முத்தரசன்,பேராயர் எஸ்ரா சற்குணத்திற்கு எதிராக கொலை மிரட்டல் விடுப்பதா? டாக்டர் ராமதாசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

Mk Stalin condemns Dr Ramadoss on his threatening statement against Esra Sargunam and mutharasan

by Nagaraj, Apr 30, 2019, 14:19 PM IST

இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் முத்தரசன், பேராயர் எஸ்றா.சற்குணம் போன்ற உயர்ந்த அணுகுமுறை கொண்ட ஜனநாயகவாதிகளுக்கு எதிராக கொலை மிரட்டல் விடுக்கும் அளவுக்கு ஒரு பதற்றமான சூழலை தெரிந்தோ, தெரியாமலோ உருவாக்கிட வேண்டாம் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பொன்பரப்பி வன்முறையைக் கண்டித்து கடந்த 24-ந் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், பேராயர் எஸ்றா.சற்குணம், ஆகியோருக்கு எதிராக வன்முறையைத் தூண்டிவிடும் விதத்தில் பாமகநிறுவனர் ராமதாஸ் பேசாத ஒன்றை பேசியதாக இட்டுக்கட்டி ஓர் அறிக்கை வெளியிட்டு பதற்ற சூழ்நிலையை உருவாக்கியிருப்பதற்கு வருத்தத்தையும் கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட அனைத்து சமுதாய மக்களுக்காகவும் போராடி வரும் கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. சமூக நீதிப் போராளி பேராயர் எஸ்றா.சற்குணம் தனது வாழ்நாள் முழுவதும் மக்களின் சமூக, கல்வி முன்னேற்றத்திற்காக பாடுபட்டு வருபவர். சமூக நல்லிணக்கத்திற்காக உழைக்கும் இவர்கள் மீது கூட, ராமதாசுக்கு நம்பிக்கையில்லாமல் போனது மிகுந்த வேதனையளிக்கிறது. யார் மீதுதான் அவருக்கு நம்பிக்கை என்ற கேள்வியும் எழுகிறது.

அவரே ஒரு கற்பனைப் பேச்சை மனதில் செயற்கையாகக் கற்பித்து உருவாக்கிக் கொண்டு அதற்கு பதில் என்ற வகையில் ஒரு அறிக்கை வெளியிட்டு இந்த இரு தலைவர்கள் மீதும் வன்முறையை வீசும் தொலைபேசி மிரட்டல்களுக்குக் காரணமாக இருப்பது பொறுப்புள்ள முதிர்ந்த ஒரு அரசியல் கட்சியின் தலைவருக்கு அழகல்ல உரிய செயலும் அல்ல.

அமைதியாக நல்லிணக்கத்துடன் வாழும் சமுதாயங்களிடையே வெறுப்பைக் கக்கி, முத்தரசன் மற்றும் உயர்ந்த அணுகுமுறை கொண்ட ஜனநாயகவாதிகளுக்கு எதிராக கொலை மிரட்டல்கள் விடுக்கும் அளவிற்கு ஒரு பதற்றமான சூழலை தெரிந்தோ தெரியாமலோ உருவாக்குவது நமது தமிழ் சமூகத்திற்குப் பேராபத்தானது.

ஆகவே ராமதாஸ் அவர்கள் மீண்டும் இது போன்ற பதற்றச் சூழ்நிலைகள் உருவாகிட இடம் கொடுக்காமல் தமிழகத்தில் அனைத்து சமூகங்களும் நிம்மதியாகவும் அமைதியாகவும் நட்புறவோடும் வாழ்வதற்கு ஏற்ற சுமூகமான சூழ்நிலைகளை மட்டும் உருவாக்கி பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் கல்வியிலும், பொருளாதாரத்திலும் மேலும் மேலும் முன்னேறுவதற்கு வழி ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

எல்லாவற்றையும் அறிந்திருப்பவர் அவர். அவருக்கு இது நிச்சயமாக அறிவுரை அல்ல, மனப்பூர்வமான வேண்டுகோள். முத்தரசன் மற்றும் பேராயருக்கு உரிய பாதுகாப்புகளை வழங்கி மாநிலத்தில் சமூக நல்லிணக்கத்தையும் பொது அமைதியையும் உறுதியோடு பாதுகாத்திட வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தேர்தல் விதிதான் தடங்கலுக்கு காரணம்..! தங்க மங்கை கோமதிக்கு போதிய அளவு கவுரவிப்போம்...! அமைச்சர் ஜெயக்குமார் உறுதி

You'r reading முத்தரசன்,பேராயர் எஸ்ரா சற்குணத்திற்கு எதிராக கொலை மிரட்டல் விடுப்பதா? டாக்டர் ராமதாசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை