சிதம்பரம் கோயில் தரிசனத்துக்கு இ பாஸ் : எதிர்ப்பு தெரிவித்து திடீர் சாலை மறியல்

சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டம் மற்றும் ஆருத்ரா தரிசன விழாவிற்கு இ.பாஸ் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தீட்சிதர்கள், பக்தர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சிதம்பரம் நடராஜர் கோயில் மார்கழி மாத ஆகுத்ரா தரிசன விழா கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. செவ்வாய் கிழமை தேரோட்டம், புதன்கிழமை ஆருத்ரா தரிசனமும் நடைபெற உள்ளது. இந்த திருவிழாவில் பங்கேற்க வெளியூர் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்த நிலையில் நேற்று நீதிமன்றம் வெளியூர் பக்தர்கள் பங்கேற்கலாம் என உத்தரவிட்டது. இந்நிலையில் இன்று கடலூர் மாவட்ட நிர்வாகம் தேரோட்டம் மற்றும் ஆருத்ரா தரிசன விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து இ.பாஸ்பெற வேண்டும் என நிபந்தனை விதித்தது.

இதற்கு கோவில் தீட்சிதர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இன்று இரவு கீழவீதியில் உள்ள கோயில் வாயிலின் முன்பு தேருக்கு அருகில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கோயில் தீட்சிதர்கள் மற்றும் பொதுமக்கள், கோயில் திருவிழா குறித்து நீதிமன்றமே உத்தரவிட்ட பிறகும் கடலூர் மாவட்ட நிர்வாகம் தேவையில்லாத பிரச்சனையை உண்டுபண்ணுகிறது. இ.பாஸ் முறையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். இதற்கிடையே சிதம்பரத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் கடலூர் மாவட்ட போலீஸ் எஸ்பி ஸ்ரீ அபிநவ் தலைமையில் சுமார் ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

You'r reading சிதம்பரம் கோயில் தரிசனத்துக்கு இ பாஸ் : எதிர்ப்பு தெரிவித்து திடீர் சாலை மறியல் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - வனிதாவிடம் மோதியவர் இயக்குனர் ஆனார்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்