சந்தேக நோயால் ஏற்பட்ட விபரீதம் மனைவியின் கழுத்தை அறுத்து கொன்ற கணவன் கைது

by Nishanth, Feb 21, 2021, 13:46 PM IST

சந்தேகத்தால் ஏற்பட்ட குடும்பத் தகராறில் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவன் கைது செய்யப்பட்டார். கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. கேரள மாநிலம் மலப்புரம் அருகே உள்ள எடக்கரை என்ற இடத்தைச் சேர்ந்தவர் அஷ்ரப் (33). இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. இவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனைவியை விவாகரத்து செய்த அஷ்ரப், கடந்த வருடம் அதே பகுதியை சேர்ந்த செலீனா (28) என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்தார்.

செலீனா மலப்புரத்தில் உள்ள ஒரு மகளிர் விடுதியில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் செலீனா மீது அஷ்ரப்புக்கு சந்தேகம் ஏற்பட்டது. அப்பகுதியை சேர்ந்த சில ஆண்களிடம் பேசுவது அவருக்கு பிடிக்கவில்லை. ஆண்கள் யாரிடமும் பேசக்கூடாது என்று அஷ்ரப், செலீனாவிடம் கூறியுள்ளார். ஆனால் அதை அவர் கண்டுகொள்ளவில்லை. இதனால் அடிக்கடி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்றும் வழக்கம் போல அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து செலீனா கோழிக்கோடு சென்று அங்கு ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கியிருந்தார்.

இந்நிலையில் நேற்றிரவு அந்த லாட்ஜுக்கு சென்ற அஷ்ரப், செலீனாவிடம் தகராறு செய்துள்ளார். அப்போது, தான் கொண்டு வந்த கத்தியை எடுத்து செலீனாவின் கழுத்தை அறுத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். சத்தத்தைக் கேட்டு அங்கு வந்த சிலர் ரத்த வெள்ளத்தில் கிடந்த செலீனாவை காப்பாற்றி கோழிக்கோடு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய அஷ்ரப்பை கைது செய்தனர்.

You'r reading சந்தேக நோயால் ஏற்பட்ட விபரீதம் மனைவியின் கழுத்தை அறுத்து கொன்ற கணவன் கைது Originally posted on The Subeditor Tamil

More Crime News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை