போதுமடா சாமி... பேஸ்புக்கில் பதிவிட்ட பாமக நிறுவனர் ராமதாஸ்... வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

Netizens comments againsts pmk leader dr.ramadoss for his post in facebook:

by Nagaraj, Jun 1, 2019, 15:05 PM IST

மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஒரு வேட்பாளரின் அனுபவம் என்ற ரீதியில் போதுமடா சாமி.. என்று பாமக நிறுவனர் டாக்டர் . ராமதாஸ், பேஸ்புக்கில் கற்பனையாக வெளியிட்ட பதிவுக்கு ஏராளமான எதிர்மறை கருத்துக்களால் அவரை தாறுமாறாக கிண்டலடித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று தனது முகநூல் பக்கத்தில்,
தேர்தலில் பணத்தை தண்ணீராகச் செலவழித்து வெற்றி பெற்றும்,மத்தியில் செல்வாக்கு இல்லாமல்போன ஒரு கூட்டணியின் எம்.பி. புலம்புவதாக பல புள்ளிவிவரங்களை சொல்லிவிட்டு.. அந்தப் பதிவின் இறுதியில் ‘இது முழுக்க முழுக்க கற்பனையே’ என்று அடைப்புக் குறிக்குள் குறிப்பிட்டிருக்கிறார் ராமதாஸ்.யாரைக் குறிப்பிட்டுச் சொல்லியிருப்பார் என்ற யூகங்கள் ஒரு பக்கம் றெக்கை கட்டிப் பறக்க, மறுபுறமே இது உங்க கட்சியின் அனுபவமா? என்ற ரீதியில் தான் முழுக்க முழுக்க கமெண்டுகள் குவிந்து ராமதாஸை கிறுகிறுக்க வைத்துள்ளனர்நெட்டிசன்கள்.

‘போதுமடா சாமீ’ என்ற தலைப்பில் அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவு இதுதான் :

வேட்பாளராக விருப்ப மனுத்தாக்கல் செய்ததுமே பதற்றம் தொற்றிக்கொண்டது. நேர்காணலுக்கு அழைக்கப்பட்டபோது, முன்பணமாக ரூ.5 கோடி செலுத்தும்படி செல்லமாக ஆணையிட்டது கட்சித் தலைமை. வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன் எனக்கு ஏகப்பட்ட மகிழ்ச்சி. பிறகுதான் தெரிந்தது.. அப்போது மட்டும்தான் மகிழ்ச்சி என்பது! வேட்பாளர் தோரணையுடன் தொகுதிக்குள் நுழைந்ததுமே தொடங்கியது தொல்லை. ‘‘அண்ணே, தொகுதி முழுக்க உங்க பேரையும், சின்னத்தையும் வரையணும்ணே’’ என்றான் நிர்வாகி. ‘‘பேஷா வரையுங்க’’ என்று நான் சொன்னது பெரும் குற்றம். அடுத்த நாளே நிர்வாகிகள் வந்தனர் என்னை நாடி. சுவர் விளம்பரச் செலவாக அவர்கள் கொடுத்த பில்லோ ரூ.2 கோடி. விளம்பர பில்லை கட்டுவதற்காக வீட்டை விற்றேன்.

முதல்கட்ட பூத் செலவுக்கு ரூ.4 கோடி திரட்ட வயல், தோட்டத்தை விற்றேன். வாக்கு சேகரிக்கவும், அதற்காக வந்தவர்களுக்கு சரக்கு வாங்கவும் தினசரி செலவு தலா ரூ.10 லட்சம். ஆக, 20 நாட்களுக்கு ரூ.2 கோடி காலி. இடைக்கால பூத் செலவுக்கு இன்னும் ஒரு 2 கோடி.

பணம் தண்ணியாக கரைகிறதே என்று நிர்வாகியிடம் புலம்பியபோது, ‘‘தம்பி, தண்ணிக்கு தனி செலவு’’ என்றார். ஆம், தலைவர் ஓட்டு கேட்டு வந்தபோது, கூட்டத்துக்கு ஆள்பிடிக்க தலைக்கு ஒரு குவார்ட்டர், பிரியாணி, ரூ.200 என ஒரு கோடி காலி.

செலவுகளை சமாளிக்க முடியாமல் திணறியபோது என்மீது இறங்கியது பேரிடி. ‘‘அண்ணே, ஒரு ஓட்டுக்கு ரூ.500 என 12 லட்சம் ஓட்டுக்கு ஒரு 60 கோடி எடுத்து வையுங்கண்ணே’’.

‘‘அடப்பாவிகளா, ஒட்டுமொத்த சொத்தை விற்றாலும் 60 கோடியில் பாதிகூட தேறாதேடா’’ என்று கதறினேன். ‘‘மத்தியில் அடுத்து நாமதான். விட்டதை எல்லாம் 6 மாசத்துல அள்ளிடலாம்’’ என்று தேற்றினான் அடிப்பொடி.

ஒரு பக்கம் பகுத்தறிவு தடுத்தாலும், இன்னொரு பக்கம் பேராசை தூண்டியதால் வட்டிக்கு வாங்கி ஓட்டுக்கு தந்தேன். அப்போதும் செலவு ஓயவில்லை. கட்சிக்காரர்கள் எல்லாம் கிருஷ்ணர் போல. கர்ணனிடம் பிடுங்கியது போதாது என, தர்மத்தால் கிடைத்த புண்ணியத்தையும் பறித்து சாகடித்ததுபோல, கடைசிகட்ட பூத் செலவுக்காக என்னிடம் நிர்வாகிகள் கேட்டது ரூ.4 கோடி. தேர்தலே முடிந்தும், செலவு முடியவில்லை. விருந்துக்காக என்னிடம் பிடுங்கியது ரூ.1 கோடி.

இவ்வளவு செலவு செய்தும் கிடைக்காமல் போகுமா வெற்றி! ஏழரை லட்சம் ஓட்டு வாங்கி நாலரை லட்சம் மார்ஜினில் வென்றேன்! பிறகுதான் தெரிந்தது நாங்கள் மட்டும்தான் வென்றோம். எங்கள் கூட்டணி படுதோல்வி அடைந்தது என்று.

மத்திய அமைச்சர் பதவி கனவோடு கலைந்தது. வாங்கிய கடன் கழுத்தை நெரிக்கிறது. வாங்கிய ஏழரை ஓட்டுக்கு 81 கோடி செலவு. சராசரியாக ஒரு ஓட்டு விலை ரூ.1,000-க்கும் மேல். சொத்தை விற்றுக் கொடுத்தது ரூ.25 கோடி. மீதம் 50 கோடிக்கு மாத வட்டி மட்டும் ரூ.1 கோடி. மக்களவை உறுப்பினருக்கான மாத ஊதியமோ ரூ.2 லட்சம்.

கட்ட வேண்டிய வட்டியோ ரூ.1 கோடி. என்ன செய்வேன்? நான் எம்.பி. மட்டும் ஆகவில்லை. எம்ட்டியாகவும் (Empty) ஆனேன். அதனால் தொகுதிக்கும், பார்லி.க்கும் செல்லாமல் தலைமறைவாகப் போகிறேன்.

அடேங்கப்பா.. போதுமடா சாமி!(மக்களவைத் தேர்தலில் வென்ற ஒரு வேட்பாளரின் புலம்பல்.. இது முழுக்க முழுக்க கற்பனையே) என்று முடித்துள்ளார்.

இவ்வாறு பேஸ்புக்கில் டாக்டர் ராமதாஸ் பதிவிட்டுள்ளதற்கு, ஏராளமான கமெண்ட்ஸ் குவிந்துள்ளன. ஆனால் அவை அத்துனையுமே ராமதாசுக்கு எதிரானவை என்பது தான் குறிப்பிடத்தக்கது.

ஓபிஎஸ் மகனத் தானே சொல்றீங்க என்று ஒரு த்தரும், இல்ல உங்க கட்சி மத்திய சென்னை வேட்பாளர் சாம்பால் நிலைமையை சொல்றீங்களா? , 500 கோடிய ஆட்டையப் போட்டதுக்கு இப்படிக் கணக்கு சொல்லி சமாளிக்கிறீங்களா? இவ்வளவு செலவழிச்சு ஜெயிச்சவன் பாடு கூட பரவாயில்லை, தோத்தவன் நிலைமை எப்படி இருக்கும்? என்றெல்லாம் கமெண்ட் அடித்து ராமதாஸை கடுப்பேற்றியுள்ளனர்.

இதில் ஒருவர், அவன் 60 கோடியசெலவழிச்சு ஜெயிச்சுட்டான் சரி பரவாயில்லை.. சார்வாள் 500 கோடியை அப்டியே அமுக்கிட்டேளே, கில்லாடி சார்வாள் நீங்க என்று ராமதாஸை படுகிண்டல் செய்துள்ளார். கமெண்டுகள் அனைத்துமே இதே ரீதியில் கொட்டிக் கிடப்பதால் ஏண்டா.. இந்தப் பதிவைப் போட்டோம் என்ற பரிதாப நிலைமைக்கு ஆளாகியுள்ளார் டாக்டர் ராமதாஸ் என்றால் மிகையாகாதுதான்.

You'r reading போதுமடா சாமி... பேஸ்புக்கில் பதிவிட்ட பாமக நிறுவனர் ராமதாஸ்... வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை