ரோகித், இஷாந்த் சர்மா ஆஸ்திரேலியாவுக்கு செல்ல வாய்ப்பில்லை

காயத்திலிருந்து இன்னும் முழுமையாக குணமடையாததால் ரோகித் மற்றும் இஷாந்த் சர்மா ஆகிய இருவரும் ஆஸ்திரேலியாவுக்கு செல்ல வாய்ப்பில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் உள்ளது. ஆஸ்திரேலிய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள் மற்றும் தலா 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணி விளையாடுகிறது. முதல் ஒருநாள் போட்டி சிட்னியில் நாளை மறுநாள் (27ம் தேதி) தொடங்குகிறது. இதனால் இந்திய வீரர்கள் அனைவரும் இறுதிக்கட்ட பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் காயம் காரணமாக பேட்ஸ்மேன் ரோகித் சர்மாவும், வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மாவும் முதலில் இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை. இதனால் இந்திய அணியுடன் இவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு செல்லவில்லை. காயம் குணமடைந்தால் இருவரும் ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருந்தது. இதற்கிடையே கடும் எதிர்ப்பு காரணமாக ரோகித் சர்மா டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டார். அவர் விரைவில் ஆஸ்திரேலியாவிற்கு புறப்படுவார் என முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இருவரது காயமும் இன்னும் முழுமையாக குணமடையவில்லை என கூறப்படுகிறது. காயம் குணமடைய இன்னும் குறைந்தது ஒரு வாரத்திற்கு மேல் ஆகும் என தெரிகிறது. அதன் பின்னர் ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டுச் சென்றால் இரண்டு வாரம் சுய தனிமையில் இருக்க வேண்டும். அதன்பிறகே போட்டியில் கலந்து கொள்ள முடியும். மேலும் இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு விமான போக்குவரத்தும் முறையாக தொடங்காததால் இருவராலும் ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் ஆஸ்திரேலியா அணியுடனான 4 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடுவதற்கான வாய்ப்பு மங்கிவிட்டது. எனவே ரோகித் சர்மாவும், இஷாந்த் சர்மாவும் ஆஸ்திரேலியா செல்ல மாட்டார்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

You'r reading ரோகித், இஷாந்த் சர்மா ஆஸ்திரேலியாவுக்கு செல்ல வாய்ப்பில்லை Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பெருநிறுவன ஆணையத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்