10 வருட சினிமா பயணம்: விஜய் சேதுபதிக்கு பிரபல இயக்குனர் பரிசு..

நடிகர் விஜய் சேதுபதி திரை துறைக்கு வந்து 10 வருடம் ஆகிறது. இதையொட்டி அவருக்கு திரையுலகினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தற்போது விக்னேஷ் சிவன் இயக்கும், காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார். ஜோடியாக நயன்தாரா, சமந்தா நடிக்கின்றனர். விஜய் சேதுபதி 10 வருட சினிமா பயணத்தை பாராட்டும் வகையில் அவர் நடித்த படத்திலிருந்து அவர் பேசிய பிரபல வசங்களை இயக்குனர் விக்னேஷ் சிவன் வீடியோவாக தொகுத்து அவருக்கு பரிசளித்தார். அதைப் பார்த்து விஜய் சேதுபதி மகிழ்ச்சி அடைந்து அவருக்கு நன்றி கூறினார். விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதி இருவரும் ஏற்கனவே நானும் ரவுடிதான் படத்தில் இணைந்து பணியாற்றினர். நடிகர் விஜய் சேதுபதி ஹீரோவாக உயர்வதற்கு பல வருடங்கள் காத்திருந்தார். கூத்து பட்டறையில் இவர் பணியாற்றினார்.

எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் பாக்ஸிங் காட்சியை வேடிக்கை பார்ப்பவராக, புதுபேட்டை படத்தில் நண்பராக, லீ படத்தில் கால்பந்து வீரராக, வெண்ணிலா கபடி குழுவில் கபடி வீரராக என பல படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். சீனு ராமசாமி இயக்கிய தென் மேற்கு பருவகாற்று படத்தில் முதன்முறையாக ஹீரோவாக நடித்தார். அப்படம் தேசிய விருது வென்றது. அதன் பிறகும் அவர் இரண்டு ஹீரோ கதைகளில் நடித்தார். பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும் போன்ற படங்கள் அவருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது. அவருக்கென ரசிகர்கள் உருவானார்கள். மன்றங்களும் உருவாகின. 10 வருடத்தில் ஏராளமான படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை ஹீரோவாக தமிழ் திரையுலகில் பிடித்திருக்கிறார். ஆனாலும் ரஜினிகாந்த் நடித்த பேட்ட, விஜய் நடித்துள்ள மாஸ்டர் படங்களில் வில்லன் வேடம் ஏற்று நடித்தார்.

ஹீரோ இமேஜ் பற்றி கவலைப்படாமல் அவர் வில்லன் வேடங்களையும் ஏற்பது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பையே அவருக்கு பெற்றுத்தந்துள்ளது தவிர தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்திருக்கிறார். இந்தியில் விரைவில் அறிமுகமாக உள்ளார். நடிப்பு பற்றிய கவனத்தில் இருந்தாலும் அவ்வப்போது சமூக கருத்துக்களும் பொது வெளியில் பகிர்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன் அவர் இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை படமாக உருவாக விருந்த 800 என்ற படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். அதற்கு தமிழ் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பட தரப்பிலும் முரளிதரனும் பல விளக்கங்கள் அளித்தும் அதை யாரும் ஏற்கவில்லை. இதையடுத்து அப்படத்திலிருந்து விலகிக் கொள்ளும்படி முத்தையா முரளிதரனே கேட்டுக்கொண்டதையடுத்து அதிலிருந்து நன்றி வணக்கம் சொல்லி விலகினார் விஜய் சேதுபதி. விஜய் சேதுபதி தற்போது மாமனிதன் லாபம் யாதும் ஊரே யாவரும் கேளிர், துக்ல தர்பார், காத்து வாக்குல ரெண்டு காதல், கொரோனா குமார், அன்னபெல்லெ சுப்ரமணியம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

You'r reading 10 வருட சினிமா பயணம்: விஜய் சேதுபதிக்கு பிரபல இயக்குனர் பரிசு.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அடுத்தது என்ன? ஜனவரி 3ல் மதுரையில் ஆலோசனை அழகிரி பேட்டி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்