தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2 லட்சமானது.. பலி 3320 ஆக அதிகரிப்பு..

corona cases rise to 2 lakhs in tamilnadu.

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 2 லட்சத்தைக் கடந்தது. இதில் ஒன்றரை லட்சம் பேர் குணம் அடைந்துள்ளனர். 3320 பேர் பலியாகியுள்ளனர்.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், இந்தியாவில் 13 லட்சம் பேருக்குப் பரவியிருக்கிறது. மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லியில்தான் தொடர்ந்து அதிக பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று(ஜூலை24) ஒரே நாளில் 6785 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் 56 பேர் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள். நேற்று மாலை நிலவரப்படி தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து 99,749 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது.

இதில், நேற்று டிஸ்சார்ஜ் ஆன 6504 பேரையும் சேர்த்தால், இது வரை ஒரு லட்சத்து 45,297 பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 66 பேரும், தனியார் மருத்துவமனையில் 22 பேருமாக 88 பேர் நேற்று உயிரிழந்தனர். சென்னையில் 22 பேரும், மதுரையில் 10 பேரும், விருதுநகரில் 6 பேரும், திருவள்ளூர், கன்னியாகுமரியில் தலா 5 பேரும், செங்கல்பட்டு, கோவை, காஞ்சீபுரம், நெல்லையில் தலா 4 பேரும், திண்டுக்கல், ராணிப்பேட்டையில் தலா 3 பேரும், திருவண்ணாமலை, தேனி, தென்காசியில் தலா இருவரும், அரியலூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சேலம், சிவகங்கை, திருப்பத்தூர், தூத்துக்குடி, திருப்பூர், திருச்சி, வேலூரில் தலா ஒருவருமாக 26 மாவட்டங்களில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவுக்கு இதுவரை 3,320 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் தினமும் ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களுக்குத் தொற்று கண்டுபிடிக்கப்படுகிறது. நேற்று 1299 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. சென்னையில் இது வரை மொத்தம் 92,206 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கிறது. செங்கல்பட்டில் நேற்று 419 பேருக்கும், காஞ்சிபுரம் 349, மதுரை 326, திருவள்ளூர் 378 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று வரை 11,308 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மதுரையில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 9302 ஆக அதிகரித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் 11,008 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 20 மாவட்டங்களில் 3 ஆயிரம் பேருக்கும் அதிகமானோருக்கு கொரோனா பரவியிருக்கிறது.

நேற்று மட்டும் தூத்துக்குடியில் 308 பேர், நெல்லையில் 170 பேர், திருவண்ணாமலையில் 219 பேர், வேலூரில் 174 பேர், விழுப்புரத்தில்164 பேர், விருதுநகரில் 423 பேர், சேலத்தில் 121 பேர், கன்னியாகுமரியில் 266 பேர், கோவையில் 189 பேர், திருச்சியில் 134 பேர், கள்ளக்குறிச்சியில் 179 பேர் உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று(ஜூலை 25) 271 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதே போல், சென்னையிலும் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்தைக் கடந்துள்ளது. எனினும், இதில் ஒன்றரை லட்சம் பேர் வரை குணம் அடைந்துள்ளனர். சுமார் 50 ஆயிரம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.

You'r reading தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2 லட்சமானது.. பலி 3320 ஆக அதிகரிப்பு.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - எனக்கு கொரோனா குணமாகவில்லை அமிதாப் அறிவிப்பு.. வதந்திக்கு முற்றுப்புள்ளி..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்