அமெரிக்க தேர்தலை ஆட்டுவிக்கும் கொரோனா

by Balaji, Nov 1, 2020, 15:26 PM IST

கொரோனா களேபரங்களுக்கு மத்தியில் உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் 3 ம் தேதி நடக்கிறது. அந்நாட்டு தேர்தலில் முக்கிய பிரச்சினைகளை எல்லாம் கொரோனா ஒதுக்கி வைத்துவிட்டது. அந்த அளவிற்கு தேர்தலை கொரோனா ஜுரம் தொற்றிக்கொண்டுள்ளது. பிரசாரம் தொடங்கியதுமே சீனாவின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்த டிரம்ப், முகக்கவசம் அணியாமல், இயல்பாகவே இருந்தார். கூடிய விரைவில் தொற்று கட்டுக்குள் வந்துவிடும், மாத்திரைகளை மட்டும் எடுத்தால் போதும் என்று கூலாகவே இருந்தார்.

எதிர் தரப்பான ஜனநாயக கட்சியோ கொரோனா தொற்றை கட்டுப்படுத்தாத டிரம்ப், கொரோனா தொற்று பரவலை ஊக்குவிக்கிறார் என சாடியது. அக் கட்சியின் பிரச்சார கூட்டங்களில் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி போன்ற கட்டுப்பாட்டுகள் தீவிரமாக பின்பற்றப்பட்டது. ஆனால், டிரம்பின் குடியரசு கட்சியின் பிரச்சார கூட்டங்களில் இவையனைத்தும் காற்றில் பறக்கவிடப்பட்டது. கடும் விமர்சனங்கள், எச்சரிக்கைகள் என எதற்கும் காத்து கொடுக்காமல் இருந்த டிரம்பையும் கொரோனா தொற்றிக்கொண்டது. ஆனாலும், தன்னுடைய நிலையில் உறுதியாக இருந்த டிரம்ப், சிகிச்சையில் இருக்கும்போதே முகக்கவசம் அணியாமல் காரில் ஹாயாக வெளியே வந்து தொண்டர்களுக்கு தரிசனம் கொடுத்தார்.

இதன் காரணமாக, ஜோபிடன் அவருடனான நேரடி விவாதத்தையும் ரத்து செய்துவிட்டார். ஆனாலும், டொனால்டு டிரம்ப் சளைக்கவில்லை. அமெரிக்காவில் கொரோனா மூன்றாவது அலையை எதிர்நோக்கும் நிலையிலும் முழு ஊரடங்கு எல்லாம் கொண்டுவர மாட்டேன் என திட்டவட்டமாக அறிவித்திருக்கிறார். இதையெல்லாம் கணக்கில் கொண்டுதான், டிரம்ப் கொரோனாவை பரப்பும் செயலில் ஈடுபட்டுள்ளதாக ஜோபிடன் குற்றம் சாட்டியுள்ளார். கொரோனா விவகாரம் தொடர்பான மோதல், அமெரிக்க தேர்தலில் முடிவில்லாமல் செல்கிறது. இதனிடையே ஸ்டான்போர்ட் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட ஆய்வறிக்கையின் படி, டொனால்ட் டிரம்பின் பிரசார பேரணிகளில் அதிக அளவு மக்கள் கூடுவது ஆபத்தை ஏற்படுத்துகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜூன் 20லிருந்து, செப்டம்பர் 22 வரை யான நாட்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பேரணிகள் மற்றும் பிரசார கூட்டங்களை யொட்டி, பதிவான கரோனா வழக்குகளின் பட்டியலின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. கூட்டங்களுக்கு வந்தவர்களில் 30,000க்கும் அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களில் 700 பேர் இறந்திருக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக கொரானா உலக அளவில் பிரசித்தி பெற்ற ஒரு நிகழ்வை கூட தன்வசப்படுத்தி விட்டது என்றே சொல்லலாம்.

You'r reading அமெரிக்க தேர்தலை ஆட்டுவிக்கும் கொரோனா Originally posted on The Subeditor Tamil

More World News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை