அந்தோ பரிதாப காங்கிரஸ்... 4 முதல்வர்களுடன் ஆலோசனை நடத்திய மன்மோகன் சிங்

Ex PM Manmohan Singh chairs congress ruling states chief ministers meeting:

by Nagaraj, Jun 15, 2019, 17:55 PM IST

கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை யாருக்கு பொருந்துமோ இல்லையோ... இப்போதைய நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு கட்டாயம் பொருந்தும். அரை நூற் றாண்டுக்கும் மேலாக நாடு முழுவதும் பெரும்பான்மை மாநிலங்களில் கோலோச்சிய காங்கிரஸ் இப்போது வெறுமனே 5 மாநிலங்களில் தான் ஆட்சி புரியும் பரிதாப நிலையாகி விட்டது. அந்த மாநில முதல்வர்களுடன் டெல்லியில் ஒரு சிறிய அறையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், நடத்திய ஆலோசனைக் கூட்டம் களையிழந்து பார்க்கவே பரிதாபமாக காட்சியளித்தது.

சுதந்திரம் பெற்றதற்கு பின் நடந்த முதல் தேர்தலில் நாட்டில் காங்கிரசுக்கு எதிராக வலுவான எதிர்க்கட்சி எதுவும் இல்லை. கம்யூனிஸ்டுகள் தான் ஆங்காங்கே தென்பட்டனர். இதனால் முதல் சில தேர்தல்களில் மத்தியில் மட்டுமின்றி நாடு முழுமைக்கும் உள்ள அனைத்து மாநிலங்களும் காங்கிரஸ் கட்சியின் ஆதிக்கத்தில் தான் இருந்து வந்தது.

காங்கிரசுக்கு சரிவு காலம் 1960 களில் தொடங்கியது. முதன் முதலில் கம்யூனிஸ்டுகளிடம் கேரளாவில் ஆட்சியைப் பறிகொடுத்தது காங்கிரஸ். பின்னர் 1967-ல் தமிழகத்தில் திமுகவிடமும், தொடர்ந்து மே.வங்கத்தில் கம்யூனிஸ்டுகளிடமும் பறிகொடுத்த ஆட்சியை இன்று வரை மீட்க முடியவில்லை. இது போன்று தொடர்ந்து பல்வேறு மாநிலக் கட்சிகளிடம் ஆட்சியை பறிகொடுத்து வந்த காங்கிரஸ் 2014 -ல் பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்த பின் அந்தக் கட்சியிடமும் ஏராளமான மாநிலங்களை தானம் கொடுத்து விட்டு இப்போது பரிதாபமான நிலையில் உள்ளது.

தற்போதைக்கு மொத்தமுள்ள 31 மாநிலங்களில் பஞ்சாப், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது . கர்நாடகத்தில் நித்திய கண்டம் பூரண ஆயுசு என்பது போல மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. வடகிழக்கு மாநிலங்களில் செல்வாக்குப் பெற்றிருந்த காங்கிரஸ் இப்போது சுத்தமாக துடைத்தெறியப்பட்டு விட்டது.

தற்போது நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ் ஆளும் 6 மாநிலங்களில் பஞ்சாப், புதுச்சேரி தவிர்த்து மற்ற மாநிலங்களில் காங்கிரஸ் படுதோல்வியைச் சந்தித்தது. இதனால் நூலிழை மெஜாரிட்டியுடன் ஆட்சி நடக்கும் கர்நாடகா, ம.பி, ராஜஸ்தான் மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சிக்கு எந்த நேரமும் ஆபத்து ஏற்படவும் வாய்ப்புள்ளது.

இந்நிலையில் இன்று டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க அனைத்து மாநிலங்களின் முதல்வர்களும் டெல்லியில் கூடியுள்ளனர். இந்தக் கூட்டத்தில் என்னென்ன பிரச்னைகளை எழுப்ப வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் முதல்வர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூட்டியிருந்தார். இந்தக் கூட்டத்தில் உடல் நிலையைக் காரணம் காட்டி பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங் பங்கேற்கவில்லை. சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் தாமதமாக பங்கேற்றார்.

இதனால் புதுச்சேரி நாராயணசாமி, ம.பி.யின் கமல்நாத், ராஜஸ்தானின் அசோக் கெலாட், ஆகியோருடன் கூட்டணி முதல்வர் என்ற வகையில் கர்நாடக முதல்வர் குமாரசாமி ஆகியோருடன் மன்மோகன் சிங் ஆலோசனை நடத்தினார். சிறிய அறையில் இருக்கைகள் பல காலியாக கிடக்க 4 பேருடன் மட்டும், ஒரு வித இறுக்கமான சூழலில், சோகமான மனநிலையில் மன்மோகன் சிங் இந்த ஆலோசனைக் கூட்டத்தை ஒப்புக்கு நடத்தினர்.

இந்தக் காட்சியை பார்க்கும் போது, நாட்டை பன்னெடுங்காலம் ஆண்ட காங்கிரசுக்கு இந்த பரிதாப நிலையா? என்று உச்..கொட்ட வைத்துள்ளது. இதனால் தான் தோல்வி தந்த சோகத்தில் இருந்து இன்னும் மீள முடியாமல் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, இந்தக் கூட்டத்தை நீங்களே நடத்துங்கள் என்று மன்மோகன் சிங் பக்கம் கை காட்டிவிட்டு நழுவி விட்டதாகக் கூட டெல்லியில் கமெண்ட் அடிக்கின்றனர்.

ஜூன் 3 ; உடன்பிறப்பே... எழுந்து வா உடன்பிறப்பே.. கலைஞர் இல்லா முதல் பிறந்தநாள் விழா

You'r reading அந்தோ பரிதாப காங்கிரஸ்... 4 முதல்வர்களுடன் ஆலோசனை நடத்திய மன்மோகன் சிங் Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை