நடிகைக்கும் தங்கைக்கும் கோர்ட் கெடு.. அதுவரை கைதுக்கு தடை..

'தலைவி' பட நடிகை கங்கனா ரனாவத் கடந்த சில மாதங்களாகவே சர்ச்சை கருத்துக்கள் பகிர்ந்து பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார். சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்தின் போது வாரிசு நடிகர்கள் தான் சுஷாந்த் மரணத்துக்குக் காரணம் என்றார். பின்னர் கரண் ஜோஹர், மகேஷ் பட் போன்றவர்களை கடுமையாக விமர்சித்தார். பாலிவுட்டில் போதைப் பொருள் உபயோகம் இருக்கிறது என்றார். பிறகு மகாராஷ்டிரா ஆளும் சிவசேனா கட்சி மீது வசை மாறி பொழிந்தார். மும்பையை, அவர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல் இருப்பதாக கங்கனா கூறினார்.

இதனால் சிவசேனா கட்சியினர் அவருக்கு எதிராகப் போராட்டத்தில் குதித்தனர். வேளாண் மசோதாவை எதிர்த்துப் போராடிய விவசாயிகளை பயங்கரவாதிகள் என்ற குற்றம் சாட்டினார். இது தொடர்பாக கங்கனா மீது கர்நாடகாவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சில வாரங்களுக்கு முன் கங்கனாவும் அவரது சகோதரி ரங்கோலியும் மத துவேசம் தூண்டி மோதல் ஏற்படும் வகையில் இணையதளத்தில் கருத்து தெரிவித்ததாக மும்பை போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

மும்பையைச் சேர்ந்த காஸ்டிங் டைரக்டர் முனவர் அலி சயீத் பாந்த்ரா மெட்ரோபாலிட்டன் கோர்ட்டில் இதுகுறித்து மனுத் தாக்கல் செய்தார். அதில் கங்கனா, ரங்கோலி தெரிவித்த கருத்துகள் மத உணர்வுகளைப் புண்படுத்தியது மட்டுமில்லாமல், கலவரத்தைத் தூண்டுவதாக இருக்கிறது. அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.மனுவை விசாரித்த மும்பை மாஜிஸ்திரேட் கோர்ட் நடிகை கங்கனா மற்றும் சகோதரி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த போலீசாருக்கு உத்தரவிட்டது. பாந்த்ரா போலீசார் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணைக்கு ஆஜராகுமாறு அவர்களுக்கு ஏற்கனவே 2 முறை போலீசார் சம்மன் அனுப்பினர் ஆஜராகவில்லை.

தற்போது பாந்த்ரா போலீசார் 3-வது முறையாகச் சம்மன் அனுப்பி உள்ளனர். கங்கனா வருகிற 23 ஆம் தேதியும், அவர் சகோதரி 24 ஆம் தேதியும் பாந்த்ரா போலீஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஆஜராகவில்லை.இதற்கிடையில் கங்கனா மும்பை ஐகோர்ட்டில் ஒரு மனுத் தாக்கல் செய்துள்ளார். அதில் நான் மும்பை வர வேண்டுமென்றால் என் மீது போலீஸில் பதிந்துள்ள வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் எனக் கேட்டிருக்கிறார். கங்கனா மீது பாந்த்ரா போலீசார் வழக்குப் பதிவு செய்து 3 முறை சம்மன் அனுப்பினர். ஆனால் கங்கனா விசாரணைக்கு ஆஜராகவில்லை. மும்பை வந்தால் தன்னை போலீசார் கைது செய்யக் கூடும் என்பதால் கங்கனா வழக்கை ரத்து செய்யக் கேட்டு ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்திருக்கிறார்.கங்கனா தனது சொந்த ஊரான மனாலியிலிருந்து மற்ற ஊர்களுக்கு செல்கிறார். மும்பை பக்கம் சமீபகாலமாகச் செல்லாமல் இருக்கிறார்.

இந்நிலையில் ஐகோர்ட் கங்கனா வழக்கை ஷிண்டே மற்றும் எம் .எஸ்.கர்னிக் என 2 நீதிபதிகள் கொண்ட் பெஞ்ச் விசாரித்து இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில்,2021ம் ஆண்டு ஜனவரி மாதம் 8ம் தேதி மதியம் 12 முதல் 2 மணிக்குள் கங்கனாவும் போலீஸ் விசாரணைக்கு ஆஜராக வேண்டும். அதுவரை இருவரையும் கைது செய்யக்கூடாது. அடுத்த விசாரணை ஜனவரி 11ம் தேதிக்குத் தள்ளி வைக்கப்படுகிறது என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

You'r reading நடிகைக்கும் தங்கைக்கும் கோர்ட் கெடு.. அதுவரை கைதுக்கு தடை.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நிவர் புயல் இன்று நள்ளிரவு காரைக்காலில் கரையை கடக்கும்.. வானிலை ஆய்வு மையம் தகவல்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்