பகலெல்லாம் பெண் இரவாகிவிட்டால் பாம்பு... திகில் கிளப்பும் திரில்லர் நீயா 2

Jai Neeya 2 movie trailer

நடிகர் ஜெய்யின் நீயா 2  புதிய ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. படத்தின் ட்ரெய்லர் எப்படியிருக்கிறது என்பதை பார்ப்பதற்கு முன்பு ஒரு சின்ன விஷயத்தை நினைவுப்படுத்த விரும்புகிறேன்.

90-களுக்கு முன்பு வெளியான த்ரில்லர் படங்கள் நியாபகம் இருக்கிறதா. நூறாவது நாள்(1984), மூடு பணி(1980), சிகப்பு ரோஜாக்கள் (1978), சாந்தி நிலையம் (1969), நெஞ்சம் மறப்பதில்லை (1963), அந்த நாள் (1954) உள்ளிட்ட படங்கள் உண்மையில் செம த்ரில் அனுபவத்தை கொடுக்கும். யார் நீ, அதே கண்கள், நீயா, சிகப்பு ரோஜாக்கள், 13ம் நம்பர் வீடு,ராசாத்தி வரும் நாள், மைடியர் லிசா போன்ற திகிலான த்ரில்லர் படங்களும் அந்த காலத்தில் ரசிகர்களை பயமுறுத்தி சாக்கை போடு போட்டது. இதுபோன்ற படங்கள் இனி வரவே வராது. காரணம் இப்போதெல்லாம் உயர்தர தொழில்நுட்பத்தை பயன்படுத்தி திகில் படம் எடுக்கிறார்கள். என்ன தான் தொழில்நுட்பம் என்றாலும், அன்றைய காலக்கட்டத்தில் வெளியான படங்களில் இருந்த ஒரு உயிர்ப்பு தன்மை இல்லை. பழைய படங்களை தழுவி , அதே பெயரில் இன்றைய காலக்கட்டத்தில் வெளியாகும் படங்களும் அந்த அளவுக்கு ஹிட் ஆவதில்லை.

கமல், ஸ்ரீபிரியா, சந்திரமோகன், ஜெய்கணேஷ், லதா, நம்பியார் உள்ளிட்ட பலர் நடிப்பில் 1979 ஆம் ஆண்டு வெளியாகி ஹிட்டடித்த நீயா படத்தை தழுவி தற்போது நீயா 2 என்னும் படம் வெளியாக உள்ளது. கமலின் நீயா படத்தில் பாம்பு பழி வாங்கும். பயங்கர த்ரில் ஆக இருக்கும். ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் பாடலை கேட்பதற்கே ஒருவித பயத்தை கொடுக்கும். தரமான படம் என்று சொல்லலாம். அப்படியான திகில் த்ரில்லர் படத்தின் இரண்டாவது பாகம் எப்படியிருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்குமே இருக்கும். அதனை பூர்த்தி செய்வார்களா என்பதுதான் கேள்விக்குறி.


நடிகர் ஜெய் தான் நீயா 2 படத்தின் நாயகன். அவருக்காக ஏங்கும் மூன்று நாயகிகளாக ராய் லக்ஷ்மி, கேதரின் தெரேசா, வரலட்சுமி சரத்குமார். இறுதிக்கட்ட பணிகள் முடிந்தும் இந்த படம் நீண்ட நாள்களாக வெளியாகாமல் இருந்தது. அண்மையில் நீயா 2 படத்தின் ரிலீஸ்தேதி அறிவிக்கப்பட்டது. படம் மே 2 ஆம் தேதி வெளியாகிறது. படத்தின் போஸ்டர்கள், டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கொடுத்துள்ளது.



இந்த படத்தில் ஜெய் முதலில் ராய் லக்ஷ்மியை உயிருக்கு உயிராய் காதலிப்பார். தவிர்க்க முடியாத காரணத்தினால் கேத்ரின் தெரசாவை திருமணம் செய்துகொள்வார். இதனை அறிந்த ராய் லக்ஷ்மி ஜெய்யை தேடி அலைவாராம். ஜெய்யின் வீட்டை தேடி கண்டுபிடித்து போகிறார். அங்கு ஜெய்யும் கேதரினும் நெருக்கமாக இருப்பதை பார்த்து கடுப்பாகிறார். ஜெய்யை அடைய முயற்சி செய்கிறார். இப்படியாக கதை நகர, திருப்புமுனையாக வரலட்சுமி கதைக்குள் நுழைகிறார். அடுத்து என்ன நடக்கிறது? ராய் லட்சுமி ஜெய்யை அடைகிறாரா இல்லையா? வரலட்சுமிக்கும் ஜெய்க்கும் என்ன தொடர்பு என்பது தான் கதை.
இன்று வெளியாகியுள்ள படத்தின் ட்ரெய்லரில், மூன்று நாயகிகளுமே பாம்பாக மாறுவார்கள் என்பது தெரிகிறது. அதிலும் ராய் லக்ஷ்மி உக்கிரமான பாம்பாக இருக்கிறார்.

``நாக தோஷம் என்றால் சாதரண விஷயம் கிடையாது’’ என்னும் வசனம் படத்தில் யாருக்கோ நாக தோஷம் இருப்பதை காட்டுகிறது. மேலும் ராய் லக்‌ஷ்மி பகலில் பெண்ணாகவும் இரவில் பாம்பாகவும் மாறுவார், கோவம் வந்தாலும் பாம்பாக மாறுவார் என்று தெரிகிறது. வரலட்சுமியின் கதாபாத்திரம் தான் சஸ்பென்ஸாகவே இருக்கிறது. படத்தில் ராய் லக்‌ஷ்மியுடனும், கேத்ரினுடனும் நெருக்கமாக இருக்கும் காட்சிகளும் இடம்பெற்றிருக்கின்றன. ஜெய்யை அடைய வேண்டும் என்று துடிக்கும் ராய் லக்‌ஷ்மி, பாம்பாக இருக்க வேண்டும் என்பதுதான் தர்மம் என்கிறார்கள் அவரை சார்ந்தவர்கள். அனைத்து எதிர்ப்புகளையும் மீறி ராய் லக்‌ஷ்மி ஜெய்யை அடைகிறாரா என்பது படத்தை பார்த்தால் தான் தெரியும். ட்ரெய்லர் த்ரில்லாக தான் இருக்கிறது. ஆனால் நீயா அளவுக்கு இல்லை என்பதுதான் உண்மை.

 

You'r reading பகலெல்லாம் பெண் இரவாகிவிட்டால் பாம்பு... திகில் கிளப்பும் திரில்லர் நீயா 2 Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - எனது குடியுரிமை குறித்து ஏன் தோண்டுகிறீர்கள்? ஆவேசப்பட்ட அக்ஷய் குமார்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்