உள்ளாட்சித் தேர்தல்.. சுப்ரீம் கோர்ட்டில் திமுக புதிய மனு தாக்கல்..
DMK filed a fresh petition in the Supreme Court seeking stay on local body elections
ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் திமுக புதிய மனுவை தாக்கல் செய்திருக்கிறது. இது நாளை விசாரணைக்கு வருகிறது.
தமிழகத்தில் சமீபத்தில் புதிதாக 5 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன. உள்ளாட்சி தேர்தல் நடக்க வேண்டிய தருணத்தில் இந்த மாவட்டங்களை அவசரமாக பிரித்தது ஏன்? இதற்கு எப்படி மறுவரையறை செய்யப் போகிறீர்கள்? என்று திமுக கேள்வி எழுப்பியது. மாநில தேர்தல் ஆணையம் உடனடியாக விளக்கம் தராததால், சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தது.
இதற்கு பின், பழைய மாவட்டங்களின் அடிப்படையில்தான் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்தது. மேலும், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் டிசம்பர் 27, 30 தேதிகளில் தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி அறிவித்தார். ஊராட்சி ஒன்றிய வார்டுகள், ஊராட்சி வார்டுகள் ஆகியவற்றுக்கு மட்டும் இரண்டு கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2, 2020ல் நடக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. வரும் 6ம் தேதி, தேர்தலுக்கான அறிவிப்பாணை வெளியிடப்படும் என்றும், அன்றே வேட்புமனு தாக்கல் தொடங்கும் என்றும் மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு தேர்தல் அறிவிக்காமல், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் தேர்தல் நடத்துவதற்கும் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும், இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் இன்று(டிச.4) புதிய மனுவையும் தாக்கல் செய்திருக்கிறது. அதில், உள்ளாட்சி தேர்தலை ஒரே கட்டமாக நடத்த அறிவிப்பு வெளியிட வேண்டுமென்று கோரிக்கை விடுத்தும், அது வரை தேர்தலை நடத்த தடை விதிக்க வேண்டுமென்றும் கோரியுள்ளது.
சுப்ரீம் கோர்ட்டில் திமுக ஏற்கனவே தொடர்ந்த வழக்கு மற்றும் இதர உள்ளாட்சி தேர்தல் தொடர்பான மனுக்கள் நாளை விசாரணைக்கு வருகின்றன. அத்துடன் திமுகவின் இந்த புதிய மனுவும் விசாரிக்கப்பட உள்ளது.
You'r reading உள்ளாட்சித் தேர்தல்.. சுப்ரீம் கோர்ட்டில் திமுக புதிய மனு தாக்கல்.. Originally posted on The Subeditor Tamil