இளையராஜாவின் அரிய இசை பொக்கிஷங்கள் திருட்டு., போலீஸ் கமிஷனர் ஆபிசில் புகார்..

Ilayaraja complaint Against Prasath Studio Administration

1976ம் ஆண்டுக்கு முன்பு வரை தமிழகத்தில் இந்திப் பாடல்கள் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்தன. தமிழ் இசை கொஞ்சம் தடுமாற்றத்திலிருந்த காலம் அப்போது தான் ஒரு புதிய பறவை இளையராஜா என்ற பெயரில் புயலை விட வேகமாகச் சூறாவளியாக அன்னக்கிளி என்ற படம் மூலம் பறந்து வந்தது. அதன் சிறகடித்த காற்றில் இந்திப் பாடல்கள் எல்லாம் சிக்கி சின்னாபின்னமாகி மீண்டும் வடக்கு பக்கமே வாலை சுருட்டிக் கொண்டது. அதன்பிறகு தமிழ்ப் பாடல்கள் உலக அரங்கின் உச்சிக்குச் சென்றது.
இளையராஜா சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் சுமார் 40 ஆண்டுக்கும் மேலாக 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை உருவாக்கி இருக்கிறார்.

கிராமத்து, கரகாட்டக்காரன் என்றாலும் அக்னி நட்சத்திரம் படத்தின் மேற்கத்திய இசையாக இருந்தாலும் உருவாகிய இடம் தான் பிரசாத் ரெக்காடிங் ஸ்டுடியோ. இளையராஜா வீட்டில் இருந்த தருணத்தை விட இங்கு இருந்த தருணங்கள் தான் அதிகம். தனது இருப்பிடத்தை ஒரு இசைக்கோயிலாக மாற்றி இருந்தார். அங்கு எப்போதும் கோயிலின் அமைதியும், பக்தியின் வாசமும் தான் சூழ்ந்திருக்கும்.இசைக்கோயிலாக இளையராஜா மாற்றி வைத்திருந்த அந்த இடத்தை திடீரென்று சில ஆண்டுகளுக்கு முன் பிரசாத் ஸ்டுடியோவின் வாரிசுகள் இடித்து புதிதாகக் கட்டிடம் கட்ட முடிவு செய்தது. இளையராஜாவை அந்த இடத்தைவிட்டு காலி செய்யச் சொன்னது. எதற்கும் கலங்காத இளையராஜா தனது இசைக்கோயிலை இடிக்கப் போகிறார்கள் என்றதும் மனம் கலங்கினார். அதற்கு நான் இருக்கும்வரை அனுமதிக்க மாட்டேன் என்று எதிர்ப்புக் குரல் கொடுத்தார்.

உங்களுக்கு வாடகை வேண்டுமென்றாலும் தருகிறேன் இந்த இடத்தை இடிக்காதீர்கள் என்று கேட்டுப்பார்த்தார். அதனை பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம் ஏற்கவில்லை. ராஜாவுக்கு ஆதரவாக இயக்குனர்கள் தலைமையில் ஒரு போராட்டமும் பிரசாத் ஸ்டுடியோ முன் நடந்தது அப்போது ஸ்டுடியோ கதவுகள் அடைக்கப்பட்டன. யார் குரலையும் பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம் காதில் வாங்கவில்லை. பிறகு அமைதி பேச்சு நடந்தது அதிலும் சமரசம் ஏற்படவில்லை. இதையடுத்து இளையராஜா பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம் மீது 17வது சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அது நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம் சாய் பிரசாத் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இளையராஜா ஒரு அதிர்ச்சி தரும் புகார் அளித்திருக்கிறார்.
அதில்,கொரோனா லாக்டவுன் காலத்தில் எனது அறையில் திருட்டு நடந்துள்ளது. நான் இசை அமைக்க பணியாற்றும் அறைக் கதவுக்கு டூப்ளிக் கேட் சாவி தயாரித்து அங்கிருந்த எனது இசை குறிப்புக்களைத் திருடி விற்றுள்ளனர். மேலும் விலை மதிப்பில்லாத இசை குறிப்புக்களை அழித்திருக்கின்றனர். இதுபற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.இது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

You'r reading இளையராஜாவின் அரிய இசை பொக்கிஷங்கள் திருட்டு., போலீஸ் கமிஷனர் ஆபிசில் புகார்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நுரையீரலில் தொற்றுநோய்.. பிரேசிலை பதறவைக்கும் அதிபரின் `உடல்நிலை

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்