லட்சுமி விலாஸ் வங்கி : என்னதான் நடக்குது ? ஒரு முழு அலசல்

by Balaji, Nov 18, 2020, 17:59 PM IST

கொரானாவிற்கு அடுதகபடியாக பரபரப்பாக்கிப் போன விஷயம் லட்சுமி விலாஸ் வங்கி மீதான தடைதான். சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் லட்சுமி விலாஸ் வங்கியின், செயல்பாட்டுக்கு இந்திய நிதியமைச்சகம் பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.ஏற்கனவே கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் திணறும் லட்சுமி விலாஸ் வங்கிக்கு மத்திய நிதித்துறை திடீரென இயக்க தடை விதித்துள்ளது.

இந்த வங்கியில் இருந்து ஒரு வாடிக்கையாளர் அனைத்து கணக்குகளிலிருந்தும் 25000 ரூபாய்க்கு மேல் எடுக்க முடியாது என நிதியமைச்சகம் உத்தரவிட்டது. ரிசர்வ் வங்கியின் பரிந்துரையின் பேரில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.நவம்பர் 17 முதல் டிசம்பர் 16 வரையில் இவ்வங்கியின் நிர்வாக அதிகாரியாக கனரா வங்கியின் முன்னாள் தலைவர் டி என் . மனோகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக, அதிக அளவிலான வாராக்கடன் மற்றும் போதுமான நிதி வலிமை இல்லாதது போன்ற பல காரணங்களால் லட்சுமி விலாஸ் வங்கி ரொம்பவே பின் தங்கியிருந்தது.ஒரு வங்கியின் நிதி செயல்பாடுகளில் திருப்தி இல்லாத நிலையில், அதன் செயல்திறனை மேம்படுத்த, ரிசர்வ் வங்கி எடுக்கும் முக்கிய நடவடிக்கையே இந்த பிசிஏ நடவடிக்கை . எனினும் இந்த அதிரடி நடவடிக்கை டிசம்பர் 16 வரை அமலில் இருக்கும் என்பது ஒரு ஆறுதலான விஷயம். தடை குறித்த செய்திகள் வெளியானதும் இந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் பதறிப்போய் விட்டார்கள். முக்கிய நகரங்களில் பலர் பாஸ் புக்கை எடுத்துக் கொண்டு வந்து கணக்கை முடிங்கப்பா என்று குரல் கொடுத்தனர். சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட ஏராளமான கிளைகளில் வாடிக்கையாளர்கள் கொத்தாகக் குவிந்து விடவே போலீசார் வரவழைக்கப்பட்டுச் சமாளித்திருக்கிறார்கள்
எனினும் இவ்வங்கியில் டெபாசிட்டுகள் பாதுகாப்பாக உள்ளது.

வாடிக்கையாளர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். மோசமான நிலையில் இருந்து வங்கியினை மீட்டெடுக்கவே இந்த நடவடிக்கை என்றும் ரிசர்வ் வங்கி சொல்லியிருக்கிறது. அதுமட்டுமின்றி வங்கியின், நலன் கருதி சிங்கப்பூர் வங்கியான DBS வங்கியுடன் இணைக்கும் ஐடியாவையும் ரிசர்வ் வங்கி அறிவித்தது. வாடிக்கையாளர்களின் நலன் கருதியும், வங்கியின் எதிர்காலம் கருதியும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எனவே யாரும் அச்சப்பட வேண்டாம் என ரிசர்வ் வங்கி கூப்பாடு போட்டாலும் மக்கள் நம்பத் தயாராக இல்லை. இந்த பதற்றத்திலேயே இந்த வங்கியின் பங்குகளை வைத்துள்ள முதலீட்டாளர்கள் கிடைத்த வரை லாபம் என்று கருதி அதன் பங்குகளை உடனடியாக விற்க தொடங்கினர். இதனால் பங்கின் விலை 20 சதவீதம் குறைந்து லோவர் சர்க்யூட் ஆகியுள்ளது. தற்போது இந்த வங்கி பங்கின் விலை 12.40 ரூபாய். இதன் முகமதிப்பு 10 ரூபாய்தான்.

