ஆவினில் ரூ.15 லட்சம் கொடுத்து பணி நியமனம்.. முகவர்கள் சங்கம் அடுக்கும் புகார்கள்..

corruption charges against Aavin officials.

ஆவின் நிறுவனத்தில் ஊழல் புரையோடிப் போயிருப்பதாகவும், ரூ.15 லட்சம் லஞ்சம் பெற்றுக் கொண்டு பணிநியமனங்கள் நடந்துள்ளதாகவும் பால் முகவர்கள் சங்கம் அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளைக் கூறியுள்ளது.தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான ஆவினின் இதயத்தில் முற்றிலுமாக ஊழல் புற்றுநோய் தாக்கி, மற்ற உறுப்புகளையும் (ஒட்டுமொத்த துறைகளை) அழிக்கும் நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது என்பது அதிர்ச்சியளிக்கும் உண்மையாகும்.

தற்போது பால்வளத்துறையின் கூடுதல் ஆணையராக இருக்கும் கிறிஸ்துமஸ் துணை ஆணையராக இருந்த போது தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி அவரது உறவினர்களான நாகர்கோவிலைச் சேர்ந்த 1) பினுசா, 2) ஜெனுசா, 3) பினுசா, 4) மெர்பின் ஜோஸ், 5) ஆலன் பெனிட்டன், 6) சுனில், 7) சிவகார்த்திக், 8) சக்தி கோகுல் ஆகியோரிடம் தலா 15 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிக் கொண்டு ஆணையர் அலுவலகத்தில் பணி நியமனம் செய்து பின்னர் அவர்களைத் திருநெல்வேலி மாவட்ட துணை ஆணையர் அலுவலகத்திற்கு பணியிட மாற்றம் செய்துள்ளார்.

அதன் பிறகு மேற்கண்ட எட்டு பேரில் D.பினுசா, W.N.ஜெனுசா, W.N.பினுசா, மெர்பின் ஜோஸ், சிவகார்த்திக் ஆகிய ஐந்து பேரைத் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சரண்டர் செய்யும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது.வேலூர் மாவட்டம், காவனூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்க முன்னாள் செயலாளர் திரு. மாணிக்கவேல் அவர்களின் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மா.வெங்கடேசன், மா.தமிழரசன், மா.ராஜலட்சுமி, ஆர்.உமாலட்சுமி ஆகிய நான்கு பேர் முறைகேடாகப் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளதோடு தமிழகம் முழுவதும் ஆவினில் இது வரை சுமார் 170 க்கும் மேற்பட்டோருக்கு விதிமுறைகளை மீறியும், தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியும் கையூட்டு பெற்றுக் கொண்டு பணி நியமனம் செய்துள்ளதால் அவர் மீது தமிழக லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு கண்காணிப்பு துறைக்கும், தமிழக முதல்வர், பால்வளத்துறை அமைச்சர், பால்வளத்துறை செயலாளர், தலைமைச் செயலாளர் உள்ளிட்டோருக்கும் பால்வளத்துறை பணியாளர்கள் சங்கம் சார்பில் அளிக்கப்பட்ட புகார்கள் மீது இது வரை எந்த ஒரு நடவடிக்கையோ, விசாரணையோ நடைபெறாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது.

எந்தவொரு பணி நியமனமும் வேலை வாய்ப்பு அலுவலகம் மூலமாகச் செய்ய வேண்டும். ஆனால், அப்படியில்லாமல் போலி முகவரிகள் பெற்றுக் கொண்டு அடிப்படை ஊழியர்கள் நியமிக்கப்பட்டது மட்டுமின்றி, அரசு ஊழியர்கள் அடிப்படை விதிகள் மீறி அடிப்படை ஊழியர்களை மாவட்டம் விட்டு மாவட்டம் இடமாறுதல் செய்து, பணி ஒப்படைப்பு செய்தது கடுமையான விதி மீறல்கள் என்பதை பால்வளத்துறை ஆணையர்களாக இருந்த சி.காமராஜ் மற்றும் தற்போதுள்ள வள்ளலார் ஆகியோர் அனுமதித்திருப்பது பால்வளத்துறையில் வியாபித்துள்ள இமாலய ஊழல்களுக்கு எடுத்துக்காட்டாகும்.
நாகர்கோவில் மாவட்டத்தில் 2015--2018 காலகட்டத்தில் கிறிஸ்துமஸ் துணைப் பதிவாளராக பணியாற்றிய போது அவருக்குக் கீழ் உதவியாளராக இருந்த நாகர்கோவிலைச் சேர்ந்த சுசீலாவுக்கு பல்வேறு வகையில் பாலியல் தொல்லை கொடுத்தார்.

அதற்கு அவர் ஒத்துழைக்க மறுத்ததால் அந்த பெண் ஊழியருக்கு 20க்கும் மேற்பட்ட முறை மெமோ மேல் மெமோ கொடுத்தும் கோபம் தனியாமல், அவரை பழிவாங்கும் நடவடிக்கையாகத் திருநெல்வேலிக்கு பணி மாற்றம் செய்தும், அவரது பதவி உயர்வைத் தடுத்து நிறுத்தியும், அவருக்கு மன உளைச்சல் ஏற்படுத்தி, மனரீதியாக நெருக்கடி கொடுத்தார். இந்த காரணத்தால் அந்த பெண் ஊழியர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2018ம் ஆண்டு வழக்கு தொடர்ந்த நிலையில் துறை சார்ந்த பாலியல் வழக்கு என்பதால் கன்னியாகுமரி வருவாய்க் கோட்டாட்சியர் ஆவின் நிறுவனத்தில் விசாகா கமிட்டி மூலம் தீர்வு காண மனு செய்து பரிகாரம் தேடிக் கொள்ள உத்தரவிட்டுள்ளார்.

அவரும் அது தொடர்பாக பால்வளத்துறை செயலாளருக்கு முறையிட்டும் இது வரை ஆவினில் விசாகா கமிட்டி அமைக்கப்படாததோடு, தன் மீது பாலியல் வழக்குப் பதியக் காரணமான நாகர்கோவில் துணைப் பதிவாளர் அலுவலகத்தையே இழுத்து மூட வைத்திருக்கிறார் கிறிஸ்துமஸ்.நாகர்கோவில் மாவட்டத்தில் துணைப் பதிவாளராக பணியாற்றிய போதே கிறிஸ்துமஸ் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதால் அவர் மீது முன்னாள் நிர்வாக இயக்குனரும், பால்வள ஆணையாளராக இருந்தவருமான சுனில்பாலிவால் உத்தரவில் 17ஏ, 17பி குற்றச்சாட்டுகள் போடப்பட்ட நிலையில் அவருக்குப் பின் வந்த காமராஜ் கூட்டுச் சதி செய்து அவற்றை ரத்து செய்ததோடு துணைப் பதிவாளராக இருந்த கிறிஸ்து தாசைப் பிப்ரவரி 2019ல் பால்வளத் துறையின் துணை ஆணையராகப் பதவி உயர்வு வழங்கினார்.

அத்துடன் அரசுப் பணியில் இருப்பவர்கள் ஒரு வருடத்திற்குக் குறைவாக அப்பணியில் இருந்தால் பதவி உயர்வு வழங்கக் கூடாது என்கிற விதிகள் இருக்கும் சூழலில் அவர் அப்பொறுப்பிற்கு வந்த சில மாதங்களிலேயே பால்வளத்துறையின் கூடுதல் ஆணையராகப் பதவி உயர்வு வழங்கிட காமராஜ் ஐஏஎஸ் அவர்கள் பரிந்துரை செய்ததால் அவருக்கு விதிமுறைகளை மீறி துணை ஆணையராக, பிப்ரவரி 2019ல் பணியில் சேர்ந்து ஓராண்டு நிறைவடைவதற்குள் 6.01.2020 பால்வளத்துறையின் கூடுதல் ஆணையராக நியமித்து பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது இதில் சுமார் 40லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் கைமாறி இருக்கலாம் என்று சந்தேகம் எழுவதோடு ஆவின் நிர்வாகம் ஊழல்களால் நிரம்பி வழிவதற்கு இது உதாரணமாகவும் இருக்கிறது.

கிறிஸ்துமஸ் கடந்த மே மாதமே ஓய்வு பெற வேண்டிய சூழல் வந்த போது ஈராண்டு பணி நீட்டிப்புக்குப் பகிரங்க பிரயத்தனம் செய்தார். ஆனால், கொரோனா காரணமாக ஓராண்டு மட்டுமே தமிழ்நாடு அரசால் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், தன் மீதான ஊழல் புகார்கள் ஏராளமாகக் குவிந்து வருவதால் வழக்குகள், விசாரணைகள் வருவதற்கு முன் ஓய்வு பெற்று விடத் திட்டமிட்டு அதற்காக விருப்ப ஓய்வு கேட்டு விண்ணப்பித்து, அவசர, அவசரமாக பணியிலிருந்து விடுவிப்பு பெற்றிடும் நடவடிக்கையில் இருப்பதும் இவரின் குற்றச்சாட்டுகளுக்கு உள்ள முகாந்திரங்களை வெட்ட வெளிச்சமாக்குகிறது.

எனவே விதிமுறைகளை மீறி பதவி உயர்வு வழங்கப்பட்ட பால்வளத்துறையின் கூடுதல் ஆணையர் கிருஸ்துதாஸ், மருத்துவர் அலெக்ஸ் உள்ளிட்டோரின் பதவி உயர்வை உடனடியாக ரத்து செய்வதோடு அவர்களைப் பணி நீக்கம் செய்து அவர்கள் மீதும், துணைப் பதிவாளர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் மீதும் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து அவர்களின் வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட அவர்கள் சம்பந்தப்பட்ட அனைத்து இடங்களிலும் அதிரடி சோதனைகள் நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். காமராஜ், வள்ளலார் மற்றும் கிறிஸ்துமஸ் ஆகியோரது காலகட்டத்தில் பால்வளத்துறையில் பணி நியமனம் செய்யப்பட்ட ஊழியர்கள் குறித்து முழுமையான விசாரணை நடத்தி முறைகேடாக பணியில் சேர்ந்தவர்களை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும்.

இவ்வாறு பொன்னுசாமி கூறியுள்ளார்.

You'r reading ஆவினில் ரூ.15 லட்சம் கொடுத்து பணி நியமனம்.. முகவர்கள் சங்கம் அடுக்கும் புகார்கள்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - வதோதராவில் கட்டிடம் இடிந்து 3 பேர் பலி...

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்