தமிழகத்தில் மீண்டும் முழுஊரடங்குக்கு வாய்ப்பா? – கள நிலவரம் சொல்வது என்ன?

தமிழகத்தில் மீண்டும் முழு ஊரங்கு வாய்ப்புள்ளதா என்பது குறித்து பார்ப்போம்.

இந்தியாவில் முழுவதும் கொரோனா பெருந்தோற்று ஆட்டி படைத்து வருகிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் புதிதாக 1 லட்சத்து 25 ஆயிரத்து 4 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 16 ஆயிரத்து 665 பேருக்கு கொரோனா இருப்பது தெரியவந்துள்ளது.



இதில் அதிகபட்சமாக சென்னையில் 4,764 பேரும்,செங்கல்பட்டில் 1,219 பேரும் கோவையில் 963 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்திலேயே சென்னையில் தான் பாதிப்பு எண்ணிக்கையானது உச்சத்தில் உள்ளது.நேற்று ஒரே நாளில் மட்டும் 98 பேர் உயிர் இழந்துள்ளனர்.

கடந்த 26-4-2021 அதிகாலை 4 மணி முதல் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு மீண்டும் தியேட்டர்கள், மால்கள், கேளிக்கை கூடங்கள், கூட்ட அரங்குகள், பெரிய வணிக வளாகங்கள், சலூன்கள், அழகு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டிற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இவ்வளவு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டும் இன்னும் கொரோனா பரவுவது குறையவில்லை.

கொரோனா சுனாமி வேகத்தில் பரவி வருவதாகவும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளளார்.
இந்நிலையில், கொரோனா அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் கலெக்டர்களுடன் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.



இன்றைய ஆலோசனை கூட்டங்களில் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, தேனி, திருப்பூர் ஆகிய 6 மாவட்ட கலெக்டர்களும் சென்னை, கோவை மாநகராட்சி கமி‌ஷனர்களும் பங்கேற்றனர்.காணொலி வாயிலாக நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், அதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

மே மாதம் ஊரடங்கில் ஏற்படுத்தப்பட வேண்டிய கூடுதல் கட்டுப்பாடுகள் தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. சென்னை, செங்கல்பட்டு, கோவை உள்பட குறிப்பிட்ட சில மாவட்டங்களில் முழு ஊரடங்கை சில நாட்களுக்கு அமல்படுத்தலாமா? என்பது குறித்தும் விவாதித்ததாக தெரிகிறது.

முழு ஊரடங்கை அமல்படுத்தினால் பொதுமக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படும் என்பதால் புதிய கட்டுப்பாடுகளை கூடுதலாக கொண்டு வருவது குறித்தும் கருத்து கேட்கப்பட்டது.

அநேகமாக இன்று மாலை அல்லது நாளை புதிய கட்டுப்பாடுகள் குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் சென்னை உள்ளிட்ட 2 அல்லது 3 நகரங்களுக்கு மட்டும் முழு ஊரடங்கு அறிவிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

You'r reading தமிழகத்தில் மீண்டும் முழுஊரடங்குக்கு வாய்ப்பா? – கள நிலவரம் சொல்வது என்ன? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - புரளி பரப்பாதீர்கள், பதற்றமடைய வைக்காதீர்கள் - மன்சூர் அலிகானுக்கு ஜாமீன்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்