அவனியாபுரம் ஜல்லிக்கட்டு : நிபந்தனைகளுடன் நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவு...

ஜல்லிக்கட்டு போட்டிகளை அமைதியாகவும் பாதுகாப்பாகவும் நடத்த வேண்டும் என்பதே நீதிமன்றத்தின் விருப்பம் - நீதிபதிகள்

மதுரை, அவனியாபுரத்தைச் சேர்ந்த அன்பரசன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில்," அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்த விழாக்கமிட்டிக்கு தலைமை வகிப்பவர், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஜல்லிக்கட்டு குழுவின் தலைவராக இருக்கிறார். போட்டி வரவு செலவு கணக்குகளை அவர் முறையாகச் சமர்ப்பிப்பதில்லை, யாரையும் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாகச் செயல்பட்டு முடிவு எடுக்கிறார்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாக்குழுவில் ஆதிதிராவிட சமூகத்தினருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. இதனால் ஜல்லிக்கட்டு போட்டிகளை அனைவரும் சேர்ந்து ஒற்றுமையுடன் நடத்தும் நிலையும், ஆர்வமும் குறையும். எனவே அவனியாபுரம் ஜல்லிக்கட்டினை ஏ.கே.கண்ணன் தலைமையில் நடத்துவது தொடர்பான அறிவிப்பை ரத்து செய்து, விழாக்குழுவை மாற்றியமைக்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு, முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், "கடந்த ஆண்டு போல முதல் மரியாதை வழங்குவது மற்றும் ஜாதி ரீதியாக , அரசியல் ரீதியாக ப்ளக்ஸ் பேனர்களை வைப்பது போன்றவை தவிர்க்கப்பட வேண்டும். ஜல்லிக்கட்டு கணக்கு வழக்குகளைப் பராமரிப்பதற்காகத் தனி வங்கிக் கணக்கைத் தொடங்க வேண்டும். இதனை உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இதை ஏற்ற கொண்ட நீதிபதிகள் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வழிகாட்டு நெறிமுறைகளைப் பொறுத்தவரைக் கடந்த ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு பொருந்தும் அரசியல் ,ஜாதி போன்ற எந்த விதமான பிளக்ஸ் பேனர்கள் வைக்கக் கூடாது. யாருக்கும் முதல் மரியாதை கிடையாது. வங்கிக் கணக்கு தொடங்கி அதன் மூலமே வரவு செலவுகளை நிர்வாகம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

You'r reading அவனியாபுரம் ஜல்லிக்கட்டு : நிபந்தனைகளுடன் நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவு... Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மலையாள சினிமா துறைக்கு அதிரடி சலுகைகள்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்