இந்திய குடியுரிமை சட்டம் குறித்து ஐரோப்பிய யூனியனில் நாளை விவாதம்..

இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தில் நாளை(ஜன.29) விவாதம் நடைபெறுகிறது.

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கனிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து கடந்த 2014ம் ஆண்டுக்கு முன்பு இந்தியாவில் தஞ்சம் அடைந்த முஸ்லிம்கள் அல்லாத 6 மதத்தினருக்கு மட்டும் குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை(சிஏஏ) மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ளது. இது சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிரானது என்று கூறி, எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பியதுடன் தொடர்ந்து போராட்டம் நடத்தின.

இந்நிலையில், இந்தியாவின் இந்த சட்டத்தை சில வெளிநாடுகளும் விமர்சனம் செய்துள்ளன. ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் இந்த சட்டத்திற்கு எதிராக 6 தீர்மானங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த நாடாளுமன்றத்தில் மொத்தம் உள்ள 751 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் ஐரோப்பிய மக்கள் கட்சியின் 182 உறுப்பினர்களும், சமூக ஜனாநாயக குழுவின் 154 உறுப்பினர்களும் இந்தியாவின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானங்களை கொண்டு வந்துள்ளனர். அந்த சட்டம் அடிப்படையிலேயே முண்பாடாக உள்ளதாகவும், மதரீதியான இந்த சட்டத்தால் உலகிலேயே அதிகமான அளவுக்கு நாடு இல்லாதவர்கள் உருவாக்கப்படும் சூழல் உள்ளதாகவும், இந்த சட்டத்தை அமல்படுத்தாமல் தடுக்க முயற்சிக்க வேண்டுமென்றும் தீர்மானங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த தீர்மானங்களின் மீது ஜன.29ம் தேதி விவாதங்கள் தொடங்கும். 30ம் தேதி வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று பிரஸ்ஸல்சில் ஐரோப்பிய நாடாளுமன்ற செய்தி தொடர்பாளர் நீல் கார்லெட் தெரிவித்தார். மேலும், வாக்கெடுப்புக்கு பின்பு ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தின் சார்பில் ஜோசப் போரெல், பத்திரிகைகளுக்கு பேட்டி அளிப்பார் என்றும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே, இந்தியாவின் சார்பில் ஐரோப்பிய யூனியன் விவாதத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மக்களவை தலைவர் ஓம்பிர்லா, ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற தலைவர் டேவிட் சஷோலிக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், இந்திய நாடாளுமன்றத்தில் முறையாக விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட சட்டத்தைப் பற்றி, வேறொரு நாடு எதுவும் கூறுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. இது வருங்காலத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும் என்பதால், ஐரோப்பிய ஒன்றியத்தில் அந்த தீர்மானங்களை விவாதிக்காமல் தடுத்து நிறுத்த வேண்டும் என்று கூறியிருக்கிறார். மாநிலங்களவை தலைவர் வெங்கய்யநாயுடுவும் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார்.

You'r reading இந்திய குடியுரிமை சட்டம் குறித்து ஐரோப்பிய யூனியனில் நாளை விவாதம்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அஜீத் பட ரீமேக்கில் ரஜினி மகள் நடிக்கிறார்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்