சொத்துக்காக 51 வயது பெண்ணை திருமணம் செய்து இரண்டே மாதத்தில் கொன்ற 28 வயது கணவன்

by Nishanth, Dec 27, 2020, 11:41 AM IST

சொத்துக்காக 51 வயது பெண்ணை திருமணம் செய்து இரண்டே மாதத்தில் கழுத்தை நெறித்தும், உடலில் மின்சாரத்தை பாய்ச்சியும் கொடூரமாக கொலை செய்த 28 வயது கணவனை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குமரி மாவட்ட எல்லையில் கேரளாவில் உள்ள காரக்கோணத்தில் நடந்துள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள நெய்யாற்றின்கரை பகுதியை சேர்ந்தவர் அருண் (28). இவர் அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். கன்னியாகுமரி மாவட்ட எல்லையிலுள்ள காரக்கோணம் என்ற இடத்தை சேர்ந்தவர் சாகா குமாரி (51). இவர் ஒரு தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அழகுக் கலை நிபுணராகவும் இருந்து வந்தார். சாகா குமாரிக்கு ஏராளமான சொத்துக்கள் உள்ளன. இவரது தந்தை கடந்த சில தினங்களுக்கு முன் இறந்துவிட்டார். வயதான தாயார் மட்டுமே உள்ளார். 50 வயதுக்கு மேல் ஆன போதிலும் இவர் திருமணம் செய்யாமல் இருந்து வந்தார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் அருண் பணிபுரிந்து வரும் மருத்துவமனைக்கு சென்ற சாகா குமாரிக்கு அவருடன் பழக்கம் ஏற்பட்டது. சாகா குமாரிக்கு ஏராளமான சொத்துக்கள் இருப்பதை அருண் புரிந்து கொண்டார். இதையடுத்து அவரை திருமணம் செய்து சொத்துக்களை அடைய அவர் திட்டமிட்டார். தொடர்ந்து சாகா குமாரிக்கு அவர் காதல் வலை வீசினார். இந்த திட்டம் அறியாத சாகா குமாரியும் அருணின் பொய்யான காதல் வலையில் விழுந்தார். அருணின் திட்டம் அறியாமல் சாகா குமாரி அவரை தீவிரமாக காதலித்து வந்தார். இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன் இருவரும் திருமணம் செய்ய தீர்மானித்தனர். ஆனால் இந்த விவரத்தை அருண் அவருடைய வீட்டில் யாரிடமும் தெரிவிக்கவில்லை. கடந்த இரு மாதங்களுக்கு முன் காரக்கோணத்தில் உள்ள ஒரு சர்ச்சில் இவர்களது திருமணம் நடந்தது. திருமணத்தின் போது அருணின் 5 நெருங்கிய நண்பர்கள் மட்டுமே வந்திருந்தனர்.

வேறு யாரும் வரவில்லை. சொத்துக்காக திருமணம் செய்ததால் இந்த விவரம் வெளியே தெரியக் கூடாது என்பதில் அருண் உறுதியாக இருந்தார். இதனால் திருமணத்தின் போது போட்டோ எடுப்பதைக் கூட அவர் தவிர்த்தார். திருமணத்திற்கு முன்பே சாகா குமாரி, அருணுக்கு ஏராளமான அளவில் பணம் கொடுத்து வந்தார். திருமணத்திற்கு பின்னரும் பணம் கேட்டு அவரை அருண் தொந்தரவு செய்து வந்துள்ளார். திருமணத்திற்குப் பின்னர் அருணின் பெயரில் அவர் ஒரு கார் வாங்கி கொடுத்தார். மேலும் வாடகை வீடு பார்ப்பதற்கும், வீட்டுக்கு தேவையான பொருட்களுக்கும் என பெருமளவு பணம் கொடுத்துள்ளார். திருமணத்திற்குப் பின்னர் காரக்கோணத்தில் உள்ள சாகா குமாரியின் வீட்டில் தான் அருண் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை பக்கத்து வீட்டுக்கு சென்ற அருண் தன்னுடைய மனைவி மின்சாரம் தாக்கி இறந்து விட்டதாக கூறியுள்ளார்.

இதையடுத்து பக்கத்து வீட்டினர் சென்று பார்த்தபோது சாகா குமாரி இறந்த நிலையில் கிடந்தார். ஆனால் அவரது முகத்தில் லேசான காயங்கள் இருந்ததும், தரையில் ரத்தக் கறையும் இருந்தது பக்கத்து வீட்டினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று அவரது உடலை மீட்டு காரக்கோணத்தில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் போலீசாரிடம் தெரிவித்ததை தொடர்ந்து அருணிடம் விசாரித்த போது அவர் தான் சாகா குமாரியை கொலை செய்தார் என தெரியவந்தது. சாகா குமாரியை கொன்று சொத்துக்களை அபகரிக்க இவர் திட்டமிட்டிருந்தார். சம்பவத்தன்று காலையில் மனைவியின் கழுத்தை நெறித்து பின்னர் அவரது உடலில் மின்சாரத்தை பாய்ச்சி உள்ளார். சிறிது நேரத்தில் சாகா குமாரி பரிதாபமாக இறந்தார். விசாரணைக்குப் பின் போலீசார் அருணை கைது செய்தனர்.

You'r reading சொத்துக்காக 51 வயது பெண்ணை திருமணம் செய்து இரண்டே மாதத்தில் கொன்ற 28 வயது கணவன் Originally posted on The Subeditor Tamil

More Crime News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை