முன்பதிவு செய்யாமல் சபரிமலைக்கு பக்தர்கள் செல்ல வேண்டாம்

கொரோனா பரவல் காரணமாகச் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தற்போது முன்பதிவு செய்து மட்டுமே தரிசனத்திற்குச் செல்ல முடியும். ஆனால் கடந்த சில தினங்களாகத் தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் முன்பதிவு செய்யாமல் சபரிமலை செல்கின்றனர். அவர்களை போலீசார் திருப்பி அனுப்பி வைத்து வருகின்றனர். இதனால் பக்தர்கள் கடும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.இந்தியா முழுவதும் கொரோனா பரவலின் வேகம் சற்று குறைந்து வருகின்ற போதிலும், கேரளாவில் அதன் தீவிரம் இன்னும் குறையவில்லை. இதனால் லட்சக்கணக்கானோர் குவியும் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கடந்த மாதம் 16ம் தேதி முதல் சபரிமலையில் மண்டல கால பூஜைகள் தொடங்கின. அன்று முதல் வார நாட்களில் 1,000 பக்தர்களும், சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் 2,000 பக்தர்களும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று ஏற்கனவே திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவித்திருந்தது. வழக்கமாக மண்டலக் காலத்தில் சபரிமலையில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிவார்கள். ஆனால் கொரோனா பரவல் காரணமாக தற்போது பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் மண்டலக் காலத்தில் சபரிமலை செல்ல விரும்பிய லட்சக்கணக்கான பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இதையடுத்து தினசரி பக்தர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று பல்வேறு மாநிலங்களிலிருந்தும் கேரள அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து வாரநாட்களில் 2,000 பக்தர்களையும், சனி, ஞாயிறு நாட்களில் 3,000 பக்தர்களையும் அனுமதிக்க முடிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து கடந்த வாரம் முன்பதிவு மீண்டும் தொடங்கப்பட்டது. முன்பதிவு தொடங்கிய ஒரு சில நாட்களிலேயே அனைத்து நாட்களுக்கும் முன்பதிவு முடிந்துவிட்டது. இதனால் பல பக்தர்கள் சபரிமலைக்குச் செல்ல முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.இந்நிலையில் கடந்த சில தினங்களாகச் சபரிமலைக்கு முன்பதிவு செய்யாமல் ஏராளமான பக்தர்கள் செல்ல முயற்சித்தனர். ஆனால் அவர்களை போலீசார் தரிசனத்திற்குச் செல்ல அனுமதிக்கவில்லை. தங்களுக்கு முன்பதிவு கிடைக்கவில்லை என்றும், எனவே தரிசிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் அவர்கள் போலீசாரிடம் கூறினர்.

ஆனால் அதை போலீசார் ஏற்கவில்லை. எந்தக் காரணம் கொண்டும் முன்பதிவு இல்லாமல் தரிசனத்திற்குச் செல்ல அனுமதிக்க முடியாது என்று கூறி பக்தர்களை போலீசார் திருப்பி அனுப்பி வைத்தனர். இதையடுத்து பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். பம்பையில் இருந்து சுமார் 21 கிலோ மீட்டர் தொலைவில் நிலக்கல் என்ற இடம் உள்ளது. இங்கு வைத்துத் தான் பக்தர்களின் ஆவணங்களை போலீசார் பரிசோதித்து வருகின்றனர். இதுகுறித்து திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் வாசு கூறுகையில், சபரிமலையில் இந்த வருடம் தரிசனத்திற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். இது தொடர்பாக ஏற்கனவே முறையான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

தற்போதைய சூழ்நிலையில் கொரோனா ஆபத்து அதிக அளவில் இருக்கிறது. கோவில் ஊழியர்கள் ஏராளமானோருக்கு நோய் பரவியுள்ளது. எனவே முன்பதிவு செய்யாமல் பக்தர்கள் யாரும் தரிசனத்திற்கு வரவேண்டாம். பக்தர்கள் இதற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று கூறினார்.

You'r reading முன்பதிவு செய்யாமல் சபரிமலைக்கு பக்தர்கள் செல்ல வேண்டாம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சவரனுக்கு ரூ. 196 குறைந்தது தங்கத்தின் விலை! 09-12-2020

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்