சூரிய மின்னாற்றல்: அரசின் எதிர்பார்ப்பு என்ன?

State expectation on Solar Power

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி முறையில் 2022ம் ஆண்டு 175 கிகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய அரசு முடிவெடுத்துள்ளதாகவும், அதில் சூரிய மின்னாற்றல் மூலம் 100 கிகாவாட்டும் காற்று மின்னாலைகள் மூலம் 60 கிகாவாட்டும் உற்பத்தி செய்யப்படும் என்றும் காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.நடராஜன் தெரிவித்துள்ளார்.

ஆற்றல் மாற்றத்திற்கான சூரிய மின்கலங்களின் செயல்திறனை மேம்படுத்துவதற்கான நானோ கட்டமைப்பை ஆராய்வது குறித்த பன்னாட்டு கருத்தரங்கம், ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய நாள்களில் அப்பல்கலைக்கழகத்தில் நடந்து வருகிறது. அதில் உரையாற்றும்போது உணவு, நீர், ஆற்றல், வாழ்வாதாரம், சமுதாய பாதுகாப்பு ஆகியவற்றில் தன்னிறைவு அடைவதை பொறுத்தே ஒரு நாட்டின் வளர்ச்சி அளவிடப்படுகிறது. அனல், அணு மற்றும் புதுப்பிக்கத்தக்கது என்று பல விதங்களில் ஆற்றல் உற்பத்தி செய்யப்படுகிறது. சூரிய ஒளி, நீர், காற்று ஆகியவை புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களாகும். ஆற்றலை உற்பத்தி செய்யும்போது சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்பட வேண்டும்.

நாடு விடுதலை பெற்ற 1947ம் ஆண்டு 854 மெகாவாட் அனல் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. தற்போது 2.3 லட்சம் மெகா வாட் மின்சாரம் அனல் மின்முறையில் உற்பத்தியாகிறது. 1,362 மெகாவாட் மின்சாரம் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்கள் மூலம் அப்போது உற்பத்தியானது. தற்போது 1.4 லட்சம் மெகாவாட் மின்சாரம் அவ்வகையில் தயாரிக்கப்படுகிறது. முன்பு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலத்தினால் உற்பத்தியாகும் மின்சாரம் யூனிட் என்னும் ஓரலகுக்கு 14 ரூபாய் என்ற விலையில் கிடைத்தது. தற்போது அது 6.5 ரூபாய்க்கு கிடைக்கிறது. இன்னும்கூட அதனை குறைக்க வேண்டும். ஆற்றலை மாற்றும் செயல்திறனை அதிகரித்தல், புதிய மற்றும் அந்தந்த பகுதிகளில் கிடைக்கக்கூடிய மூலங்களை பயன்படுத்துதல், குறைந்த செலவிலான உற்பத்தி செயல்முறைகளை கண்டறிதல், தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பெரிய அளவில் உற்பத்திய செய்தல் ஆகியவை அந்நோக்கத்தை நிறைவேற்றும்.

2022ம் ஆண்டு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் முறையில் 175 கிகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய அரசு முடிவெடுத்துள்ளது. அதில் 100 கிகாவாட் சூரிய மின்னாற்றலாகவும் 60 கிகாவாட் காற்றாலை மூலமானதாகவும் இருக்கும் என்று எஸ்.நடராஜன் கூறியுள்ளார்.
முன்னேற்றத்தில் ஆற்றல் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய இரண்டும் உலகிற்கு சவாலானவை. புதுப்பிக்கக்தக்க ஆற்றலை அதிகரிப்பது எதிர்காலத்திற்கு முக்கியமான ஒன்று. இம்முயற்சியில் வெற்றி பெற கூட்டு பங்களிப்பு அவசியம் என்று பெங்களூருவிலுள்ள இந்திய அறிவியல் கழத்தின் கரிம வேதியியல் துறையின் கௌரவ பேராசிரியர் எஸ். சந்திரசேகரன் தமது உரையில் குறிப்பிட்டார்.

காந்திகிராம நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறை ஏற்பாடு செய்துள்ள இக்கருத்தரங்கில் தேசிய இயற்பியல் ஆய்வுகூடத்தின் முன்னாள் தலைவர் பகவான்நாராயணா, நார்வே நாட்டின் பேராசிரியர் ஸ்மாகுல், ஜெர்மனி பேராசிரியர் கெவின் பெத்கே உள்ளிட்ட பல அறிஞர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

You'r reading சூரிய மின்னாற்றல்: அரசின் எதிர்பார்ப்பு என்ன? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பதவி இழந்தார் இரா. சம்பந்தன் – எதிர்க்கட்சித் தலைவராக மகிந்த ராஜபக்ச!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்