முதல் அமைச்சருக்கு ரிமோட் கண்ட்ரோல் இருக்கக்கூடாது - ராகுல் காந்தி

by SAM ASIR, Feb 14, 2021, 18:54 PM IST

ரிமோட் கண்ட்ரோல் டி.வி.யை கட்டுப்படுத்தலாம். ஆனால், முதலமைச்சரை கட்டுப்படுத்தக்கூடாது. நாக்பூர் அல்லது டெல்லியின் வழிகாட்டுதல்களை கேளாமல், மக்களின் குரல்களை கேட்கக்கூடிய "சொந்த முதலமைச்சர்" மாநிலத்திற்கு வேண்டும் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். அஸ்ஸாமில் தேர்தல் பரப்புரையின்போது அஸ்ஸாமுக்கு சொந்த முதலமைச்சர் தேவை என்றும், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் குடியுரிமை சட்ட திருத்தம் அமல்படுத்தப்படாது என்றும் ராகுல் காந்தி கூறியுள்ளார். அஸ்ஸாம் மாநிலத்தில் மார்ச் - ஏப்ரல் மாதங்களில் சட்டப்பேரவைக்கான தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான முதல் பரப்புரை கூட்டத்தில் ஞாயிறு அன்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசினார்.

அப்போது பாஜகவும் ஆர்எஸ்எஸும் அஸ்ஸாம் மாநிலத்தை பிரிப்பதாக குற்றஞ்சாட்டியதோடு, அஸ்ஸாம் ஒப்பந்தத்தின் ஒவ்வொரு ஷரத்தையும் தமது கட்சி பாதுகாக்கும் என்றும், அஸ்ஸாமில் ஆட்சிக்கு வந்தால் குடியுரிமை சட்ட திருத்தம் நடைமுறைப்படுத்தப்படமாட்டாது என்றும் அவர் கூறினார். அஸ்ஸாம் ஒப்பந்தம் இம்மாநிலத்தில் சமாதானத்தை கொண்டு வந்தது. அதுவே இம்மாநிலத்திற்கு பாதுகாப்பு. நானும் என் கட்சி தொண்டர்களும் ஒப்பந்தத்தின் ஒவ்வொரு ஷரத்தையும் பாதுகாப்போம். சிறு பிறழ்வு கூட ஏற்படாது. சட்டவிரோதமான குடியேற்றம் அஸ்ஸாமில் பிரச்னையாக உள்ளது என்று கூறிய ராகுல் காந்தி அப்பிரச்னைக்கு பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வுகாணும் திறன் இம்மாநில மக்களுக்கு உள்ளது என்று நம்பிக்கை தெரிவித்தார். பாஜகவும் ஆர்எஸ்எஸும் மாநிலத்திற்குள் பிரிவினையை தூண்ட முயற்சிப்பதாகவும், அஸ்ஸாம் பிரிந்தால் பிரதமர் நரேந்திர மோடியோ, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவோ பாதிக்கப்படமாட்டார்கள்.

அஸ்ஸாம் மற்றும் இந்தியாவின் பிற பகுதியிலுள்ள மக்களுக்கே பாதிப்பு என்றும் குறிப்பிட்ட அவர், அஸ்ஸாம் மாநிலத்திற்கு நாக்பூர் அல்லது டெல்லியின் வழிகாட்டுதல்களை கேளாமல், மக்களின் குரல்களை கேட்கக்கூடிய "சொந்த முதலமைச்சர்" வேண்டும். ரிமோட் கண்ட்ரோல் டி.வி.யை கட்டுப்படுத்தலாம். ஆனால், முதலமைச்சரை கட்டுப்படுத்தக்கூடாது. இப்போது அஸ்ஸாமில் இருக்கும் முதலமைச்சர் நாக்பூர் மற்றும் டெல்லியிலிருந்து வரும் வழிகாட்டுதல்களை கேட்டு செயல்படுகிறார். மீண்டும் இதேபோன்ற முதலமைச்சர் அமைந்தால் அஸ்ஸாம் மாநிலத்திற்கு பயன் இருக்காது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய முதலமைச்சர் அஸ்ஸாமுக்கு வேண்டும். காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் குடியுரிமை சட்ட திருத்தம் நடைமுறைப்படுத்தப்படமாட்டாது என்று கூறினார்.

You'r reading முதல் அமைச்சருக்கு ரிமோட் கண்ட்ரோல் இருக்கக்கூடாது - ராகுல் காந்தி Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை