சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது..! கர்நாடக எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரத்தில் உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

Karnataka political crisis, SC says, speaker free to decide on rebel MLAs resignation MLAs resignation Matter

by Nagaraj, Jul 17, 2019, 11:52 AM IST

கர்நாடக எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரத்தில் , சபாநாயகருக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால் இந்தத் தீர்ப்பு, முதல்வர் குமாரசாமி தரப்புக்கு சற்று நிம்மதியைக் கொடுத்துள்ளது என்றே கூறலாம்.

கர்நாடகாவில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆளும் காங்கிரஸ் மற்றும் மதக்சார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்கள் 16 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். ஆனால் இவர்களின் ராஜினாமாவை கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் ஏற்கவில்லை. ராஜினாமா முறைப்படி வழங்கப்படவில்லை என்று சபாநாயகர் கூறிவிட்டார். இதனால் அதிருப்தி எம்எல்ஏக்கள் 10 பேர் உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், அதிருப்தி எம்எல்ஏக்கள் சபாநாயகரை நேரில் சந்தித்து விளக்கம் அளிக்க வேண்டும் எனவும், இந்த ராஜினாமா குறித்து சபாநாயகர் உடனடியாக முடிவு எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். சபாநாயகரோ, உடனடியாக முடிவு எடுக்க முடியாது எனவும் கால அவகாசம் தேவை எனவும் தெரிவித்து விட்டார். இதனால் எம்எல்ஏக்கள் மீது எந்த நடவடிக்கையும் சபாநாயகர் எடுக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தடை விதித்திருந்தது.

இந்நிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணை மீண்டும் நடைபெற்றது. அப்போது அதிருப்தி எம்எல்ஏக்கள் தரப்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, ஒருவர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய தனிப்பட்ட காரணங்கள் ஆயிரம் இருக்கும். அதிருப்தி உறுப்பினர்களின் ராஜினாமா பற்றி முடிவு எடுக்காமல் சபாநாயகர் காலம் தாழ்த்தி வருகிறார். உடனடியாக முடிவு எடுக்க சபாநாயகரை உச்ச நீதிமன்றம் வற்புறுத்த வேண்டும் என தெரிவித்தார்.

இதற்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், தம்மால் சபாநாயகரை நிர்பந்திக்க முடியாது. நான் இதை சட்டரீதியாக மட்டுமே அணுக முடியும். சபாநாயகருக்கு உத்தரவிட்டு முடிவு எடுக்கக் கோரி நிர்பந்திக்க என்னால் முடியாது.சபாநாயகர் எப்படி முடிவெடுக்க வேண்டும் என்பதை உச்சநீதிமன்றம் உத்தரவிட முடியாது
என தெரிவித்தார்.

அதே நேரத்தில் எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதம் சரியாக இருக்கும் போது, சபாநாயகர் அதன் மீது ஏன்நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார். அரசியல் சாசன அதிகாரங்களை எங்களுக்கு நினைவுபடுத்தும் சபாநாயகர் அதனை ஏன் பின்பற்றாமல் இருக்கிறார்? என்றும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தமது கருத்தை தெரிவித்திருந்தார்.

நேற்று நடந்த இந்த வழக்கில் சபாநாயகர் தரப்பு வழக்கறிஞர், முதல்வர் குமாரசாமி தரப்பு வழக்கறிஞர் மற்றும் அதிருப்தி எம்எல்ஏக்கள் தரப்பு வழக்கறிஞர் ஆகியோர் இடையே காரசார வாக்குவாதம் 4 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. வழக்கறிஞர்களின் விவாதம் நிறைவடைந்த நிலையில், இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அறிவித்திருந்தனர்.

நாளை கர்நாடக சட்டப்பேரவையில் குமாரசாமி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில் கர்நாடக எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் வழங்க உள்ள தீர்ப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், இன்று காலை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு பரபரப்பான தீர்ப்பை வழங்கியுள்ளது.

எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரத்தில், சபாநாயகருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியாது. ராஜினாமா விவகாரத்தில் முடிவெடுக்க சபாநாயகருக்கு எந்த காலவரம்பும் நிர்ணயிக்க முடியாது. எம்எல்ஏக்களை விட சபாநாயகர் தான் முக்கியம். சபாநாயகரின் அதிகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை. எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரத்தில் சபாநாயகர் சுதந்திரமாக முடிவெடுக்கலாம். அதே போல் நாளை நடைபெற உள்ளம்பிக்கை வாக்கெடுப்பிலும் ராஜினாமா செய்த எம்எல்ஏக்கள் பங்கேற்க வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது. வாக்கெடுப்பில் பற்கேற்பது குறித்து எம்எல்ஏக்களும் சுதந்திரமாக முடிவெடுக்கலாம் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பரபரப்பான தீர்ப்பு வழங்கினர்.

உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பால், நாளை நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில், குமாரசாமி தப்பிப் பிழைக்க இன்னும் கொஞ்சம் கூடுதல் தெம்பு கிடைத்துள்ளது என்றே கூறலாம். சபாநாயகரின் முடிவே இறுதியானது.. அவருடைய அதிகாரத்தில் தலையிட முடியாது என உச்ச நீதிமன்றம் கூறி விட்டதால், தகுதி நீக்கம் என்ற ஆயுதத்தை பயன்படுத்தி அதிருப்தி எம்எல்ஏக்களை வளைத்து விடலாம் என்பது காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் தலைவர்களின் எண்ணமாக உள்ளது. இதனால் அதிருப்தி எம்எல்ஏக்கள் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வார்களா? என்பது நாளைய நம்பிக்கை வாக்கெடுப்பின் போது தெரிந்துவிடும். உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு கர்நாடக அரசியலில் மேலும் பரபரப்பை அதிகரித்துள்ளது என்றே கூறலாம்.

குமாரசாமி அரசு இன்றே நம்பிக்கை வாக்கு கோரவேண்டும்; கர்நாடக சட்டப்பேரவையில் பாஜக அமளி - நாளை வரை ஒத்திவைப்பு

You'r reading சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது..! கர்நாடக எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரத்தில் உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை