ஹெச்-1பி விசா கட்டுப்பாடு - இந்தியா திரும்புவார்களா ஐ.டி. எஞ்ஜினியர்கள்?

ஹெச்-1பி விசா - இந்தியா திரும்புவார்களா ஐ.டி. எஞ்ஜினியர்கள்?

Jul 2, 2018, 21:13 PM IST

“எங்கள் குழந்தைகள் அமெரிக்காவில் பிறந்தவர்கள். ஆகவே அவர்கள் அமெரிக்க பிரஜைகள். நானும் என் மனைவியும் வேலை இழந்தால் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டியது வரும். எங்களுக்கு கிரீன்கார்டு கிடைக்காமல் போய்விடுமோ என்று பயப்படுகிறேன்” என்கிறார் கடந்த பத்து ஆண்டுகளாக ஹெச்-1பி விசாவில் அட்லாண்டாவில் வசித்து வரும் தகவல் தொழில் நுட்ப வல்லுநர் ஒருவர். அவரது மனைவியும் தொழில்நுட்ப பணியாளர்தான்.

H1-B Usa visa

ஹெச்-1பி விசா வழங்குவதில் கட்டுப்பாடு, ஹெச்-1பி விசாதாரர்களின் ஹெச்-4 விசா பெற்ற கணவன் அல்லது மனைவி ஆகிய வாழ்க்கை துணைவர்கள் அமெரிக்காவில் பணிபுரியும் உரிமையை ரத்து செய்தல் ஆகிய டிரம்ப் அரசின் நடவடிக்கைகளால், இந்திய ஐ.டி.பணியாளர்கள் வேறு வேலைகளை தேட ஆரம்பித்துள்ளனர். அமெரிக்காவில் பணியாற்றும் இந்திய தொழில் நுட்ப வல்லுநர்கள், அவர்களின் வாழ்க்கை துணைகள், வேலைவாய்ப்பு வேண்டி வரும் எண்ணிக்கை கடந்த ஓராண்டில் நூறு சதவீதம் உயர்ந்திருப்பதாக வேலைவாய்ப்பு நிறுவனங்கள் கூறுகின்றன.

ஹெச்-1பி விசாக்கள் மூன்று ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது. மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிப்பும் வழங்கப்படும். இப்போது இந்த நீட்டிப்பு பெறும் நடவடிக்கை கடினமாகியுள்ளது. புதிய விதிகளால், முதல் மூன்று ஆண்டுகளை நிறைவு செய்வதே சிரமமான விஷயமாகியுள்ளது. ஹெச்-1பி விசாவிலிருந்து கிரீன்கார்டு பெறுவது முடியாது என்ற நிலையே பெரும்பாலும் காணப்படுகிறது. சிலர் ஈபி-5, எல்1ஏ ஆகிய மற்றைய விசாக்களை பெற முயற்சிக்கிறார்கள். சிலரோ ஸ்வீடன், மெக்ஸிகோ, போலந்து, கனடா போன்ற நாடுகளில் வேறு வேலைகளை தேடுகின்றனர்.

அமெரிக்க விசா கொள்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம் 70,000-க்கும் அதிகமான குடும்பங்களை பாதிக்கும் என்று மேன்பவர் குரூப் மற்றும் டீம் லீஸ் வேலைவாய்ப்பு நிறுவனங்கள் கூறுகின்றன.

H-1B Visa

“கடந்த ஆண்டு, சொந்த வாழ்க்கை காரணங்களால் மட்டும் சிலர் இந்தியா திரும்பி இங்கு வேலைவாய்ப்பு தேடினர். ஆனால் இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை இரண்டு முதல் மூன்று மடங்காக உயர்ந்துள்ளது” என்று அடெக்கோ குரூப் வேலைவாய்ப்பு நிறுவனத்தின் இயக்குநர் மயங்க் படேல் கூறுகிறார்.

கேரளாவிலிருந்து கனடா சென்ற மென்பொருள் வல்லுநர் ஒருவர், வட அமெரிக்க வர்த்தக ஒப்பந்தமான என்ஏஎஃப்டிஏ மூலம் அமெரிக்காவில் பணி வாய்ப்பு பெற்றார். அந்த ஒப்பந்தம் கனடா மற்றும் மெக்ஸிகோ குடியுரிமை பெற்றவர்கள் அமெரிக்காவில் பணி செய்ய அனுமதி வழங்குகிறது. இப்போது இந்த ஒப்பந்தத்தை டிரம்ப் அரசு ரத்து செய்யும் அபாயம் ஏற்பட்டுள்ளது. “நான் அமெரிக்காவில் மூன்று ஆண்டுகள் வேலை செய்கிறேன். என்ஏஎஃப்டிஏ ரத்து செய்யப்பட்டால், நான் விசாவினை இழந்து விடுவேன். கனடாவுக்கு நான் செல்லலாம் என்றால்கூட, அமெரிக்காவில்தான் வேலைவாய்ப்பு அதிகமாக உள்ளது” என்கிறார்.

H-1B Visa

ஹெச்-4 விசா வைத்திருப்பவர்களுடன், கடந்த மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்குள்ளாக அமெரிக்கா சென்றுள்ளவர்களின் நிலையும் அதிக பாதிப்புக்குள்ளாகும் என்று டீம் லீஸ் வேலைவாய்ப்பு நிறுவனத்தின் உடன்நிறுவனர் ரிட்டுபார்னா சக்ராபோர்த்தி கூறுகிறார்.

அமெரிக்க குடியேறுதல் மற்றும் குடிபுகல் துறையிடமுள்ள தகவல்படி, 2017-ஆம் ஆண்டு டாடா கன்சல்டன்ஸி நிறுவனர் 2,312 ஹெச்-1பி விசாக்களை பெற்றுள்ளது. 2015-ல் பெற்றதைபோல் பாதி எண்ணிக்கையிலேயே அவ்வகை விசாக்களை பெற முடிந்தது. இன்போசிஸ் மற்றும் விப்ரோ நிறுவனங்கள் ஹெச்-1 பி விசா பெறுவதில் முறையே 57 மற்றும் 60 சதவீத சரிவை சந்தித்தன. டெக் மஹிந்திரா மட்டுமே ஹெச்-1பி விசா எண்ணிக்கையை முன்பை விட அதிகமாக பெற்றுள்ளது.

மொத்தத்தில் அமெரிக்காவில் வேலை செய்யும் ஐ.டி.பணியாளர்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கை துணைகளின் வேலைதேடும் எண்ணிக்கை நூறு சதவீதம் உயர்ந்துள்ளது என்பதே உண்மை.

You'r reading ஹெச்-1பி விசா கட்டுப்பாடு - இந்தியா திரும்புவார்களா ஐ.டி. எஞ்ஜினியர்கள்? Originally posted on The Subeditor Tamil

More World News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை