` கட்சிகளை விமர்சிப்பதில் கவனம்! - தம்பிகளுக்கு சீமான் கோரிக்கை
Focus on criticizing parties!-Seeman request
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் கட்சி நிர்வாகிகளுக்கு சில அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். இதுதொடர்பாக, சீமானின் அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது அக்கட்சியின் இணையத்தள பாசறை.
அந்த அறிவிப்பில், ' நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருகின்ற சூழலில் பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களது அரசியல் வியூகங்களை பொறுத்து பல முடிவுகளை எடுத்து வருகின்றன. நாம் தமிழர் கட்சி இத்தேர்தலில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 20 தொகுதிகளில் ஆண்களையும் 20 தொகுதிகளில் பெண்களையும் வேட்பாளராக நிறுத்தி சமச்சீரான சமூகத்தை படைப்பதற்கான புரட்சியை முன்னெடுத்திருக்கிறது. நாம் தமிழர் கட்சியின் சார்பாக கற்றறிந்த மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், படித்த இளைஞர்கள், அறிவார்ந்த பெண்கள் பேராசிரியர்கள் என தகுதி வாய்ந்த 40 வேட்பாளர்களை நாம் முன்னிறுத்த இருக்கிறோம். இந்நிலையில் நமக்கு இருக்கிற சக்தி வாய்ந்த சமூக ஊடகங்களை முன் எப்போதும் இல்லாத அளவிற்கு ஆக்கபூர்வமான வகையில் முழுமூச்சுடன் பயன்படுத்திட வேண்டிய அவசியம் இருக்கிறது.
எனவே நமது உறவுகள் இந்த காலச்சூழலை நன்கு உணர்ந்து கொண்டு பிற கட்சிகளின் கூட்டணிகள், பிற கட்சிகளின் மீதான விமர்சனங்கள் ஆகியவற்றை தவிர்த்துவிட்டு நாம் தமிழர் கட்சியின் நேர்மறை கருத்துக்களை ,அரசியல் தனித்துவங்களை, நாம் தமிழர் கட்சியின் ஆட்சி செயல்பாட்டு வரைவு கருத்துக்களை, நமது தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் காணொளித்துண்டுகளை பரப்பி நமக்கான அரசியலை மாண்பு மிகுந்த உளவியலோடு நாம் முன்னெடுக்க வேண்டும்.
பிறரை விமர்சிக்கின்ற நேரத்தில் நமது கருத்துக்களை இன்னும் முழுமூச்சுடன் வேகமாக பரப்பும் போது மக்களிடையே நாம்தமிழர் பரவலாக சென்று சேரும். எனவே மற்ற கட்சிகளின் மீதான தேவையற்ற விமர்சனங்களை தவிர்த்து விட்டு நாம் நாம் தமிழர் கட்சியின் மேன்மைகளை தனித்துவங்களை சமூக ஊடகங்கள் வாயிலாக பரப்பிட வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
You'r reading ` கட்சிகளை விமர்சிப்பதில் கவனம்! - தம்பிகளுக்கு சீமான் கோரிக்கை Originally posted on The Subeditor Tamil
More Politics News