இந்திராகாந்தியை சந்திக்கும் பிரபாஸ்..?

நடிகர் பிரபாஸ் பாகுபலி படத்துக்கு பிறகு சாஹோ படத்தில் நடித்தார். இது பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை. இந்நிலையில் ராதே ஷ்யாம் படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். காதல் பின்னணியில் இதன் கதை அமைக்கப்பட்டிருக்கிறது. இதன் படப்பிடிப்பு கொரோனா கால இடைவெளிக்கு பிறகு மீண்டும் தொடங்கி நடக்கிறது.

வெளி நாட்டில் இதன் படப்பிடிப்பை தொடங்கிய நிலையில் அங்கு படப்பிடிப்பு நடத்த பல்வேறு கட்டுப்பாடுகளைப் படக் குழு எதிர்கொண்டது. இப்படத்தில் பிரபாஸ் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். ஒரு கதாபாத்திரம் தற்போதைய காலகட்டத்தில் உள்ளது போலவும் இன்னொரு கேரக்டர் கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த கதாபாத்திரம் போலவும் அமைக்கப்பட்டிருக்கிறது.

சமீபத்தில் ஐதராபாத் ராமோ ஜிராவ் ஸ்டுடியோவில் இதன் படப்பிடிப்பு நடந்தது. அதில் மறைந்த இந்திரா காந்தியை பிரபாஸ் சந்தித்துப் பேசுவது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. இதற்காகப் பிரதமர் அலுவலகம் போல் அரங்கு அமைக்கப்பட்டது. பிரபாஸ் எதற்காக இந்திராகாந்தியை சந்திக்கிறார் என்பது சஸ்பென்ஸாக வைக்கப்பட்டிருக்கிறது இதுபற்றி அறியப் படம் திரைக்கு வரும்வரை காத்திருக்க வேண்டும் என்கிறது படக் குழு.

இப்படத்தையடுத்து ஆதி புருஷ் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் பிரபாஸ்.இதன் படப்பிடிப்பு அடுத்த வருடம் தொடங்கி 2022ம் ஆண்டு திரையிடத் திட்டமிடப்பட்டிருக்கிறது. இது ராமாயணத்தை மையமாக வைத்து உருவாகிறது. ராமராக பிரபாஸ் நடிக்கிறார். ராவணனாக இந்தி நடிகர் சயீப் அலிகான் நடிக்கிறார். இதற்கிடையில் பிரபாஸ், கே ஜி எப் பட இயக்குனர் பிராஷாந்த் நீல் இயக்கும் ஆக்‌ஷன் படத்தில் நடிக்க உள்ளார். இந்த 3 படங்களுமே தமிழ். தெலுங்கு, இந்தி, மலையாளம் கன்னடம் என 5 மொழிகளில் உருவாக உள்ளது.

You'r reading இந்திராகாந்தியை சந்திக்கும் பிரபாஸ்..? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - செல்போனில் வாக்காளர் அடையாள அட்டை தமிழகத்தில் அமல்படுத்த தேர்தல் ஆணையம் திட்டம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்