கடந்த ஆண்டு இறுதியில் இருந்தே இந்த வங்கி பங்கின் விலை பெரியளவில் மாற்றம் இல்லாமலேயே இருந்து வருகிறது. ஆக முதலீட்டாளர்களுக்கும் நஷ்டம் . ஒரு வேளை பங்கு மதிப்பு பூஜ்ஜியத்திற்கே சென்றாலும் வங்கிக்கு மேலும் சிக்கல் அதிகரிக்கும். ஏற்கனவே பெரும் நஷ்டத்தில் உள்ள வங்கிக்கு இது இன்னும் கடுமையான நிதி நெருக்கடியை ஏற்படுத்தும் .இதில் ஒரு நல்ல அம்சம் ரிசர்வ் வங்கி அறிவித்தது போல டிபிஎஸ் வங்கியுடன் இணைக்கப்படும்போது இவ்வங்கியின் பங்கு மதிப்பு இன்னும் உயர வாய்ப்புள்ளது.எனினும் தற்போது சிறிய அளவிலான முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம் தான்.கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக வாராக்கடன் அதிகரித்து வரும் நிலையில், இந்த வங்கி கடும் நிதிச்சுமையை எதிர்கொண்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த செப்டம்பர் 30ம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில், லட்சுமி விலாஸ் வங்கியின் இழப்பு 396 கோடி ரூபாயாக இருந்தது. இது கடந்த காலாண்டில் மட்டும் அல்ல, தொடர்ந்து பல காலாண்டுகளாக பெரும் நஷ்டத்தினையே இவ்வங்கி கண்டு வருகிறது.

இழப்பைச் சமாளிக்கும் வகையில், அதை வாங்கக் கூடிய ஒரு நிறுவனத்தை லக்ஷ்மி விலாஸ் வங்கி நிர்வாகம் தேடி வந்தது. ஆனால், பல மாதங்கள் கழிந்தும் அந்த முயற்சிக்குச் சரியான பலன் இல்லை. கடந்த ஆண்டில் இந்தியாபுல்ஸ் ஹவுசிங் ஃபைனான்ஸ் என்ற தனியார் வீட்டுவசதி நிறுவனத்துடன், வங்கியை இணைக்க லட்சுமி விலாஸ் நிர்வாகம் திட்டமிட்டது. து தொடர்பாக ரிசர்வ் வங்கியையும் அணுகியது . ஆனால் ரிசர்வ் வங்கி இந்த கோரிக்கையை நிராகரித்த விட்டது.பின்னர் , கிளிக்ஸ் கேப்பிடல் நிறுவனத்துடன் இணைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதுவும் யும் கைகொடுக்கவில்லை. இதற்கிடையே தற்போது சிங்கப்பூரின் மிகப்பெரிய வங்கியான டிபிஎஸ் (DBS)உடன் லட்சுமி விலாஸ் வங்கியை இணைக்கும் வரைவு திட்டத்தை ரிசர்வ் வங்கியே அறிவித்துள்ளது. ஒரு இந்திய வங்கியை வெளிநாட்டு வங்கியுடன் இணைக்க ரிசர்வ் வங்கி திட்டமிடுவது இதுவே முதல் முறை.

லட்சுமி விலாஸ் வங்கியில் இந்தியாபுல்ஸ் ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனம் 4.99 சதவீதம், பிஇ ஃபண்ட் ஜூப்பிட்டர் கேப்பிடல் நிறுவனம் 1.08 சதவீதம், ஸ்ரீ இன்ஃப்ரா ஃபைனான்ஸ் 3.34 சதவீதம், கேப்ரி குளோபல் ஹோல்டிங்ஸ் 3.82 சதவீதம், எல்ஐசி 1.62 சதவீதம் பொதுப்பிரிவின் கீழ் பங்குகளை வைத்துள்ளது.இது ஒரு புறமிருக்க வங்கி நிதித்துறை நிபுணர்கள் லட்சுமி விலாஸ் வங்கி டிபிஎஸ் வங்கியுடன் இணைவது என்பது முதலீட்டாளர்களுக்குச் சாதகமாக இருக்காது என்கிறார்கள். தற்போது லட்சுமி விலாஸ் வங்கியின் பங்குகள் சரிந்துள்ளது. ஆனால் முதலீட்டாளர்களுக்கு இந்த இணைப்பு கைகொடுக்காது. இனி இழப்பதற்குப் பெரிதும் ஒன்றுமில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

You'r reading லட்சுமி விலாஸ் வங்கி : என்னதான் நடக்குது ? ஒரு முழு அலசல் Originally posted on The Subeditor Tamil

More Chennai News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை