இப்போது வேண்டுமென்றாலும் நீங்கள் என்னை தேர்வு செய்யலாம் பிரபல நடிகையிடம் கிரிக்கெட் வீரர் கெஞ்சல்

by Nishanth, Feb 21, 2021, 13:07 PM IST

ஐபிஎல் ஏலம் முடிந்து விட்ட நிலையில், இப்போது வேண்டுமென்றாலும் என்னை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம் என்று பஞ்சாப் அணியின் உரிமையாளரும், பாலிவுட் நடிகையுமான பிரீத்தி ஜிந்தாவிடம் முன்னாள் இந்திய வீரர் ஸ்ரீசாந்த் டுவிட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னையில் கடந்த வாரம் ஐபிஎல் 14வது சீசனுக்கான ஏலம் நடந்து முடிந்து விட்டது. ஐபிஎல் வரலாற்றிலேயே முதன் முதலாக தென் ஆப்பிரிக்க வீரர் கிறிஸ் மோரிஸ் மிக அதிக தொகையான ₹ 16.25 கோடிக்கு ஏலம் போயுள்ளார். இவர் இதுவரை இருந்த யுவராஜ் சிங்கின் ₹ 16 கோடி என்ற சாதனையை முறியடித்துள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தான் இவரை இவ்வளவு அதிக தொகைக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. இவருக்கு அடுத்தபடியாக பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி நியூசிலாந்து வீரர் கைல் ஜாமிசனை ₹ 15 கோடிக்கும், இதே பெங்களூரு அணி ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல்லை ₹ 14.25 கோடிக்கும், பஞ்சாப் கிங்ஸ் அணி ஜை ரிச்சர்ட்சனை ₹ 14 கோடிக்கும் ஏலத்தில் எடுத்துள்ளது.

இந்திய வீரர்களில் கிருஷ்ணப்பா கவுதம் தான் மிக அதிக தொகைக்கு ஏலத்தில் போயுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இவரை ₹ 9.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக தமிழக வீரர் ஷாருக்கானை பஞ்சாப் கிங்ஸ் அணி ₹ 5.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. இந்த ஐபிஎல் போட்டியில் எப்படியாவது எந்த அணியாவது தன்னை விலைக்கு வாங்கும் என்று முன்னாள் இந்திய அணியின் பந்து வீச்சாளரும், ஐபிஎல் ஊழல் புகாரில் சிக்கி 7 ஆண்டு தடையில் இருந்தவருமான ஸ்ரீசாந்த் கருதினார். தடை நீங்கிய பின்னர் இவர் முஷ்டாக் அலி போட்டியிலும், விஜய் ஹசாரே போட்டியிலும் விளையாடி வருகிறார். ஐபிஎல் போட்டியிலும் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என அவர் கருதினார். ஆனால் வீரர்களுக்கான இறுதிப் பட்டியலில் அவரது பெயர் இடம் பெறவில்லை. இது ஸ்ரீசாந்துக்கு பெரும் ஏமாற்றத்தை தந்தது. இந்நிலையில் ஐபிஎல் ஏலத்திற்கு முன்பாக பஞ்சாப் அணியின் உரிமையாளரும், பாலிவுட் நடிகை பிரீத்தி ஜிந்தா தனது டுவிட்டரில், தான் ஐபிஎல் ஏலத்திற்கு செல்வதாகவும், பஞ்சாப் அணியில் யார் யார் இருக்க வேண்டும் என விடும்புபவர்கள் கருத்து தெரிவிக்கலாம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அந்த கமெண்டுக்கு கீழே ஸ்ரீசாந்த் என்று தன்னுடைய தன்னுடைய பெயரை ஸ்ரீசாந்த் குறிப்பிட்டிருந்தார். மேலும் 'வீரர்களுக்கான ஏல பட்டியலில் என்னுடைய பெயர் இல்லாததால் உங்களுக்கு வேறு அதிகமாக செலவு ஒன்றும் கிடையாது. ஆனாலும் என்னை நீங்கள் தேர்வு செய்யலாம்' என்று அவர் குறிப்பிட்டிருந்தார். ஸ்ரீசாந்தின் இந்த கமெண்ட் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. முதன் முதலாக ஸ்ரீசாந்த் 2008ல் பஞ்சாப் அணிக்காகத் தான் விளையாட தொடங்கினார். 2010 வரை அவர் அந்த அணியில் தொடர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் பின்னர் அவர் ராஜஸ்தான் அணிக்கு இடம்பெயர்ந்தார். அந்த அணிக்காக விளையாடிக் கொண்டிருந்த போது தான் ஊழல் புகாரில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டார்.

You'r reading இப்போது வேண்டுமென்றாலும் நீங்கள் என்னை தேர்வு செய்யலாம் பிரபல நடிகையிடம் கிரிக்கெட் வீரர் கெஞ்சல் Originally posted on The Subeditor Tamil

More Cricket News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை