ஆந்திர அதிர்ச்சி.. பெற்ற இரு மகள்களையும் நிர்வாண நிலையில் நரபலி கொடுத்த பேராசிரியர்!

by Sasitharan, Jan 25, 2021, 19:05 PM IST

ஆந்திராவில் பெற்றோரே தனது இரு மகள்களையும் நிர்வாண நிலையில் நரபலி கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளி சிவநகரில் வசித்து வரும் புருஷோத்தம் என்பது மகளிர் கல்லூரியில் துணை முதல்வராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பத்மஜா, தனியார் கல்வி நிறுவனத்தில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்த இந்த தம்பதியினருக்கு அலெக்கியா (27), சாய் திவ்யா (22) என்ற இரு மகள்கள் உள்ளனர்.

இத்தம்பதியினர் ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள் எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாக கடந்த சில மாதங்களாக வீட்டில் அற்புதங்கள் நடத்துவதாக இருவரும் பூஜைகள் நடத்தி வந்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் பூஜைகள் செய்து கொண்டிந்தபோது, முதலில் சாய் திவ்யாவையும் பின்னர் அலெக்கியாவும் உடற்பயிற்சி செய்யும் டம்பல்ஸ் மூலம் அவரது பெற்றோர் அடித்துக் கொன்றுள்ளனர். பின்னர் மகள்களை பூஜை அறையில் நிர்வாணமாக படுக்க வைத்து சிறப்பு பூஜை செய்துள்ளனர்.

இதற்கிடையே, புருஷோத்தம் வீட்டில் வந்த சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், விசாரணை நடத்திய போது, புருஷோத்தம், பத்மஜா இருவரும், நாங்கள் சிறப்பு பூஜை நடத்தி வருகிறோம். எங்களது 2 மகள்களையும் நரபலி கொடுத்துள்ளோம். ஒருநாள் பொறுத்திருங்கள். 2 மகள்களும் மீண்டும் உயிர்த்தெழுந்து விடுவார்கள்' என்று அதிர்ச்சி அளிக்கும் வகையில் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து பூஜை அறையில் நிர்வாண நிலையில் படுக்க வைத்திருந்த இரு மகள்களையும் மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பெற்ற பிள்ளைகளை நரபலி கொடுத்த புருஷோத்தம், பத்மஜா இருவரையும் கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். படிப்பறிவு இருந்தும் பக்தியில் மயங்கி பிள்ளைகளை நரபலி கொடுத்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

You'r reading ஆந்திர அதிர்ச்சி.. பெற்ற இரு மகள்களையும் நிர்வாண நிலையில் நரபலி கொடுத்த பேராசிரியர்! Originally posted on The Subeditor Tamil

More Crime News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை