ஜெயலலிதா காரில் பயணம்.. சசிகலா பெயரை கேட்டு பதுங்கும் அமைச்சர்கள்.. அதிமுகவில் அடுத்து என்ன?

பெங்களூரு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சசிகலா, ஜெயலலிதாவின் காரில் அதிமுக கொடி கட்டி புறப்பட்டு சென்றது அதிமுகவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கருத்து சொல்ல பல அமைச்சர்கள் தயங்கி மறுக்கின்றனர்.

கடந்த 2017ம் ஆண்டு டிசம்பரில் முதல்வர் ஜெயலலிதா மறைந்த போது, ஓ.பன்னீர்செல்வம் தற்காலிக முதல்வராக பொறுப்பேற்றிருந்தார். அப்போது, சசிகலாவை அதிமுகவின் தற்காலிக பொதுச் செயலாளராக பொதுக் குழு தேர்வு செய்தது. ஓ.பன்னீர்செல்வம் 2018ம் ஆண்டு பிப்ரவரி 5ம் தேதி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். மறுநாள், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூடி, சசிகலாவை முதலமைச்சராக தேர்வு செய்தனர். இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தினார். அவருக்கு ஆதரவாக 12 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே சென்றனர். ஆனால், சசிகலா தலைமையில் மற்ற எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கூவத்தூர் ரிசார்ட்டில் அணிவகுத்தனர். திடீர் திருப்பமாக சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு தண்டனையை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தது. இதையடுத்து, தனக்கு பதிலாக எடப்பாடி பழனிசாமியை முதல்வராக தேர்வு செய்து விட்டு சசிகலா, பெங்களூரு சிறைக்கு சென்றார்.

இந்நிலையில், கடந்த 27ம் தேதியன்று அவர் விடுதலை செய்யப்பட்டார். ஆனாலும் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்ததால் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று(ஜன.31) காலை 10 மணிக்கு அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். எனினும், டாக்டர்கள் அறிவுறுத்தலின்படி ஒரு வாரம் அவர் தனிமைப்படுத்திக் கொள்ளவிருக்கிறார். இதற்காக அவர் பெங்களூருவில் ஒரு வீட்டில் சில நாட்கள் தங்கவிருக்கிறார். சசிகலா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதும், மருத்துவமனையில் இருந்து அவர் ஏற்கனவே ஜெயலலிதா பயன்படுத்தி வந்த காரில் ஏறி(TN09-BX3377) வீட்டுக்கு புறப்பட்டார். அந்த காரில் அதிமுக கொடி கட்டப்பட்டிருந்தது. இது ஒரு சர்ச்சையைக் கிளப்பி விட்டுள்ளது. சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், அவரை அதிமுகவில் மீண்டும் சேர்க்கும் வாய்ப்பே இல்லை என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார்.

இந்த நிலையில், சசிகலா எப்படி அதிமுக கொடியை பயன்படுத்தலாம் என்று சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை நீக்கி விட்டு, தற்போது அதிமுக சிறப்பாக செயல்படுகிறது. அவர் அதிமுக கொடியை பயன்படுத்துவது சட்டப்படி சரியல்ல. அவர் ஜெயலலிதா, எம்ஜிஆர் படங்களையும் பயன்படுத்தக் கூடாது என்றார். இதற்கு அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் பதிலளித்தார். அவர் பேட்டி அளிக்கையில், சசிகலா அதிமுக பொதுச் செயலாளராகவே உள்ளார். அது தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. எனவே, அவர் அதிமுக கொடியை பயன்படுத்துகிறார். இதில் ஒன்றும் சர்ச்சை இல்லை. சசிகலா தமிழ்நாட்டுக்கு திரும்பியதும் அடுத்து என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பாருங்கள்என்றார். இதைத் தொடர்ந்து, தொலைக்காட்சி நிருபர்கள் அதிமுக அமைச்சர்கள் பலரையும் தொடர்பு கொண்டு சசிகலா பற்றி பேட்டி எடுக்க முயன்றனர்.

ஆனால், ஒரு அமைச்சரும் அது பற்றி பேட்டி கொடுக்க முன்வரவில்லை. இந்த விஷயம் குறித்து பேச மாட்டேன் என்று ஒவ்வொரு அமைச்சரும் பின்வாங்கினர். அது மட்டுமல்ல. சசிகலா தொடர்பான விவாதத்தில் அதிமுக சார்பில் யாரும் பங்கேற்க மாட்டோம் என்று தொலைக்காட்சிகளுக்கு அதிமுக தரப்பில் கூறியுள்ளனர். அமைச்சர் ஜெயக்குமார் பேச்சிலும் கூட இதற்கு முன்பு போல் கடுமையே இல்லை. மழுப்பலாகவே அவர் பதிலளித்திருக்கிறார். இந்நிலையில், பிப்.7 அல்லது பிப்.9ம் தேதியன்று சசிகலா சென்னைக்கு வரவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு ஓசூரில் இருந்து சென்னை வரை பல ஊர்களில் தடபுடல் வரவேற்பு அளிக்க அ.ம.மு.க.வினர் ஏற்பாடு செய்யத் தொடங்கியுள்ளனர். சசிகலா சென்னைக்கு திரும்பியதும் அதிமுகவில் பல முக்கியப் புள்ளிகள் அவரை நேரில் சென்று சந்திக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
m-k-stalin-his-first-action
திமுகவிற்கு குடைச்சல் கொடுத்தவர்களுக்கு ஸ்டாலின் “செக்”!
how-kadampur-raju-win-against-ttv-dinakaran
டிடிவி தினகரன் கடம்பூர் ராஜுவிடம் ஏன் தோற்றார்?!
traffic-ramasamy-died-due-to-illness
சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி மரணம்!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
Tag Clouds