கிராமங்களில் கொரோனா பரவல்... கமல்ஹாசனின் பரபரப்பு அறிக்கை..

Actor Kamalhaasan Statement Regarding Corona

கிராமங்களில் தான் இந்தியாவின் ஆன்மா இருக்கிறது என்பதைப் புத்தகத்தோடு நிறுத்திவிடாமல் அதை அரசு செயலில் காட்ட வேண்டும் என்று கமல்ஹாசன் பரபரப்பான அறிக்கை வெளியிட்டுள்ளார்.மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:கொரோனா நோயின்‌ தாக்கம்‌ சென்னை, திருவள்ளூர்‌, காஞ்சிபுரம்‌, செங்கல்பட்டு மாவட்டங்களில்‌ தான்‌ அதிகம்‌ இருந்தது என்ற நிலை கொஞ்சம்‌ கொஞ்சமாகக் கடந்த 10 நாட்களில்‌ மாறி இருப்பது, பரவலான ஆய்வுகள்‌ ஆரம்பித்ததும்‌ உண்மை நிலை வெளிவருவதை உணர்த்துகிறது.


நகரங்களில்‌ பரவலான ஆய்வுகள்‌ மூலம்‌ நோய்த்‌ தொற்று இருப்பதை ஆராயும்‌ அரசு, கிராமப்புறங்களின்‌மீதும்‌ அதீத கவனம்‌ செலுத்த வேண்டும்‌. நோய்த் தொற்று கண்டறிதல்‌, அதற்கான சிகிச்சைகள்‌, அது குறித்த விழிப்புணர்வு, தடுப்பு நடவடிக்கைகள்‌ கிராமங்களில்‌ அதிகப்படுத்த வேண்டிய அவசியம்‌ வந்திருப்பதற்குக் காரணமே கிராமங்களை அரசு இத்தனை நாள்‌ கண்டு கொள்ளாமல்‌ விட்டதே காரணம்‌.தமிழகத்தில்‌ பல கிராமங்களில்‌ ஆரம்பச் சுகாதார மையங்கள்‌ முறையான கட்டமைப்பு, போதிய உபகரணங்கள்‌, மருத்துவ ஊழியர்களோ இன்றி தான்‌ செயல்படுகிறது. பல நவீன மருத்துவமனைகளைக்‌ கொண்ட பெரும்‌ நகரங்கள்‌ கொரோனாவின்‌ தாக்கத்தில்‌ தள்ளாடும் போது ஆரம்பச் சுகாதார மையங்கள்‌, நோய்த் தொற்று அதிகரித்தால்‌ என்னவாகும்‌ என்பதை அரசு கவனத்தில்‌ கொள்ள வேண்டும்‌.

முறையான வசதிகள்‌ இல்லாத ஆரம்பச் சுகாதார மையங்கள்‌, அது இல்லையென்றால்‌ அருகில்‌ உள்ள நகரத்துக்குச் செல்ல வேண்டும்‌ என்ற நிலையில்‌ இருக்கும்‌ கிராமங்களில்‌ இந்த கொரோனா தொற்று வருமுன்‌ தடுக்கும்‌ நடவடிக்கையை அரசு தீவிரமாக எடுக்க வேண்டும்‌. வந்த பின்‌ கட்டுப்படுத்துவது மிகவும்‌ சவாலான விஷயம்‌ என்று உணர்ந்து செயல்பட வேண்டும்‌. கிராமங்களில்‌ இத்தொற்று பரவினால்‌ நம்‌ நாட்டிற்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள்‌ பொருளாதார அளவில்‌, மருத்துவ அளவில்‌ மட்டுமல்ல அடிப்படைத் தேவைகள்‌ கூட கிட்டாத அளவிற்குச் செல்லக்‌ கூடும்‌. இந்தியாவின்‌ ஆன்மா கிராமங்களில்‌ உள்ளது எனப் பாடப் புத்தகத்தில்‌ மட்டும்‌ சொல்லாமல்‌, செயலில்‌ காண்பித்து, கிராமங்கள்‌ இத்தொற்று பரவலில்‌ சிக்காமல்‌ இருக்க விரைந்து காத்திடுவது நம்‌ கடமை.

இவ்வாறு கமல்ஹாசன் கூறி உள்ளார்.

You'r reading கிராமங்களில் கொரோனா பரவல்... கமல்ஹாசனின் பரபரப்பு அறிக்கை.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - திரௌபதி நாயகி நடித்த படத்துக்கு பாலுமகேந்திரா விருதுடன் 20 மெடல்.. ரூ, 3 லட்சம் செலவில் எடுக்கப்பட்ட படம்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்