ஸ்டாலின் செயல் தலைவராக இருக்கும் வரை திமுக வெற்றிப்பெற முடியாது: மு.க.அழகிரி

மதுரை: திமுகவின் செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் இருக்கும் வரை அக்கட்சி வெற்றிப்பெறாது என முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டு திமுக தோற்றது குறித்து மு.க.அழகிரி பேட்டி அளித்தார். அதில், தேர்தலில் திமுகவின் செயல்பாடு, பணப்பட்டுவாடா, டிடிவி தினகரனின் வெற்றி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து அழகிரி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது: கருணாநிதி தலைமையில் அனைத்து தேர்தல்களிலும் ஜெயித்தோம். ஸ்டாலின் செயல் தலைவராக பொறுப்பேற்ற பிறகு, வெற்றியே இல்லை. திமுக செயல் தலைவராக ஸ்டாலின் இருக்கும் வரை திமுகவுக்கு வெற்றி என்பதே கிடையாது. அவரது தலைமையில் சந்தேகம் எழுகிறது. களப்பணி இல்லாமல் எந்த வெற்றியும் பெற முடியாது. வேனில் இருந்தபடி ஓட்டு கேட்டால் வேலைக்கு ஆகாது.

ஆர்.கே.நகரில் டெபாசிட் இழந்ததற்கு ஸ்டாலின் தான் காரணம். எனக்கும் அவருக்கும் உள்ள தனிப்பட்ட பிரச்னைகள் வேறு. அரசியல் வேறு. போதிய மேற்பார்வை இல்லாமல் இருக்கும் நிலையில் திமுகவின் உண்மையான தொண்டர்களை பணத்திற்காக விலை போனதாக கூறுவதா? ஸ்டாலினுடன் இருப்பவர்களின் செயல்பாடு சரியில்லை.

வெற்றிப்பாதையில் செல்லவேண்டும் என்றால் திமுகவில் தலைமை மாறுதல் தேவை. அனைவரையும் ஒருங்கிணைத்து செல்லும் வகையில் தலைமை இருக்க வேண்டும்.

திமுக மற்றும் அதிமுக மீதான வெறுப்பே அவரை வெற்றி பெறச் செய்துள்ளது. தேர்தலில் வெற்றிப்பெற பணம் மட்டும் போதாது. தலைமையும், தொண்டர்களும் கடுமையாக உழைக்க வேண்டும்.
தேர்தலில் யார் ஜெயித்தாலும் பண நாயகம் வென்றது, ஜனநாயகம் தோற்றது என்று கூறுவது இயல்பானது.
இவ்வாறு அவர் கூறினார்.

You'r reading ஸ்டாலின் செயல் தலைவராக இருக்கும் வரை திமுக வெற்றிப்பெற முடியாது: மு.க.அழகிரி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தினகரனின் குறிக்கோள் தமிழகத்தில் ஆட்சியை கலைப்பது தான் - குஷ்பூ அதிரடி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்