அடாத மழையில் விடாமல் நடித்த ஹீரோ.. அரசியல் பட படப்பிடிப்பு விரைந்து முடிக்க திட்டம்..

ஈஸ்வரன் படத்தைத் தொடர்ந்து சிலம்பரசன் நடித்து வரும் படம் மாநாடு. சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் நிறுவனம் தயாரித்துவரும் இந்தப் படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். அரசியல் பின்னணியில் உருவாகி வரும் இந்தப்படத்தில் அப்துல் காலிக் என்கிற இஸ்லாமிய இளைஞன் கதாபாத்திரத்தில் சிலம்பரசன் நடித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு, இந்தப்படத்தில் வித்தியாசமான தோற்றங்களில் சிலம்பரசனின் கதாபாத்திர போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடம் வியப்பை ஏற்படுத்தின.கடந்த சில நாட்களாகப் பாண்டிச்சேரியில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. அங்கே திட்டமிட்டபடி வெளிப்புற காட்சிகளை படமாக்கும் போது புயல் மற்றும் மழை காரணமாகப் படப்பிடிப்பு நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது.

அதேசமயம் அந்த சமயத்திலும் கூட, சிலம்பரசனின் ஒத்துழைப்பால் ஒருநாளை கூட வீணாக்காமல், உள்ளரங்கு காட்சிகள் அனைத்தையும் திட்டமிட்டதற்கு முன்னதாகவே படமாக்கியுள்ளார் இயக்குநர் வெங்கட் பிரபு. அதன் பின்னும் மழை விடாமல் தொடர்ந்ததால் தான், மாநாடு படக்குழுவினர் வேறு வழியின்றி சென்னை திரும்பவேண்டிய சூழல் ஏற்பட்டது. விரைவில் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக மீண்டும் பாண்டிச்சேரி மற்றும் ஏற்காடு கிளம்புகிறது மாநாடு படக் குழு. சிலம்பரசன் டி.ஆர் நடித்துள்ள ஈஸ்வரன் படம் மிக விரைவாக முடிக்கப்பட்டது.

அதேபோல் மிகப் பெரிய பட்ஜெட், அரசியல் படம் என்பதால் அதிக எண்ணிக்கையிலான துணை நடிகர்கள் கூட்டம் என இருந்தாலும் கூட, மாநாடு படமும் திட்டமிட்டதற்கு முன்னதாகவே படப்பிடிப்பு முடிவடைந்து உரிய நேரத்தில் ரிலீஸுக்கும் தயாராகிவிடும் என்று படக்குழுவினர் கூறியுள்ளார்கள்.இந்த சுறுசுறுப்பையும் வேகத்தையும் சிலம்பரசன் டி.ஆர். தொடர்ந்தார் என்றால் நிச்சயமாக வருடத்திற்கு மூன்று படங்களை அவரால் கொடுக்க முடியும் என்று திரையுலகில் பேச ஆரம்பித்து விட்டனர்.சிலம்பரசன் கொரோனா கால ஊரடங்கு தளர்வில் ஈஸ்வரன் படப்பிடிப்பில் கலந்து கொண்டபோதே அவரிடம் புதிய வேகம் தென்பட்டது. அப்படம் முடிவடைந்த விட்ட நிலையில் பொங்கல் தினமான 2021 ஜனவரி 14 தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து ஓரீரு மாதத்தில் மாநாடு படம் வெளியாகும் என்று தெரிகிறது. இதையடுத்து சிம்பு யார் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்பது பற்றி இன்னும் அறிவிக்கப்பட வில்லை. ஏ.ஆர்.முருகதாஸ். லோகேஷ் கனகராஜ் போன்றவர்களின் பெயர்கள் கூறப்பட்டு வருகிறது. இதற்கிடையில் சிம்பு நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கிய போடா போடி படத்தின் 2ம் பாகம் உருவாக்க உள்ளதாக முதல்பாகம் தயாரித்த பதம் குமார் சமீபத்தில் அறிவித்தார். இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவாரா அல்லது வேறு இயக்குனர் இயக்குவாரா என்பது முடிவாகவில்லை.

You'r reading அடாத மழையில் விடாமல் நடித்த ஹீரோ.. அரசியல் பட படப்பிடிப்பு விரைந்து முடிக்க திட்டம்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பிரைவசி சினிமா தியேட்டர் புது திட்டம் அமல்.. ரூ 3999 செலுத்தினால் 25 பேர் படம் பார்க்கலாம்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்