வாலிபருக்கு மொட்டை பிக்பாஸ் நட்சத்திரத்தின் மனைவி கைது
Dalit youth brutally attacked in telugu big boss fame nutan naidus home
ஐபோனை திருடியதாக கூறி வாலிபருக்கு மொட்டை 'பிக்பாஸ்' நட்சத்திரத்தின் மனைவி கைது
தெலுங்கு சினிமா தயாரிப்பாளராக இருப்பவர் நுதன் நாயுடு. இவர் ஆந்திர டிவி சானலில் ஒளிபரப்பான பிக்பாஸில் வந்துள்ளார். இவரது மனைவி பிரியா மாதுரி. விசாகப்பட்டினத்தில் உள்ள இவர்களது வீட்டில் அப்பகுதியை சேர்ந்த ஸ்ரீகாந்த் (20) என்ற வாலிபர் கடந்த பிப்ரவரி முதல் பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி முதல் இவர் வேலைக்கு செல்லவில்லை. இதன்பிறகு பிரியா மாதுரியின் ₹60 ஆயிரம் மதிப்புள்ள ஐபோன் காணாமல் போனது. அதை ஸ்ரீகாந்த் தான் திருடியிருக்கலாம் என கருதி, கடந்த 27ம் தேதி ஸ்ரீகாந்தை பிரியா தனது வீட்டுக்கு வரவழைத்து தன்னுடைய ஐபோன் காணாமல் போனது குறித்து கூறியுள்ளார். ஆனால் போனை தான் எடுக்கவில்லை என்று ஸ்ரீகாந்த் கூறியுள்ளார். நீண்டநேரம் விசாரணை நடத்தியும், தான் போனை எடுக்கவில்லை என்பதில் ஸ்ரீகாந்த் உறுதியாக இருந்துள்ளார். இதை தொடர்ந்து அவரை பிரியா விடுவித்தார். ஆனால் மறுநாள் மீண்டும் ஸ்ரீகாந்தை தனது வீட்டுக்கு வரவழைத்த பிரியா, தனது தோழிகள் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து அந்த வாலிபரை இரும்பு கம்பி மற்றும் தடியால் சரமாரியாக தாக்கினார். பின்னர் அவரை தரையில் அமர வைத்து மொட்டை அடித்தனர். இந்த விவரத்தை வெளியே சொன்னால் உயிருடன் விட மாட்டோம் என்று எச்சரித்து ஸ்ரீகாந்தை அனுப்பி வைத்தனர். ஆனால் இதுகுறித்து அவர் போலீசில் புகார் செய்தார். உடனடியாக போலீசார் வழக்கு பதிந்து விசாரணையை தொடங்கினர். பிரியாவின் வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் பரிசோதித்த போது அந்த வாலிபரை தாக்கி மொட்டை அடித்த காட்சிகள் பதிவாகி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து பிரியா, 4 பெண்கள் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். கண்காணிப்பு கேமரா காட்சிகளில் நுதன் நாயுடு இல்லாததால் போலீசார் அவரை கைது செய்யவில்லை. கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் கொரோனா பரிசோதனைக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தீர்மானித்துள்ளதாக விசாகப்பட்டினம் போலீஸ் கமிஷனர் மனீஷ் குமார் சின்ஹா கூறினார்.
You'r reading வாலிபருக்கு மொட்டை பிக்பாஸ் நட்சத்திரத்தின் மனைவி கைது Originally posted on The Subeditor Tamil