டெல்லி குடியரசு தின விழாவில் ராகுலுக்கு முன் வரிசை மரியாதை.....
Rahuls front line respect for Delhi Republic Day celebrations
தலைநகர் டெல்லியில் நடந்த குடியரசு தின விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு கடந்தாண்டு 6-வது வரிசையில் அமர வைக்கப்பட்ட நிலையில் இந்தாண்டு முன் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டது.
குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் கண் கவர் அணிவகுப்பும், பல்வேறு மாநிலங்களின் சிறப்புகளை விளக்கும் அலங்கார ஊர்திகள், முப்படை வீரர்களின் வீர தீர சாகசங்கள் என ராஜபாதையில் விழா களை கட்டும். சிறப்பு விருந்தினராக வந்துள்ள வெளிநாட்டுத் தலைவருடன் குடியரசுத் தலைவர், பிரதமர், மத்திய அமைச்சர்கள் என முக்கியத் தலைவர்கள் இந்த அணிவகுப்பை கண்டு களிப்பர். கடந்தாண்டு காங்கிரஸ் தலைவராக பதவியேற்ற பின் முதன் முறையாக பங்கேற்ற ராகுல்காந்திக்கும், ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத்துக்கும் தலைவர்கள் அமரும் இடத்தில் 6 -வது வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.
பாரம்பரியம் மிக்க கட்சியின் தலைவருக்கு இதுதான் மரியாதையா?, பாரம்பரியத்தை மறந்து மோசமான அரசியலை செய்கிறது பாஜக அரசு என காங்கிரசார் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் இன்று நடந்த குடியரசு தின விழாவில் ராகுலுக்கு முன் வரிசையில் இடம் ஒதுக்கீடு செய்து மரியாதை தரப்பட்டிருந்தது. முதல் வரிசையில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரியின் அருகே அமர்ந்து அவருடன் சிரித்துப் பேசியபடி அணிவகுப்பை கண்டு களித்தார் ராகுல் காந்தி. இதேபோல் கடந்த ஆண்டு 6-வது வரிசையில் அமர வைக்கப்பட்ட குலாம் நபி ஆசாத்துக்கும் 2-வது வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.
You'r reading டெல்லி குடியரசு தின விழாவில் ராகுலுக்கு முன் வரிசை மரியாதை..... Originally posted on The Subeditor Tamil