ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணி.. 4வது நாளாக நீடிப்பதால் சோகம்..

trichy child Rescue operations continues for 4th day

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித்தை மீட்பதற்கு குழி தோண்டிய ரிக் இயந்திரம் பழுதடைந்தது. 2வது இயந்திரம் மூலம் மீண்டும் குழி தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. 4வது நாளாக மீட்பு பணி நீடிப்பது மக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த பிரிட்டோ, கலாமேரி ஆகியோரின் 2 வயது குழந்தை சுர்ஜித்வில்சன் கடந்த 25ம் தேதி மாலையில் வீட்டுக்கு வெளியே உள்ள நிலத்தில் உள்ள விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது 300 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டான். அந்த ஆழ்துளை கிணறு தோண்டிய போது தண்ணீர் வராததால், அதை மேல்மட்டத்தில் மட்டும் மண்ணை கொட்டி மூடியிருந்தனர். கடந்த சில நாட்களாக பெய்த மழையால், ஆழ்துளை கிணறு மேல் கொட்டியிருந்த மண்சரிந்து உள்ளே விழுந்திருக்கிறது. அதனால், ஆழ்துளை கிணறு மீண்டும் திறந்து விட்டது. இதனால்தான், அந்த குழந்தை அதன் மீது ஓடும் போது உள்ளே விழுந்து விட்டான்.

குழந்தையை மீட்கும் பணியில் போலீசார், தீயணைப்பு துறையினர், தேசிய பேரிடர் மீட்பு படையினர் என்று வரிசையாக வந்து 25ம் தேதி மாலை முதல் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், குழந்தைக்கு மூச்சுத்திணறாமல் இருக்க ஆழ்துளை கிணற்றுக்குள் தொடர்ந்து ஆக்சிஜன் செலுத்தப்பட்டது. மேலும் அந்த குழிக்குள் கண்காணிப்பு கேமரா பொருத்தி, குழந்தையை கண்காணித்தனர். குழந்தை சுவாசிப்பது அவ்வப்போது உறுதி செய்யப்பட்டது. மறு நாள் காலை வரை குழந்தையின் சுவாசம் தெரிந்தது. அதன்பிறகு, ஆழ்துளை கிணற்றுக்குள் மண் சரிந்ததால், குழந்தை திடீரென கீழே இறங்கினான். குழந்தையை மீட்க முதலில் ஒரு கயிற்றின் முனையில் சுருக்கு போட்டு உள்ளே நுழைத்து குழந்தையின் ஒரு கையில் மாட்டினர். இதே போல், அடுத்த கையில் மாட்டும் போது அந்த சுருக்கு கழன்று விட்டது. குழந்தை ஆழ்துளை கிணற்றில் விழுந்த போது 30 அடி ஆழத்தில்தான் இருந்தது. ஆனால், அதன்பிறகு 70 அடிக்கும் கீழே இறங்கி விட்டான். இதனால் மீட்புப் பணி கடும் சவாலாக மாறி விட்டது.

இதன்பின்னர், ரிக் இயந்திரம் கொண்டு வரப்பட்டு, ஆழ்துளை கிணறுக்கு ஒரு மீட்டர் அருகே குழி தோண்டப்பட்டது. மூன்று நாளாகியும் குழந்தை மீட்கப்படாததால், தமிழகம் முழுவதும் உள்ள மக்கள் தீபாவளியன்று செய்தி சேனல்களையே பார்த்து கொண்டிருந்தனர். எப்போது குழந்தை மீட்கப்படுமோ என்று அவர்கள் சோகமாக இருந்தனர். இதனால், தீபாவளியே சோகமயமாகி விட்டது.

இந்நிலையில், ரிக் இயந்திரம் 30 அடிக்கு குழி தோண்டப்பட்ட நிலையில் இயந்திரம் பழுதடைந்தது, இதனால், 2வது இயந்திரம் கொண்டு வரப்பட்டு, ஆழ்துளை அருகே 3 மீட்டர் தூரத்தில் ஒரு மீட்டர் அகலத்தில் 2வது குழி தோண்டப்பட்டு வருகிறது. இன்று(அக்.28) காலை 4 மணியளவில் 2வது இயந்திரத்திலும் பழுது ஏற்பட்டது. வெல்டிங் மூலம் பழுது சரி செய்யப்பட்டு, மீண்டும் துளையிடும் பணி துவங்கியது. அந்த இடத்தில் பூமிக்கடியில் பாறையாக இருப்பதால், துளையிடும் பணி துரிதமாக நடைபெற முடியவில்லை. காலை வரை 30 அடி மட்டுமே தோண்டப்பட்டுள்ளதாக தெரிகிறது. குழந்தை 88வது அடியில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், தொடர்ந்து 4வது நாளாக மீட்பு பணி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் அங்கேயே முகாமிட்டு மீட்பு பணியை பார்வையிட்டனர். தற்போது துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் வந்து பார்வையிட்டார்.

இதற்கிடையே, குழந்தை சுர்ஜித்தை உயிருடன் பத்திரமாக மீட்பதற்காக கோயில்கள், சர்ச்சுகள், மசூதிகள் மற்றும் பல இடங்களில் விசேஷ பிரார்த்தனைகள் நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி உள்பட பல அரசியல் தலைவர்களும், நடிகர் ரஜினிகாந்த், சத்யராஜ், விவேக் உள்பட திரையுலகினர் மற்றும் பல்வேறு துறை முக்கியப் பிரமுகர்களும் குழந்தை சுர்ஜித் பத்திரமாக மீட்கப்பட வேண்டுமென்று உருக்கமாக பேசியுள்ளனர்.

You'r reading ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணி.. 4வது நாளாக நீடிப்பதால் சோகம்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ராணுவத்தினருடன் தீபாவளி கொண்டாடினார் பிரதமர்.. காஷ்மீர் எல்லையில் வீரர்கள் உற்சாகம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்