால் எங்கள் மீது இதுபோன்ற நடவடிக்கையை அவசரமாக எடுக்கிறார்.

சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நிலுவையில் இருக்கும்போது இதுபோன்ற நடவடிக்கையை எடுக்க அவருக்கு அதிகாரம் கிடையாது. இது தொடர்பாக முன்பு ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு கூறியுள்ளது. பெருவாரியான உறுப்பினர்களின் நம்பிக்கையை இழந்த சபாநாயகர் இதுபோன்ற நடவடிக்கையை எடுக்க முடியாது. எனவே சபாநாயகர் எங்களுக்கு அனுப்பி உள்ள நோட்டீசை ரத்து செய்ய வேண்டும் என்று முறையீடு செய்திருந்தனர்.

திமுக சார்பிலும் இதே காரணம் கூறி வழக்குத் தொடுக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன்பு இன்று விசாரனைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் சபாநாயகர் நோட்டீசுக்கு இடைக்கால தடை விதித்தார். தொடர்ந்து இது குறித்து விளக்கம் அளிக்குமாறு சபாநாயகர் தனபாலுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டார்.

தினகரன் ஆதரவு 3 எம்எல்ஏக்கள் விவகாரம் : சபாநாயகர் Vs உச்ச நீதிமன்றம் ... மோதல் வெடிக்குமா..?

You'r reading 3 எம்எல்ஏக்கள் விவகாரம்... சபாநாயகருக்கு தடை ... உச்ச நீதிமன்றம் அதிரடி! Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை