நீங்களே சம்பாதித்தால் போதுமா? அ.தி.மு.க.வில் வலுக்கும் அதிருப்தி

Admk mlas supporting rajan chellappa demands ministerial berth

by எஸ். எம். கணபதி, Jun 10, 2019, 11:41 AM IST

அ.தி.மு.க.வில் தற்போது தனித்தனி அணிகளாக நிர்வாகிகள் பிரிந்து, பதவிகளை பெறுவதற்காக காய் நகர்த்தி வருகிறார்கள். இதனால், கட்சியில் குழப்பம் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

எடப்பாடி அணி, ஓ.பி.எஸ். அணி என்று அ.தி.மு.க. கட்சி இரண்டாக பிரிந்திருந்த போது கூட, அந்தந்த அணி தலைமையின் கீழ் கட்டுப்பாடாக செயல்பட்டு வந்தன. அதன்பிறகு, இரு அணிகளும் இணைந்து வெற்றிகரமாக இரட்டை இலை சின்னத்தையும், கட்சிப் பெயர் மற்றும் கொடியை கைப்பற்றினர். அடுத்தகட்டமாக, டி.டி.வி. தினகரனை தனிக்கட்சி ஆரம்பிக்க வைத்து அவருக்கும், அ.தி.மு.க.வுக்கும் இனி தொடர்பே இல்லை என்பதையும் உறுதிபடுத்தினர்.

ஆனால், நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்கு பின், அ.தி.மு.க.வில் பல்வேறு குழப்பங்கள் வெளியில் தெரியாமல் ஓடிக் கொண்டிருக்கின்றன. அவற்றை அப்படியே மறைத்து கட்சியை நடத்துவதற்கு எடப்பாடியும், ஓ.பன்னீர்செல்வமும் முயற்சி பண்ணியும் அது நடக்கவி்லலை மதுரை வடக்கு எம்.எல்.ஏ.வான ராஜன் செல்லப்பா, ‘கட்சிக்கு யாருக்கு அதிகாரம்? ஒற்றைத் தலைமை இல்லாமல் எந்த முடிவும் எடுக்க முடியவி்லலையே...’’ என்று தனது ஆதங்கத்தைக் கொட்டி கொளுத்திப் போட்டு விட்டார்.

அவர் என்ன பேசினார், அதற்கு என்ன நடவடிக்கை என்று எடப்பாடியும், ஓ.பி.எஸ்.சும் முடிவெடுப்பதற்குள் அடுத்த எம்.எல்.ஏ.வும், பெரம்பலூர் மாவட்டச் செயலாளருமான குன்னம் ராமச்சந்திரன், செல்லப்பாவின் கருத்தை ஆமோதித்து பேசி வீடியோ வெளியிட்டு விட்டார். அது மட்டுமல்ல, தனது குடும்பத்தின் வளமைக்காக சுயநலத்துடன் கழகத்தை வளைத்து செயல்படக் கூடாது என்று ஓ.பன்னீர்செல்வத்தை போட்டு தாக்கினார்.

அதாவது, ‘‘ஓ.பி.எஸ் தனது மகனுக்கு மந்திரி பதவி பெறுவதற்காக கட்சியை காவு கொடுக்கிறார்’’ என்று மறைமுகமாக குத்திக் காட்டினார். அதே சமயம், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, ‘‘அம்மா இருந்தால் ராஜன்செல்லப்பா இப்படி பேசுவாரா?’’ என்று செல்லப்பாவுக்கு எதிர்ப்பு காட்டினார். ஆனால், அமைச்சர் மணிகண்டனும், ‘‘இரட்டைத் தலைமை என்பது பொதுக் குழு எடுத்த முடிவு. எடப்பாடியும், ஓ.பி.எஸ்.சும் இரண்டு கண்கள். இந்த தலைமை மீது யாருக்காவது கருத்து வேறுபாடு ஏற்பட்டால், அதை பொதுக்குழுவில்தான் பேச வேண்டும்’’ என்றார்.

இது ஒரு புறமிருக்க, அமைச்சர் சி.வி.சண்முகம், ‘‘பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்ததால்தான், அ.தி.மு.க. தோல்வியுற்றது. பா.ஜ.க.வுடன் சேர்ந்ததால் அ.தி.மு.க.வுக்கு விழ வேண்டிய சிறுபான்மையினரின் வாக்குகள் விழவில்லை’’ என்று வெளிப்படையாக குற்றம்சாட்டினார். அமைச்சர் ஆர்.பி.உதயக்குமாரோ, ‘‘நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களையும், அவர்களின் சின்னங்களையும் நாங்கள் கொண்டு போய் சேர்ப்பதற்கே பெரும்பாடு பட வேண்டியதாயிற்று. அவற்றை கொண்டு போய் சேர்ப்பதற்குள் தேர்தலே முடிந்து விட்டது’’ என்றார்.

இப்படி அமைச்சர்கள் ஆளுக்கொரு திசையில் கட்டுப்பாடில்லாமல் கருத்து சொல்லிக் கொண்டிருக்க, எம்.எல்.ஏ.க்கள் பலரும் பதவி கேட்டு எடப்பாடிக்கு நெருக்கடி கொடுக்கத் தொடங்கியுள்ளனர். ராஜன் செல்லப்பா வெளிப்படையாக கருத்து தெரிவித்த பின்பு, அவரிடம் சில எம்.எல்.ஏ.க்கள் தொடர்பு கொண்டு அவரது கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.

அப்போது அந்த எம்.எல்.ஏ.க்கள் தங்களுக்கு உள்ள மனப்புழுக்கத்தை பரிமாறிக் கொண்டிருக்கிறார்கள். அதாவது, ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது, அமைச்சர்கள் தங்கள் சம்பாத்தியத்தில் ஒரு பகுதியை கட்சிக்கு கொடுப்பார்கள். அதே போல், எம்.எல்.ஏ.க்களுக்கு உரிய மரியாதை அளித்து பல வேலைகளை செய்து கொடுப்பார்கள். ஆனால், இப்போது அமைச்சர்கள் மொத்தமாக அவர்களே சம்பாதித்து வைத்து கொள்கிறார்கள். அதே போல், புகார்களில் சிக்கும் அமைச்சர்களை தூக்கி விட்டு, அந்த மாவட்டத்தில் அடுத்த எம்.எல்.ஏ.வுக்கு அமைச்சர் பதவி கொடுப்பார்.

இப்போது அந்த வாய்ப்பும் தராமல் அதே அமைச்சர்களே வளம் கொழித்து கொண்டிருக்கிறார்கள். இத்தனைக்கும் ஒரு அமைச்சர் தர்மாகோல் விவகாரத்தில் அசிங்கப்படுகிறார், இன்னொருவர் ஆப்பிள் சின்னத்தில் ஓட்டு கேட்டது வரை ஞாபக மறதியிலேயே பாதி நேரம் இருக்கிறார், இன்னொரு அமைச்சர் மீது சொத்து குவிப்பு வழக்கு வருகிறது... இன்னொரு அமைச்சர் மீது குழந்தைக்கு தந்தை என்ற புகார் வருகிறது, இவர்களால் கட்சிக்கு கெட்டப் பெயர் ஏற்பட்டால் கூட யாரும் தட்டிக் கேட்க முடியவில்லை. இன்னும் பலமான அமைச்சராக வலம் வருகிறார்கள். அவர்கள் அனுபவித்தது போதும் என்று பூனைக்கு மணி கட்டி, நமக்கு அமைச்சர் பதவி வாங்க வேண்டும் என்பதுதான் அந்த எம்.எல்.ஏ.க்களின் மனப்புழுக்கம்.

ஏற்கனவே தோப்பு வெங்கடாசலம் இந்தப் புழுக்கத்தை நேரடியாக எடப்பாடியிடம் கொட்டி தீர்த்து விட்டு, பேரவை இணைச் செயலாளர் பதவியில் இருந்து விலகி தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். அவர் தனியாக நெருக்கடி கொடுத்து வருகிறார். இதே போல், ஒவ்வொரு எம்.எல்.ஏ.வும் கட்சித் தலைமைக்கு நெருக்கடி தருவதற்காகவே, வெளிப்படையாக பேட்டி கொடுக்கத் துவங்கினால், அது இன்னும் சிக்கலாகி விடும் என்பதால்தான், அவசர, அவசரமாக 12ம் தேதி கூட்டத்துக்கு எடப்பாடி, ஓ.பி.எஸ் இணைந்து ஏற்பாடு செய்திருக்கிறார்கள். ஆனால், அந்த கூட்டத்தில் ராஜன் செல்லப்பாவுக்கு ஆதரவாக குரல் கொடுக்கவும், அமைச்சரவையில் மாற்றம் செய்யவும் சில எம்.எல்.ஏ.க்கள் பேசவிருக்கிறார்களாம்.

அதனால், 12ம் தேதி கூட்டத்திற்கு முன்பாகவே எடப்பாடியும், ஓ.பி.எஸ்.சும் சேர்ந்து கூடிப் பேசி, முக்கிய முடிவுகளை எடுத்து விடலாம் என தீர்மானித்திருக்கிறார்களாம். அதிருப்தியாளர்களை திருப்திபடுத்தி, பதவிகளை பிரி்த்து கொடுப்பது மற்றும் உள்ளாட்சி பதவிக்கு உறுதி கொடுப்பது ஆகியவற்றின் மூலம் சமரசம் ஏற்படுத்திட நினைக்கிறார்களாம். அது ஓ.கே. ஆகி விட்டால் 12ம் தேதி கூட்டம், கசமுசா எதுவும் இல்லாமல் வழக்கமான தீர்மானங்களுடன் அமைதியாக நடக்கும் என்கிறார்கள்.

You'r reading நீங்களே சம்பாதித்தால் போதுமா? அ.தி.மு.க.வில் வலுக்கும் அதிருப்தி Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை