டாஸ்மாக் சரக்கு குடிப் போர்,அளவுக்கு அதிகமாக குடித்தால் உடல்நலம் கெட்டுப்போகத் தான் செய்யும் என்றும், அளவாக குடித்தால் பிரச்னை ஏதுமில்லை என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை மானியக்கோரிக்கை மீதான விவாதம் இன்று நடந்தது. அப்போது பேசிய காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ பிரின்ஸ், டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபானங்களின் தரம் குறைவாக உள்ளதாகவும், அதனால் உயிரிழப்புகளும் அதிகமாக ஏற்படுவதாக குற்றச்சாட்டை முன்வைத்தார். மேலும் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் எனவும் பிரின்ஸ் எம்எல்ஏ வலியுறுத்தினார்.
இதற்குப் பதிலளித்த மின்துறை அமைச்சர் தங்கமணி, மது குடிப்போர் அளவாக குடித்தால், பிரச்சினை இல்லை. அளவுக்கு அதிகமாக குடித்தால் உடல்நலம் கெட்டுப்போகத் தான் செய்யும். எனவே அரசால் ஒன்றும் செய்ய முடியாது என்று தடாலடியாக பதிலளித்தார்.
மேலும் அமைச்சர் தங்கமணி கூறுகையில், அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூடினால், கள்ளச்சாராயம் புகுந்துவிடும் என்பதாலேயே, படிப்படியாக கடைகள் குறைக்கப்பட்டு வருகிறது என்றவர், தமிழகத்தில் 6 ஆயிரத்து 132 ஆக இருந்த டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 152 கடைகளாக குறைக்கப்பட்டிருக்கிறது எனவும் சுட்டிக்காட்டினார்.














