தனித்துப் போட்டி... காங்கிரஸை கழற்றி விட்ட மாயாவதி

by SAM ASIR, Oct 4, 2018, 08:51 AM IST

மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் தனித்துப் போட்டியிடப் போவதாகவும், அந்தத் தேர்தல்களில் காங்கிரஸுடன் கூட்டணி வைத்துக் கொள்ளப் போவதில்லை என்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரும், உத்திர பிரதேச மாநில முன்னாள் முதல் அமைச்சருமான மாயாவதி அறிவித்துள்ளார்.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெற வேண்டும். இந்த தேர்தலை முன்னோட்டமாக கொண்டு 2019ல் நடைபெற இருக்கிற நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபட்டு வருகிறது.

மத்தியில் ஆளும் பாரதீய ஜனதாவுக்கு எதிராக வலுவான கட்சிகளை ஒருங்கிணைக்க காங்கிரஸ் தீவிரம் காட்டி வரும் நிலையில் மாயாவதியின் நிலைப்பாடு காங்கிரஸ் வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் கர்நாடக மாநில முதல்வர் பதவியேற்பு விழாவின்போது, சோனியா காந்தியுடன் மாயாவதி காட்டிய நெருக்கம், காங்கிரஸ் மத்தியில் நம்பிக்கையையும், பொது அரங்கில் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருந்தது.

உத்திர பிரதேசத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியுடன் இணைந்து மாயாவதி பாரதீய ஜனதாவை வீழ்த்தியது அவரை நோக்கி அனைவர் கவனத்தையும் திருப்பியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு எதிராக மகா கூட்டணி அமைப்பதில் மாயாவதி முக்கிய பங்கு வகிப்பார் என்ற நம்பிக்கை தென்பட்ட நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் மாயாவதி காங்கிரஸை கைகழுவி, அஜித் ஜோகியுடன் கூட்டணி அமைத்துள்ளார்.

ராகுல்காந்தியும் சோனியாவும் மாநில மற்றும் மக்களை தேர்தல்களில் பகுஜன் சமாஜ், காங்கிரஸ் கூட்டணி அமைய வேண்டும் என்று விரும்புகின்றனர்.

அவர்களது நோக்கத்தில் இருக்கும் நேர்மையை என்னால் உணர முடிகிறது.

மாயாவதியின் சகோதரர் மேல் உள்ள சிபிஐ விசாரணைகளை கொண்டு,மாயாவதி எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைத்துக்கொள்ளக்கூடாது என்ற நெருக்கடியை பாரதீய ஜனதா கொடுக்கிறது.

- திக்விஜய் சிங்

ஆனால், சில தலைவர்கள் அந்த நல்ல நோக்கத்தை சிதைத்து வருகிறார்கள்.முறையான கூட்டணியை உருவாக்க காங்கிரஸ் தயாராக இல்லாததுபோல் தெரிகிறது. பாரதீய ஜனதாவை தோற்கடிக்க அவர்கள் விரும்புகிறார்களா என்ற சந்தேகமும் எழுகிறது. காங்கிரஸின் இந்தப்போக்கால்தான் நாங்கள் கர்நாடகாவிலும் சத்தீஸ்கரில் மற்ற கட்சிகளுடன் இணைய வேண்டிய நிலை ஏற்பட்டது என்று மாயாவதி கூறியுள்ளார்.

மத்திய பிரதேசத்தில் மொத்தமுள்ள 230 சட்டப்பேரவை இடங்களில் 50 இடங்களை மாயாவதி கேட்டார். காங்கிரஸ் அதற்குத் தயங்கிய காரணத்தால், சத்தீஸ்கரில் அவர் கூட்டணியை மாற்றினார். மத்திய பிரதேசத்தில் 22 இடங்களுக்கு தமது கட்சியின் சார்பில் அவர் வேட்பாளர்களை அறிவித்து விட்டார். ராஜஸ்தான் தேர்தலிலும் அவர் இடங்களை எதிர்பார்க்கிறார்.

தற்போது காங்கிரஸுக்கு அங்கு 26 இடங்கள் உள்ளன. பாரதீய ஜனதாவுக்கு 160 சட்டப்பேரவை உறுப்பினர் உள்ளனர். காங்கிரஸும் பாரதீய ஜனதாவும் மாறி மாறி ராஜஸ்தானில் ஆட்சிக்கு வரும் நிலையில் வரும் தேர்தலில் தனித்தே 200 இடங்களை பிடித்து விடலாம் என காங்கிரஸ் நம்புகிறது.

ராஜஸ்தானில் தொகுதி பங்கீடு என்பதற்கு காங்கிரஸுக்கு விருப்பமில்லாத ஒன்றாகவே உள்ளது. ஆனாலும், பகுஜன் சமாஜ் கூட்டணியில் இல்லாமற்போனால், உத்திர பிரதேசத்திற்கு நெருக்கமான கிழக்கு தொகுதிகளில் காங்கிரஸ் சரிவை சந்திக்க நேரலாம் என்ற பார்வையும் உள்ளது.

மாயாவதியின் சகோதரர் மேல் உள்ள சிபிஐ விசாரணைகளை கொண்டு,மாயாவதி எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைத்துக்கொள்ளக்கூடாது என்ற நெருக்கடியை பாரதீய ஜனதா கொடுக்கிறது என்று மத்திய பிரதேச முன்னாள் முதல் அமைச்சரான காங்கிரஸின் திக்விஜய் சிங் கருத்து தெரிவித்திருந்தார். அதைக் கேட்டு கோபம் கொண்ட மாயாவதி, திக்விஜய் சிங்கை பிஜேபியின் ஏஜெண்ட் என்று கூறியுள்ளார்.

"உணர்ச்சி மிகுதியில் இனிப்பான மற்றும் கசப்பான கருத்துகள் கூறப்பட்டு விடலாம். ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி மீது மாயாவதி கொண்டுள்ள நம்பிக்கை எல்லா தடைகளையும் மேற்கொண்டு எங்களை இணைக்கும்," என்று காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான ரண்தீப் சுர்ஜிவாலா தெரிவித்துள்ளார்.
2019 நாடாளுமன்ற தேர்தலில் மாயாவதி தங்களுடன் கைகோப்பார் என்று காங்கிரஸ் நம்பி வருகிறது.

You'r reading தனித்துப் போட்டி... காங்கிரஸை கழற்றி விட்ட மாயாவதி Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை