சிக்கன நடவடிக்கை எதிரொலி: ஆடம்பர கார்களை ஏலம்விட்டது பாகிஸ்தான் அரசு

சிக்கன நடவடிக்கையால் பிரதமர் அலுவலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த சுமார் 70 ஆடம்பர கார்களை ஏலம்விட்டு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

பாகிஸ்தான் புதிய பிரதமராக இம்ரான்கான் சமீபத்தில் பதவி ஏற்று, பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகிறார். குறிப்பாக, கவர்னர் மாளிகை மற்றும் உயர் அதிகாரிகள் பங்களாக்களில் ஆடம்பர வசதிகள் ரத்து, பிரதமர், ஜனாதிபதி உள்பட அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும் விமானத்தில் முதல் வகுப்பு பயணம் ரத்து உள்பட பல்வேறு சிக்கன நடவடிக்கைகளிலும் இம்ரான்கான் ஈடுபட்டார்.

இதைதவிர, பிரதமர் இம்ரான் கான் அவருக்காக ஒதுக்கப்பட்ட பங்களாவில் தங்காமல் ராணுவ அதிகாரிக்கு ஒதுக்கப்பட்ட வீட்டில் தங்கியிருக்கிறார்.

அந்த வகையில், பிரதமர் பயன்படுத்தும் புல்லட் ப்ரூப் உள்பட ஆடம்பர கார்கள் மற்றும் அரசுக்கு சொந்தமான 102 சொகுசு வாகனங்கள் ஏலம் விடப்பட்டு, அந்த பணத்தை அரசு கருவூலத்தில் சேர்க்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, நேற்று முதற்கட்டமாக ஏலம் விடப்பட்டது. இதில், 8 புல்லட் புரூப் கார்கள், 4 மெர்சிடஸ் பென்ஸ் கார்கள் உள்ளிட்டவை மார்க்கெட் விலையைவிட கூடுதலாக ஏலம் விடப்பட்டுள்ளது.

இதைதவிர முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் ஆட்சியில் வாங்கப்பட்ட 4 ஹெலிகாப்டர்களும், 8 எருமை மாடுகளும் ஏலம்விடும் பட்டியலில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

You'r reading சிக்கன நடவடிக்கை எதிரொலி: ஆடம்பர கார்களை ஏலம்விட்டது பாகிஸ்தான் அரசு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - த்ரிஷாவின் புதிய பாய் பிரண்ட்... யார் தெரியுமா?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்