தென்னிந்திய நடிகர் சங்கம் உதயமான நாள் இன்று...

SouthIndian Artist Association Birthday Today

தியாகபூமி போன்ற சமூகச் சீர்திருத்தப் படங்களின் இயக்குநரான கே.சுப்பிரமணியம் தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை என்ற அமைப்பை ஆரம்பித்தார். அதில் ஆந்திரா, கர்நாடகா, கேரளாவைச் சேர்ந்த பல கலைஞர்களும் உறுப்பினர்களாய் இருந்தனர்.
மதுரையில் முதன்முதலாக தொடங்கப்பட்ட தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் என்கிற சங்கத்தின் நாடக கலைஞர்களுடன், திரையுலகில் வளர்ந்து வந்த காலகட்டத்தில், எம்.ஜி.ஆருக்கு நல்ல தொடர்பு இருந்தது.
1950களில், தமிழகத்தில் இயங்கி வந்த ஸ்டூடியோக்களில் தமிழ்ப்படங்கள் மட்டுமல்லாது, தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பன்மொழிப் படங்கள் தயாரிக்கப்பட்டு வந்தன.


4 மொழிகளிலும் தொழிலாளர்கள் பணியாற்றுவதற்கு வசதியாக துவக்கப்பட்டது தான் தென்னிந்திய துணை நடிகர்கள் சங்கம். ஆரம்பத்தில், அவர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத் தொகையைப் பெற்றுக் கொடுக்கும் அமைப்பாக இச்சங்கம் செயல்பட்டது.
அப்போது நடைப்பெற்ற கூட்டத்தில், நடிகர்களையும் இணைக்கும் வகையில் எம்.ஜி.ஆர், “என்னைப் போன்றவர்கள் அதில் சேரலாமா? என கேள்வி எழுப்பினார்.
இதன் பின்னரே, தென்னிந்திய துணை நடிகர் சங்கம் 1952 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14ம் தேதி அன்று தென்னிந்திய நடிகர் சங்கமாக பெயர் மாற்றம் பெற்றது.
சங்கம் தொடங்குவதற்கான நன்கொடையாக முதலில் எம்.ஜி.ஆர் தந்தது 501 ரூபாய். இதையடுத்து மருதநாட்டு இளவரசி, மர்மயோகி, சர்வாதிகாரி படங்களுக்குப் பிறகு அந்தமான் கைதி, என் தங்கை போன்ற படங்களில் கதாநாயகனாக எம்.ஜி.ஆர் ஜொலிக்க ஆரம்பித்தார். இதன் பின்னர் 1953ம் ஆண்டு, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் துணைத்தலைவரானார் எம்.ஜி.ஆர். மலைக்கள்ளன் படம் வெளிவந்து பெரும் வெற்றியைப் பெற்றபோது, 1954ம் ஆண்டு பொதுச் செயலாளரானார்.
அப்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று நான்கு மொழிக் கலைஞர்களையும் அடையாளப்படுத்தும் விதத்தில், நான்கு குழந்தைகளை ஒரு தாய் அரவணைக்கிற மாதிரியான லோகோவை உருவாக்கினார் எம்.ஜி.ஆர். சங்கத்தில் இணையும் புதிய உறுப்பினராக சேர சந்தா தொகை கொடுக்க முடியாத நடிகர்களுக்கு, எம்.ஜி.ஆர், தன்னுடைய சொந்த பணத்தைச் செலுத்தக்கூடிய அளவுக்கு அக்கறை கொண்டிருந்தார்.


மொழி ஒற்றுமையை பிரதிபலிக்கும் வகையில், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அத்தனை விழாக்களிலும் எம்.ஜி.ஆருடன் கன்னட நடிகர் ராஜ்குமார், மலையாள நடிகர் பிரேம்ந சீர், எம்.கே.ராதா, சிவாஜி கணேசன் போன்றவர்கள் கலந்து கொண்டனர்.
இதையடுத்து 1961ம் ஆண்டு, எம்.ஜி.ஆர், நடிகர் சங்கத் தலைவராக பதவி ஏற்றார். 1977ல் எம்.ஜி.ஆர் தமிழக முதலமைச்சராக ஆனதும் நடிகர் சங்கத் தலைவராக இருந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். பொதுச்செயலாளராக இருந்தவர் மேஜர் சுந்தரராஜன். அந்த காலகட்டத்தில், எம்.ஜி.ஆரின் ஆலோனையின் பேரில் வங்கியில் கடன் பெற்று 1978 ல் உருவானது.
தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டிடம். இதனை அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். திறந்து வைத்தார் கே.சுப்ர மணியமில் தொடங்கி, எம்.ஜி.ஆர், சிவாஜி, எஸ்.எஸ்.ஆர், மேஜர் சுந்தர ராஜன், வி.கே.ராமசாமி, விஜயகாந்த், ராதாரவி, சரத்குமார், நாசர் என்று பலருடைய பங்களிப்புடன் கம்பீரமாக இயங்கிக் கொண்டிருக்கிறது தென்னிந்திய நடிகர் சங்கம்.

You'r reading தென்னிந்திய நடிகர் சங்கம் உதயமான நாள் இன்று... Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - முதல்வன் படத்தில் முதலில் விஜய்தான் நடிப்பதாக இருந்தது, ஆனால் அர்ஜூன் எப்படி வந்தார்- இயக்குனர் வெளியிட்ட சீக்ரெட்..!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்