பேஸ்புக் காதலனை தேடி 3 வாலிபர்களுடன் சென்ற 13 வயது சிறுமியின் கதி..

13 year old girl raped by 3 men in a car

பேஸ்புக் காதலனை தேடி 3 வாலிபர்களுடன் காரில் சென்ற 13 வயது சிறுமியை அந்த 3 பேரும் சேர்ந்து பலாத்காரம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவிலிருந்து கிருஷ்ணகிரிக்குச் சென்ற 8ம் வகுப்பு மாணவிக்குத் தான் இந்த கொடுமை நடந்துள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ளது முக்கம் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த ஒரு தொழிலாளியின் 13 வயது மகள் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார்.

13 வயதே ஆன போதிலும் அந்த சிறுமிக்கு அவரது தந்தை செல்போன் வாங்கி கொடுத்துள்ளார். தற்போது பள்ளி மூடப்பட்டுள்ளதால் அந்த மாணவி பெரும்பாலான நேரத்தில் பேஸ்புக், வாட்ஸ்ஆப் உட்பட சமூக இணையதளங்களில் மூழ்கிக் கிடந்தார். இந்நிலையில் அவருக்கு பேஸ்புக் மூலம் கிருஷ்ணகிரி காமராஜர் நகரைச் சேர்ந்த தரணி (23) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. தினமும் இருவரும் பல மணி நேரம் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்ஆப்பில் சாட்டிங் செய்து வந்துள்ளனர்.

நாளுக்கு நாள் அவர்களுக்கு இடையே நெருக்கம் அதிகரித்ததைத் தொடர்ந்து அந்த சிறுமிக்குக் காதலன் தரணியைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. ஆனால் தற்போது கொரோனா காலம் என்பதால் எப்படிச் செல்வது என அவர் பரிதவித்து வந்தார். இந்த நிலையில் தான் கடந்த சில தினங்களுக்கு முன் அந்த மாணவி தனது தந்தையுடன் அப்பகுதியில் உள்ள மருத்துவமனைக்குச் சென்றபோது அதே பகுதியைச் சேர்ந்த மிதுன் ராஜ் (24) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. அவரிடம் தன்னுடைய காதலனைப் பார்க்க விரும்புவதாகவும், கிருஷ்ணகிரி செல்ல ஏற்பாடு செய்ய முடியுமா என்றும் கேட்டுள்ளார். உடனடியாக அதற்குச் சம்மதித்த மிதுன் ராஜ், 2 நாட்கள் கழித்து காருடன் வருவதாகவும், அந்த காரில் கிருஷ்ணகிரி செல்லலாம் என்றும் அந்த மாணவியிடம் மிதுன் ராஜ் உறுதியளித்துள்ளார். இதை அவரும் நம்பி விட்டார்.

காதலனைப் பார்க்க சமயம் வந்து விட்டது என்ற மகிழ்ச்சியில் அந்த மாணவி இருந்தார். சொன்னபடியே 2 நாட்கள் கழித்து அந்த மாணவியைத் தொடர்பு கொண்ட மிதுன் ராஜ், கார் ரெடியாகிவிட்டதாகவும் இரவில் அங்குள்ள பஸ் ஸ்டாண்டுக்கு வருமாறும் கூறி உள்ளார். இதையடுத்து அந்த மாணவி பெற்றோருக்குத் தெரியாமல் ஒரு பேக்கை எடுத்துக்கொண்டு அன்றிரவு பஸ் அங்குள்ள பஸ் ஸ்டாண்டுக்கு சென்றார். பஸ் ஸ்டாண்ட் அருகே மிதுன்ராஜ் காருடன் காத்துக் கொண்டிருந்தார். காரில் ஏறிய பிறகுதான் மேலும் 2 வாலிபர்கள் காரில் இருந்தது அந்த மாணவிக்குத் தெரிய வந்தது. அது குறித்து கேட்டபோது, திரும்பி வரும்போது தனக்குத் துணையாக இருக்கட்டும் என்பதற்காக நண்பர்களை அழைத்ததாக மிதுன் ராஜ் கூறியுள்ளார்.

ஆனால் மிதுனின் திட்டம் வேறு என்பது என்பது அந்த மாணவிக்குப் பின்னர் தான் தெரியவந்தது. சிறிது தொலைவு சென்ற பின் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் காரை நிறுத்தி மிதுன் ராஜ் அந்த மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார். இதன் பின்னர் மற்ற 2 பேரும் அந்த மாணவியைப் பலாத்காரம் செய்தனர். வெளியே சொன்னால் கொன்று விடுவோம் என்று மூன்று பேரும் சேர்ந்து அந்த மாணவியை மிரட்டி உள்ளனர். இதன்பின்னர் ஒன்றுமே தெரியாதது போல அவரை ஓசூர் பஸ் நிலையத்தில் விட்டுவிட்டு 3 பேரும் கேரளா திரும்பி விட்டனர். அதன்பின் அந்த மாணவி தனது காதலனை தொடர்பு கொண்டு ஓசூர் பஸ் நிலையத்திற்கு வருமாறு கூறியுள்ளார்.

இதையடுத்து காதலன் தரணி, பஸ் நிலையத்திற்கு சென்று அந்த மாணவியை அழைத்துக் கொண்டு அங்குள்ள ஒரு வீட்டுக்கு சென்றார். இதற்கிடையே மாணவி காணாமல் போனது குறித்து அவரது பெற்றோர் முக்கம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த மாணவியின் செல்போன் டவரை பரிசோதித்தபோது ஓசூரில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ஓசூர் சென்று விசாரித்ததில் அங்குள்ள ஒரு வீட்டில் மாணவி இருப்பது தெரிய வந்தது. அந்த மாணவியை மீட்ட போலீசார் காதலன் தரணியைக் கைது செய்தனர். பின்னர் மாணவியிடம் விசாரணை நடத்திய போது தான் மிதுன் ராஜ் உட்பட 3 பேர் காரில் வைத்து அவரை பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து மிதுன் ராஜ் மற்றும் அவரது கூட்டாளிகளான அகித் ராஜ் மற்றும் ஜோபின் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.



You'r reading பேஸ்புக் காதலனை தேடி 3 வாலிபர்களுடன் சென்ற 13 வயது சிறுமியின் கதி.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பிக் பாஸின் புதிய அப்டேட்..வைல்ட் கார்ட் என்ட்ரியாக வருவது யார் தெரியுமா?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்