பிப்ரவரி 21-ம் தேதி தனது அரசியல் கட்சியின் பெயரை அறிவிக்கிறார் கமல்ஹாசன்.

பிப்ரவரி 21 ஆம் தேதி தாம் துவங்க இருக்கும் கட்சியின் பெயரை அறிவிக்கப் போவதாகவும், அதன்பிறகு தனது அரசியல் பயணத்தைத் தொடங்கப் போவதாகவும் நடிகர் கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நீண்ட நாட்களாக பிக்பாஸ் மூலமாகவும், ட்விட்டர் மூலமாகவும் அரசியல் பேசி வந்த நடிகர் கமல்ஹாசன் அரசியலில் குதிக்கப்போவதாகவும் மறைமுகமாக பேசி வந்தார்.
சுப்ரமணியன் சுவாமி முதல் அமைச்சர் ஜெயக்குமார் வரை அரசியல் களத்தில் உள்ளவர்களுடன் கருத்து மோதலில் ஈடுபட்டு வந்தார்.
அதே நேரத்தில் மேற்கு வங்க முதல்வரையும், கேரள முதல்வரையும் சந்தித்து அங்குள்ள அரசியல் ஆட்சிமுறை குறித்து விவாதித்து வந்தார்.
அன்மையில் விஷால் மற்றும் ரஜினிகாந்தின் அரசியல் வாய்ஸ் நேரங்களில் மௌனம் காத்துவந்த கமல்ஹாசன் திடீரென தனது அரசியல் கட்சி தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:
வணக்கம். என்னை வளர்த்தெடுத்த என் சமூகத்துக்கு நிறைய நன்றி சொல்லியிருக்கிறேன். சொல்லில் சொன்ன நன்றியைத் தாண்டிய கடமைகள் நிறைய இருக்கின்றன.
அக்கடமைகளின் தொடக்கமாய் எம் மக்களை நேரில் சந்திக்கும் பயணத்தை நான் பிறந்த ராமநாதபுரத்திலிருந்து வருகிற ஃபெப்ரவரி 21 ஆம் தேதி என் கட்சியின் பெயரை அறிவித்து என் அரசியல் பயணத்தைத் துவங்க இருக்கிறேன்.
ஆரம்பக்கட்டச் சுற்றுப்பயணத்தில் மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட மக்களைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளேன். இது நீண்ட நாட்களாகத் திட்டமிட்டிருந்த பயணம். மக்களுடனான இந்தச் சந்திப்பு, புரட்சி முழக்கமோ, கவர்ச்சிக் கழகமோ அல்ல. என் புரிதல். எனக்கான கல்வி.
இதை மக்களோடு மக்களாக நின்று, தேசிய ஒருமைப்பாட்டுக்கு உதாரணமாக இருக்கும் ராமநாதபுரம் மண்ணில் பிப்ரவரி 21 ஆம் தேதி என் கட்சியின் பெயரை அறிவித்து என் அரசியல் பயணத்தை துவங்க இருக்கிறேன். 
இது என் நாடு. இதை நான் காப்பாற்ற வேண்டும் என்கிற எண்ணம் எனக்கு மாத்திரம் இருந்தால் போதாது. இங்கு தலைவன் என்பவன் வழிநடத்த மாத்திரமன்று. 
பின்பற்றவே தலைவன் இருக்கவேண்டும். பின்தொடர்வதற்கே ஒரு தலைமைப் பொறுப்பு இருக்கவேண்டும்.
நாமெல்லாம் சேர்ந்து இந்தத் தேரை இழுக்கிறோம் என்ற எண்ணம் வேண்டும். அதுவே ஜனநாயகம். அந்த நாயகர்களைச் சந்திக்கத்தான் நான் சென்று கொண்டிருக்கிறேன். 
'இது ஆட்சியைப் பிடிப்பதற்கானத் திட்டமா?' என்று கேட்பார்கள். ஆட்சியை ஒரு தனி ஆள் பிடிக்க முடியுமா? யாரின் ஆட்சி, யாரின் அரசு, குடியின் அரசு. அப்படியென்றால் முதலில் அவர்களை உயர்த்தவேண்டும். அதற்கான கடமைகளை நினைவுபடுத்தவேண்டும். அதைநோக்கிய பயணம்தான் இது. உங்களின் ஆதரவோடு இந்தப் பயணத்தை தொடங்குகிறேன். கரம் கோர்த்திடுங்கள். களத்தில் சந்திப்போம்'
இவ்வாறு அந்த அறிக்கையில் தனது அரசியல் பயணம் குறித்து தெளிவு படுத்தியுள்ளார்.

You'r reading பிப்ரவரி 21-ம் தேதி தனது அரசியல் கட்சியின் பெயரை அறிவிக்கிறார் கமல்ஹாசன். Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஜெ.தீபாவின் கார் ஓட்டுனர் ராஜா திடீர் கைது

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்