இந்தியன் - 2 பட பிரச்சனை : இரு தரப்பினரும் கலந்து பேசி தீர்வு காண உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

இந்தியன் - 2 படத்தை முழுமையாக முடித்து கொடுக்காமல் இயக்குனர் சங்கர் பிற படங்களை இயக்க தடை விதிக்கக் கோரி லைகா நிறுவனம் சார்பில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்யபட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இயக்குனர் சங்கர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 2022ம் ஆண்டு மே மாதம் முதல் ராம்சரண் நடிக்கும் தெலுங்கு படத்தை இயக்குனர் சங்கர் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும், வரும் ஜூன் மாதம் முதல் அக்டோபர் வரையிலான ஐந்து மாதங்களில் படத்தை முடித்து கொடுத்து விடுவார் எனவும் தெரிவித்தார்.

தயாரிப்பு நிறுவனம் சங்கருக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளை கூறியுள்ளதாகவும், அவற்றை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்திய சங்கர் தரப்பு வழக்கறிஞர், நடிகர் விவேக் இறந்து விட்டதால் அவர் நடித்த பகுதியை மீண்டும் எடுக்க வேண்டியுள்ளதாகவும் சங்கர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த விவரங்களை மறைத்து இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார். லைகா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இயக்குனர் சங்கருக்கு ஏற்கனவே 32 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும், மீத தொகையை வழங்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். கடந்த மார்ச் மாதத்துக்குள் படத்தை முடிக்க திட்டமிடப்பட்ட நிலையில் இன்னும் படத்தை முடிக்காததால் பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், பழைய விஷயங்களை மறந்து எதிர்காலத்தை கருத்தில் கொள்ள தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து, நீதிமன்ற உத்தரவு என்பது சுமூக தீர்வை ஏற்படுத்தாது எனத் தெரிவித்த நீதிபதிகள், இரு தரப்பினரும் கலந்து பேசி சுமூக தீர்வு காண வேண்டும் என அறிவுறுத்தி, விசாரணையை ஏப்ரல் 28ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

You'r reading இந்தியன் - 2 பட பிரச்சனை : இரு தரப்பினரும் கலந்து பேசி தீர்வு காண உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கட்டிலில் கள்ளக்காதலனுடன் கட்டிப்புரண்டு உல்லாசம்...

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்